Monday, August 15, 2016

நானேயோ தவம் செய்தேன் - 10


திருச்சானூர் பத்மாவதித்தாயார்

                                           அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர்  முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா  அடியேன் உன்னடிக்கீழர்ந்து புகுந்தேனே ( நம்மாழ்வார்)

இந்த ஸ்ரீவாரி சேவை தொடரின் நிறைவாக பத்மாவதித்தாயாரின் சேவையுடன் நிறைவு செய்யலாம் அன்பர்களே. பெருமாள் திருமலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த சம்பவம் அனைவரும் அறிந்ததுதானே. மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பதை அறிய பிருகு முனிவர்  புறப்பட்டு , பிரம்மலோகம், திருக்கயிலாயம் சென்று கோபத்துடன் ஸ்ரீவைகுண்டம் வந்த போது மஹா விஷ்ணு யோக நித்திரையில் முனிவரை வரவேற்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பிருகு முனிவர் மஹா விஷ்ணுவின் மார்பில் உதைக்கின்றார். மஹா விஷ்ணுவோ கோபம் கொள்ளாமல் முனிவரின் காலைப் பிடித்து மன்னிப்பு வேண்டுகின்றார்.  தன் செயலுக்கு வருந்திய முனிவர் இவரை வாழ்த்தி இவர்தான் மும்மூர்த்திகளில் சிறந்தவர் என்று  கூறிச்செல்கிறார். 


இராஜகோபுரம் 

தான் அகலகில்லேன் இறையும் என்றும் உறையும் திருமார்பை முனிவர் உதைத்ததால் மஹா லக்ஷ்மித்தாயார் கோபம் கொண்டு  ஸ்ரீவைகுண்டம் விடுத்து பூலோகம் வந்து பத்மசரோவரில் தவம் செய்ய ஆரம்பித்தார்.  பன்னிரண்டு வருட தவத்திற்குப்பிறகு கார்த்திகை மாத பஞ்சமியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில் தாயார் ஒரு குழந்தையாக தாமரை மலரில் தோன்றினாள்.

குழந்தை பாக்கியம் வேண்டி ஆகாசராஜன் நிலத்தை உழுத போது தாயார் தாமரை மலரில் அவருக்கு கிடைத்தார். ஆகாசராஜனும் பத்மாவதி என்னும் பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அதே சமயம் பெருமாளும்     திருமகளைத் தேடி திருமலைக்கு  வந்து ஒரு புற்றில் வாசம் செய்ய ஆரம்பித்தார். சிவனும் பிரம்மாவும் பசுவும் கன்றுமாக வந்து சோழராஜனிடம் சேர்ந்து மேய்ச்சலுக்கு வரும் சமயத்தில் பசு அந்த புற்றில் பாலை சொரிந்து கொண்டிருந்தது. 


சுந்தரவரதராஜர் விமானம் 


பசு சரியாக பால் தராததால் அதன் இடையன் பசுவை பின் தொடர்ந்து கவனித்து புற்றில் பால் சொரிவதை கண்டு தன் கோடாரியை  பசுவின் மேல் வீசினான். கோடாரி குறி தவறி புற்றின் உள்ளே இருக்கும் ஸ்ரீநிவாசனின் தலையில் பட்டு குருதி பெருகியது. காயம் பட்ட ஸ்ரீநிவாசன் வகுளாதேவி ( கிருஷ்ணாவதாரத்தில் யசோதை, கிருஷ்ணன் ருக்மணி திருக்கல்யாணத்தை காணமுடியவில்லை என்பதால் இந்த அவதாரத்தில் வகுளாதேவியாக அவதாரம் செய்தார்.)  ஆசிரமத்தை அடைந்து அவர் பராமப்பில் இருந்தார்.


தாயார் ஊஞ்சல் சேவை 


ஒரு சமயம் பூங்காவனத்தில் பூப்பறிக்க வந்த பத்மாவதியைக்கண்டு மையல் கொண்டு , வகுளாதேவி சென்று பெண் கேட்டு, குபேரனிடம் கடன் பெற்று பத்மாவதித்தாயாரைத் திருமணம் புரிந்தார்.திருமணம் ஆனபிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடை.யே ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர் என்று வரலாறு பேசப்படுகிறது .இந்த வரலாற்றினை உறுதிப்படுத்துவது போன்று இங்கு நடைபெறும் பூஜைகள் இன்றும் அமைந்துள்ளது.மலையில் வெங்கடேஸ்வரருக்கு வைகானஸ முறையில் பூஜை நடக்கும் போது இங்கு மலை அடிவாரத்தில் தேவிக்கு பாஞ்சராத்ர முறையில் பூஜை நடக்கிறது.

திருப்பதி திருமலையில் திருமால் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோயில் உள்ளது. பின்னர் இப்பகுதியை  ஆண்ட யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலைக் கட்டினர். அந்தக் கோயிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
பத்ம சரோவர் 

அடியோங்கள் திருச்சானூர் சென்ற போது மாலை நேரம் உற்சவர்  தாயார் ஊஞ்சல் சேவைக்காக கல்யாண மண்டபத்திற்காக எழுந்தருளிக் கொண்டிருந்தார் எனவே அடியோங்களும் தாயாருடன் சென்று ஊஞ்சல் சேவையை சேவிக்கும் பேறு பெற்றோம்.   பின்னர் தாயார் ஆலயம் திரும்பி வந்த பின் குங்குமார்ச்சனை டிக்கெட் பெற்றுக்கொண்டு சென்று தாயார் முன் சிறிது நேரம் அமர்ந்து  தாயாரை  திவ்யமாகச் சேவித்தோம். 

இவ்வாறாக ஸ்ரீவாரி சேவையின் போது  திருமலையப்பனை பல முறை சேவித்தோம்,  பௌர்ணமி கருட சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம்,  சகஸ்ரலங்கார தீபோற்சவம்,  அலமேலு மங்காபுரத்தில் தாயார் ஊஞ்சல் சேவை, குங்குமார்ச்சனை, சீனிவாச மங்காபுரத்தில் ஏகாந்த சேவை, பிரம்மோற்சவ புறப்பாடு சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. மேலும்   சுவாமி புஷ்கரணி, பாப விநாசம் ஆகாய கங்கையில்  தீர்த்தமாடும் பாக்கியமும் கிட்டியது. மேலும் என்ன வேண்டும்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் திருக்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே  
என்று குலசேகராழ்வார் வேண்டியது போல  நாமும் வேண்டி திருமலையப்பனிடம் சரணமடைவோம். 


ஸ்ரீவாரி சேவை அனுபவங்கள் நிறைவு பெற்றன. 

2 comments:

Test said...

வாழ்த்துக்கள் ஐயா,
தங்களுடன் நாங்களும் பயணித்த உணர்வை அளித்துள்ளது இந்த சேவை பதிவு.

S.Muruganandam said...

வாருங்கள் லோகநாதன் ஐயா. தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி.