Wednesday, July 27, 2016

நானேயோ தவம் செய்தேன் -6

ஸ்ரீவாரி மெட்டு 
ஸ்ரீவாரி சேவையின் நான்காம் நாள் அடியோங்களுக்கு அதிகாலை 5 மணி சேவை அளிக்கப்பட்டது. அதிகாலை முக்கியமானவர்களுக்கு (VIP Break Darshan) என்று ஒரு சேவை உள்ளது. இதில் தரிசனத்திற்கு செல்பவர்கள் துவாரபாலகர்களைத் தாண்டி அர்த்தமண்டபத்திற்குள் சென்று ஏழுமலையானை அருகில் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டுகின்றது. இந்த VIPகளில் மூன்று வரிசைகள் உள்ளன என்று அறிந்து கொண்டோம். ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் நன்கொடை தருபவர்கள், அரசின் உயரதிகாரிகள், நீதியரசர்கள் ஆகியோர் VIP-1 இவர்களுக்கு ஆரத்தி, தீர்த்தம், சடாரி உண்டு அதிக நேரம் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கின்றனர். VIP-2 தேவஸ்தான ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர், சில அரசு அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் இதில் அடங்குவர். இவர்களுக்கும் ஆரத்தி தரிசனம் உண்டு குழு குழுவாக அர்த்தமண்டபத்தில் அனுமதித்து ஆரத்தி காட்டி அனுப்புகின்றனர். VIP-3  பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் சிபாரிசுக்கடிதம் கொண்டுவருபவர்கள் அடங்குவர்.


வசந்த மண்டபம் 



இவர்கள் அனைவரும் தரிசனம் வேண்டும் நாளுக்கு முதல் நாளே திருமலை வந்து காலை 12 மணிக்கு முன்னரே சிபாரிசு கடிதத்தை அளிக்க வேண்டும், தரிசனம் பற்றிய அறிவிப்பு செல்போனில் வரும் பின்னர் ரூ.500/- செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும். பெருமாளை அருகில் சென்று ஆரத்தியுடன் தரிசிக்க இந்த VIP Break Darshan ஒரு அருமையான வாய்ப்பு.
அடியோங்கள் வரிசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போது ஒரு  பத்து லட்சத்திற்கு மேல் நன்கொடை அளித்த அன்பர் ஒருவருடைய நிரந்தர அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தோம் அதில் அவருடைய குடும்பத்தினரின் புகைப்பட்டத்துடன் வருடத்தில் ஒரு வாரம் திருமலையில் வந்து தங்கி திருவேங்கடவனை சேவிக்கும் சலுகை அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீவாரி மெட்டுப்படிகள்

ஹரி கிருஷ்ணன்  நடராஜன் 

இன்றைய தினம் அதிகாலையிலேயே சேவை முடிந்து விட்டதால் அன்றைய தினம் ஸ்ரீநிவாசமங்காபுரம் சென்று கல்யாண வெங்கடேஸ்வரரரின் ஏகாந்த சேவையை தரிசித்து விடலாம் என்று முடிவு செய்தோம். அப்போது திரு. ஆறுமுகம் ஐயா அவர்கள் “ஸ்ரீவாரி மெட்டு” எனப்படும் படிகளின் வழியாக இறங்கிச்செல்லலாம் அங்கிருந்து ஸ்ரீநிவாசமங்காபுரம் அருகில் உள்ளது வரும் பொழுது பேருந்தில் வந்து விடலாம் என்று கூறினார். அவ்வாறே சென்றோம்.  அந்த அனுபவத்தை இப்பதிவில் காணலாம் அன்பர்களே.
அலிப்பிரி மெட்டு பாதை 
திருமலைக்கு படியேறி வந்து எழுமலையானை சேவிக்க இரண்டு வழிகள் உள்ளன, முதலாவது அனைவரும் அறிந்த  அலிப்பிரி  மெட்டு.  கருடனின் பிரம்மாண்ட சிலை உள்ள அலிப்பிரியிலிருந்து  திருமலை வரையிலான 11 கி.மீ பாதை சுமார் 3550 படிகள் உள்ளன சுமார் 4 மணி நேரம் முதல்  6 மணி நேரம் ஆகும். இடையில் மலையேறி வருபவர்களுக்கு ஏழுமலையானை உடனே தரிசிக்கும் வகையில் அடையாளத்திற்காக  திவ்ய தரிசன டோக்கன் அளிக்கின்றனர். இப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றது.  அலிப்பிரி அடிவாரத்தில் ஸ்ரீவாரி பாதல மண்டபம் மற்றும் லக்ஷ்மி நாராயண சுவாமி ஆலயம் மற்றும் விநாயக சுவாமி ஆலயம் அலிப்பிரி அடிவாரத்தில் அமைந்துள்ளன.




இரண்டாவது வழி  ஸ்ரீவாரிமெட்டு எனப்படும் 8  கி.மீ பாதை தூரம் குறைவு என்பதால் இது சற்று செங்குத்தாக இருக்கின்றது எனவே மலையேறுவது சிறிது சிரமமாகத்தான் இருக்கும். மொத்தம் 2400 படிகள் உள்ளன, 2 மணி நேரம் முதல்  4 மணி நேரத்தில்  மலை ஏறலாம்.  முதலில் இவ்வழியாக வருபவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வசதி இல்லாமல்  இருந்தது இப்போது இவ்வழியிலும் டோக்கன் வழங்குகின்றனர்.  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தான் இவ்வழியாக மலையேற அனுமதிக்கின்றனர்  இரவில் மலையேறி வர அனுமதி இல்லை.  ஸ்ரீநிவாசமங்காபுரம் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ளது. ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் இருந்து தேவஸ்தானத்தின் இலவச பேருந்து  சேவை ஸ்ரீவாரி மெட்டு வரை  உள்ளது. ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் நமது மூட்டை முடிச்சுக்களை கொடுத்தி விட்டு மலையேறிய பிறகு பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
திருமலையப்பன் பத்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்த  பிறகு ஆறு மாத காலத்திற்கு மலையேறக்கூடாது என்பதால் அப்போதைய அகத்தியரின் ஆசிரமமான தற்போதைய ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் ஆறு மாதம் தங்கி பின்னர் இவ்வழியாக ஏறி திருமலையை அடைந்தார் என்பது ஐதீகம்.  அடியோங்கள் வசந்த மண்டபம் தாண்டி திருவேங்கடமுடையானும் பத்மாவதித்தாயாரும் மலையேறி வந்த  ஸ்ரீவாரி மெட்டில் இறங்கி அடிவாரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரரை வணங்கிவிட்டு பின் பேருந்து மூலமாக ஸ்ரீநிவாச மங்காபுரம் அடைந்தோம். இத்திருக்கோவிலின் ஏகாந்த சேவை அனுபவத்தை அடுத்தபதிவில் காணலாம் அன்பர்களே.

இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்


சேவை தொடரும் . . . . . . . 

Monday, July 18, 2016

நானேயோ தவம் செய்தேன் - 5




 இப்பதிவில்  மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பற்றி காணலாம். . சதா சர்வ காலமும் திருவேங்கடவனையே நினைந்து உருகி தன்னை அவருக்கே அர்ப்பணித்து அவரை தன் கணவனாக பாவித்து திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவர்.
தயிர்பானைக்கு தெலுங்கில் தரிகொண்டா என்று பெயர்.  ராய துர்க்க பகுதியின் மக்கள் ஒரு சமயம் பஞ்சத்தின் போது குடிபெயர்ந்து பிரத்தமிட்டா என்ற பகுதியில் தங்கிய போது லட்சுமி நரசம்மா  என்ற அந்தணப்பெண் தயிர் கடையும் போது அந்தப் பானையில் வந்து தோன்றினார் லட்சுமி நரசிம்மர். எனக்கு கோவில் கட்டி கும்பிடுங்கள் நல்லது நடக்கும்  என்ற அசரீரி கேட்டது. தங்களது கிராமத்தில் அவரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். எனவே கிராமத்தின் பெயரும் தரிகொண்டா ஆனது.
இக்கிராமத்தில் கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதிகளுக்கு திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் மகவு பிறந்தது. சிறு வயது முதலே திருவேங்கடவனையே தன் கணவனாக வரித்த வெங்கமாம்பா தனக்கு திருமணம் நடந்து இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருந்தாள். அந்த கணவர் நோய்வாய்பட்டு இறந்த போதும் தன் மங்கலச் சின்னங்களை  அகற்ற அவர் அனுமதிக்கவில்லை. அவரது உறுதியைக் கண்ட உறவினர்கள் அவரை தேவுடம்மா என்று வழிபட ஆரம்பித்தனர். வெங்கமாம்பா வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலைக்கு வந்து சேர்ந்தார்.  

                                                        மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா
இவர் ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். திருமலையையும், திருவேங்கடவனையும்   பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலை சிறந்த கவியாக  திகழ்ந்த மாத்ருஸ்ரீவெங்கமாம்பா தான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிவு செய்திருக்கின்றார்.
தன் உடல், பொருள்,  ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேங்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின் போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் ஏழுமலையானை  அவர் கண்டு மெய்மறந்தார்
அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியாலு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளித்தட்டில், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன.
தனது 87வது வயதில் தான் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாகத்திற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே தற்போது அன்னக்கூடம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் இவரது சிலையையும் அமைத்துள்ளனர். 
 ஸ்ரீவாரி சேவையின் போது ஒரு நாள் காலை வெங்கமாம்பாள் பிருந்தாவனத்திற்கு சென்று தரிசித்து விட்டு வந்தோம். 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

Saturday, July 16, 2016

நானேயோ தவம் செய்தேன் - 4

ஸ்ரீவாரி சேவா


பாபவிநாசம்  நீர் விழ்ச்சி

அடியோங்களின் ஸ்ரீவாரி சேவையின் மூன்றாம் நாள் காலையில் பாரக்கமணி சேவையே ஒதுக்கியிருந்தார்கள் அதை முடித்துவிட்டு அன்றைய தினம் திருப்பதி மலையில் உள்ள சில  தீர்த்தங்களுக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.
பொதுவாகவே திருவேங்கடவனை தரிசிக்க  அதிக நேரமாகின்றது என்பதால் பெரும்பாலனோர்  சுவாமி தரிசனம் செய்தவுடன் திரும்பிவிடுகின்றனர். அடியேனும் இது வரை வேறு எந்த இடமும் சென்று தரிசித்ததில்லை  இந்தத்தடவை அங்கேயே தங்கியிருக்கும் வாய்ப்புக்கிட்டியதால்  ஆகாச கங்கை, பாபவிநாசம், வேணு கோபாலர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வந்தோம். மதிய உணவிற்குப்பின் பேருந்தில் புறப்பட்டு சென்றோம். அவ்வழியாக செல்லும் பேருந்தில் முழு வழிக்கும் டிக்கெட் வாங்கி விட்டால்  வேண்டும் இடத்தில் இறங்கி பார்க்க வேண்டிய இடத்தில் இறங்கி பார்த்துவிட்டு  அதுத்து வரும் பேருந்தில் நம் விருப்பப்படி செல்லலாம் என்று கூறினார்கள்.
நடராஜன்-ஆறுமுகம்
முதலில் திருமலையில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் என்னவென்று பார்க்கலாமா?

1.        சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடம் என்பது ஐதீகம்,  இங்குதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு 6 நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகின்றன என்பது ஐதீகம்.

 'சுவாமி புஷ்கரணி ஸ்நானம், வராஹ வேங்கட தரிசனம், மஹாபிராசாத சுவீகாரம் த்ரையம் த்ரைலோக துர்லபம்...'மிகவும் புனிதமான சுவாமி புஷ்கரணியில் முதலில் நீராட வேண்டும். அதற்கு முன்பு, சுவாமிக்கு செலுத்தவேண்டிய காணிக்கை இருந்தால் தலைமுடி காணிக்கையாக செலுத்தி, சுவாமி புஷ்கரணியில் புனித நீராடிய பிறகு, புஷ்கரணி தீரத்தில் இருக்கும் ஆதிவராஹ சுவாமியை தரிசிக்க வேண்டும்.இந்த திருமலை ஷேத்திரத்திற்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்று பெயர்.

ஆதிகாலத்தில் திருமலையில் ஷேத்திராதிபதியாக வராஹ சுவாமி இருந்தார்.  மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவதாக வரும் வராஹ அவதாரத்தின் போது, சுவாமி இரண்யாட்கன் என்ற அரக்கனிடமிருந்து பூதேவியை காப்பாற்றி கடலிலிருந்து உத்தரித்த பூவராஹ சுவாமியாக பூதேவியுடன் சுவாமி புஷ்கரணி தீரத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருவேங்கடமுடையான் வைகுண்டத்திலிருந்து அவதரித்து கலியுகாந்தம் பக்தர்களுக்காக இங்கு இருக்க விரும்பி, இது ஆதிவராஹ ஷேத்திரமாகையால், வராஹ சுவாமியிடம் இருக்க இடம் கேட்டு வந்ததாகவும், சுவாமி புஷ்கரணிக்கு தென்மேற்கு திசையில் வராஹ சுவாமி  திருவேங்கடவனுக்கு  இடம் கொடுத்ததாகவும், இப்பொழுது சுவாமி எழுந்தருளியிருக்கும் இடம்தான் அது என்றும் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. வராஹ சுவாமி திருவேங்கடவனுக்கு இடம் கொடுத்ததற்கு பதிலாக, வராஹ சுவாமிக்கு முதல் ஆராதனம், முதல் நிவேதனம் முதல் தரிசனமும் திருவேங்கடவன் அளித்திருக்கிறார். ஆகையால் பக்தர்கள் சுவாமி புஷ்கரணியில் நீராடி, வராஹ சுவாமியை தரிசித்து, பிறகு,  திருவேங்கடமுடையானை தரிசித்து,  சுவாமியினுடைய மஹாபிரசாதத்தை சுவீகரித்து திரும்பி செல்ல வேண்டியதே சரியான யாத்ரா கிரமமாக சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் இந்த யாத்ரா கிரமத்தை சரியாக அனுசரித்து முதலில் வராஹ சுவாமியை தரிசித்த பிறகு திருவேங்கடமுடையானை தரிசித்தால்  யாத்திரையின்  முழுபலன் கிட்டும்.

ஆறுமுகம், அடியேன், நடராஜன், நாகேஸ்வர் சிங்

2.  பாபவிநாசம்: மலையில் உள்ள இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்ற. எனவே அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது ஐதீகம்.   

3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தால் திருவேங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷம்.

4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.

5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.

 6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,

7, வைகுண்ட தீர்த்தம்,

8. ஜடாயு தீர்த்தம்,

9. குமாரதாரா தீர்த்தம்,

10. கோனேரி தீர்த்தம்,

11. சக்ர தீர்த்தம்,

12. வகுள தீர்த்தம்,

13. சேஷ தீர்த்தம்,

14. மொரதீர்த்தம்

என பதினான்கு வகை  முக்கிய  தீர்த்தங்கள் மலை மீது இருக்கின்றன. 



ஜாபாலி ஆஞ்சநேயர் ஆலயம்


ஆகாச கங்கை அம்மன் ஆலயம்


பாப நாசம் போகின்ற வழியில் முதலில் வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது இக்கோவிலை திரும்பி வரும் போது சேவித்துக்கொள்ளலாம் என்று ஜாபாலி ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்றோம். இவ்விடத்தில் ஜாபாலி முனிவர் தவம் செய்ததால் இப்பெயர். இங்கு ஆஞ்சநேயர் தவக்கோலத்தில் அருள் பாலிக்கின்றார். கோவிலுக்கு  இவ்வாலயத்திற்கு  செல்ல சுமார் 3 .கி.மீ நடந்து செல்ல வேண்டும். எதிரே ஜாபாலி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி ஜாபாலி ஆஞ்சநேயரை வணங்க பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவிணைகளும் நீங்கும், ஏழரைச்சனி நடப்பவர்களின் துன்பம் நீங்கும்.   செல்வதற்குள் ஆலயம் நடை சார்த்திவிடுவார்கள் என்பதால் இறங்காமல்  அப்படியே பாபவிநாசம்  சென்றோம்.

ஆகாச கங்கை தோரண வாயில்



ஆகாய கங்கை அருவி
திருவேங்கடவன் ஆலயம் 

அடுத்து ,பத்து நிமிட பயணத்தில், பாபநாசத்தை அடையலாம். பாபநாசம் () பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்புகின்றனர் அதனால்  இந்த இடத்திற்கு இந்தப் பெயர் . இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டுள்ள  அணையில் இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்கின்றது. அதனால திருமலையில் எங்கு நீராடினாலும் பாபவினாசத்தில் நீராடிய   புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரின் அன்னை அஞ்சனை தவம் செய்த இடம் . இங்கு செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளன்ர் அதில் அனைவரும் குளித்தோம். அருமையாக  வர்ணம் தீட்டபப்ட்ட சுதை சிற்பங்கள்  கண்ணுக்கு விருந்து. அருகிலேயே ஆகாச கங்கை அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. கங்கை அன்னையை வழிபட்டு பின்னர் ஆகாச கங்கைக்கு சென்றோம்.



தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடி திருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டு வந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார் .வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு, நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டு போகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகி விட்டான். நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள் கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார். அதற்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டு வர தொடங்கினார். அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யத்திற்காக கொண்டுவருகிறார்கள்சாலையில் இருந்து சிறிது படிகள் இறங்கி கீழே சென்றால் ஆகாச கங்கை நீர்விழ்ச்சியில் சென்று நீராடலாம். அருகில் வேடுவப் பிள்ளையாக வந்த வேகடவனுக்கு ஒரு சிறு ஆலயம் உள்ளது. அவனது கருணையை நினைந்து வணங்கினோம். 

வேணு கோபாலர் ஆலயம் 

ஹதிராம்ஜீ ஆலயம் 


அடுத்து வேணு கோபால சுவாமி ஆலயத்திற்கு சென்றோம். கிருஷ்ணரும், இராமரும் அருள் பாலிக்கின்றனர். நிறைவாக திருவேங்கடவன் வந்து தாயம்  ஆடிய இவருக்காகவே பெருமாள் யானையாக வந்து ஒரு இரவுக்குள் கரும்பு கட்டுகளை தின்ற் பக்தர் ஹதிராம்ஜி அவர்களின் ஆசிரமம் சென்று சேவா சதன் திரும்பினோம்.


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

Wednesday, July 13, 2016

நானேயோ தவம் செய்தேன் - 3


மின்விளக்கு ஒளியில் ஒளிரும்  இராஜகோபுரம் 



மலையப்ப சுவாமி கருட சேவை 




பின்னழகு 




அடியேன் 


ஸ்ரீவைகுண்ட வாழ்வளிக்கும்  கருட சேவை
திருக்கோவில்களில் பிரம்மோற்சவ காலங்களின் பெருமாள் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில், கோவிலுக்குள் வந்து வழிபட முடியாதவர்களான முதியவர்கள், முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் அளிக்கக்  கருணையால் தானே கோவிலுக்கு வெளியே திருவீதியில்  வந்துச் சேவை சாதிப்பார். இவ்வாறு பல்வேறு வாகனங்களில் சிறப்பான ஆபரண, மலர் அலங்காரங்களுடன் இறைவன் தானே வந்து சேவை சாதிப்பது  "வாகன சேவை" எனப்படும்.

மஹாவிஷ்ணு தனது வாகனமும் கொடியுமான கருடனில் இவ்வாறு ஊர்வலம் வந்து சேவை சாதிப்பது சிறப்பாக கருடசேவை”  எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானைக் கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு வைகுண்ட பேறு உண்டுமறு பிறவி கிடையாதுஎன்பது ஐதீகம். எனவே கருடசேவையைச் சேவிப்பது   மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது அது ஏன் அவ்வாறு என்பதன் உள்ளார்த்தத்தைக் காண்போமா?

தாஸஸ் ஸஹா வாஹந மாஸநம் த்வஜ:
யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய:  |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸ்ம்மர்த கிணாங்க  சோபினா ||

என்று ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்தினத்தில்போற்றியுள்ளபடி
1.    சேவை புரியும் அடிமையாக, எப்போதும் அவர் திருவடிகளைத் தாங்கி இருக்கின்ற பெரிய திருவடி,
2.    தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர்,
3.    பெருமாளுக்கு வாகனமாகவும் பிரகாசமான கொடியாகவும் விளங்குபவர்,
4.    எம்பெருமானின் சீரிய சிம்மாசனம் மேற்கூரை, கண்ணாடியாகவும் விளங்குபவர்,
5.    பெருமாள் ஏறிச்செல்லும் போது அவரது திருவடி நெருக்கத்தினால் உண்டான  தழும்பை  உடையவர்,
6.    பெருமாள் ஏறிச் செல்லும் போது அவருக்குச் சந்தோஷம் அளிக்கும் சாமரம் போன்று வீசும் இரு அழகிய சிறகுகளை உடையவர்,
7.    எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும்  அவரைக் கூட்டிச் செல்லக்  கை கட்டி தயார் நிலையில் நிற்பவர்.
8.    வேதங்களையே தன் அவயவங்களாகக் கொண்ட நிகரில்லாத கருடன். வேத சொரூபியாகவும் இருந்து வேதப் பரம்பொருளான பெருமானை  அடையாளம் காட்டுகின்றார்.
ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி   (பறவை) எம்பெருமான் யானைக்கு மோக்ஷம் கொடுக்கப் பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது.  இந்நிகழ்வை

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்
  முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்சுடரேய் சோதீ! என்ன நெஞ்சிடர்
  தீர்த்தருளிய என் நின்மலன் காண்மின்
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
  வந்து உந்தி வயல்கள் தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
  அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே. ( பெ. தி 78-3)
பொருள்: (காவிரி ஆறு) செய்ய மலையிலிருந்து சந்தன மரங்களையும், அகில் கட்டைகளையும், பொன்னையும், இரத்தினங்களையும் திரட்டிக் கொணர்ந்து தள்ளி வயல்களிலெல்லாம், நீர் பாயும் வழிகளிலே பாய்ந்து  செல்லும்படி அலை எறிந்து கொண்டு வரும். அதனால் செழிப்பு மிகப் பெற்ற சிறப்புடைய அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோன் யார் என்றால் நல்ல சாதியில் பிறந்த யானைகளின் தலைமையுடைய கஜேந்திராழ்வான் தடாகத்தில் இறங்கிய போது வலிமையை உடைய முதலையானது தன்னைப் பிடித்திழுத்ததால் அதற்கு அஞ்சி நின்று ஓளி விளங்கும் சந்திரனை ஒத்த குளிர்ந்த ஓளியை உடையவனே! கருணை என்று ஓலமிட்டுத் துதிக்க அதன் மனத்துன்பத்தை நீக்கியருளிய எமது குற்றமற்ற கடவுள் ஆவார்.   என்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்
தன்னுடைய தாய் மாற்றாந்தாயிடம் அடிமையாக இருப்பதைக்கண்டு மனம் பொறுக்க முடியாமல் அமிர்தம் கொண்டு வர இந்திரலோகம் சென்று பெருமாளுடனும் சண்டையிட்டு தன் வீரத்தையும்  மாத்ரு பக்தியையும்      (தாய்ப்பாசம்)  உணர்த்தியவன் கருடன். இவ்வாறு தாயைக் காத்த தனயன் கருடன். அமிர்தம் கொண்டு வரும் போது எம்பெருமானுக்கும் கருடனுக்கும் கடும் போர் ஏற்பட்டது இதில் கருடனுக்கே வெற்றி ஏற்பட்டது. கருடனின் வீரத்தை பகவான் மிகவும் புகழ்ந்து , 'நீயொரு வரம் கேள் கொடுக்கிறேன் என்றார்". கருடன் கேட்பதற்கு முன்பாகவே எம்பெருமானே, " நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும். அதே போல எனது கொடியில் எப்போதும் இருந்து கொண்டு வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்"  என்றார். எனவே கருட த்வஜனான எம்பெருமானுக்கு என்றும் தோல்வியே கிடையாது என்றும் கூறுவர்.

ஆகவே தான் பெருமாள் உவண கேதனன், உவண முயர்த்தோன்வெஞ்சிறை புள் உயர்த்தான், அரவப்பகை கொடியோன், கருடத்வஜன், கருட கமனன், ஆடும் கருளக்கொடியுடையான், வெற்றிக்கொடியுடையான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.

மேலும் புட் கொடியாய்!, ஊரும் புட்கொடியும் அஃதே, ஏறுஞ் இருஞ்சிறைப்புள் அதுவே கொடியாயுயர்த்தான், கொடியா புள்ளுடையான்!, ஆடும் புட்கொடி ஆதிமூர்த்தி,   சுருளக் கொடி யொன்றுடையீர்!, புள்ளூர் கொடியான், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான், சுருளப் புட்கொடி சக்கரப்படை வானநாடன், ஆடும் கருளக்கொடியான், புட்கொடியுடைய  கோமான், வெற்றிக்கருளக்கொடியான், கொடிப்புள் முன்னுயர்த்து பாற்கடல் துயின்ற பரமன், கொடி மன்னு புள்ளுடை அண்ணல், வெஞ்சிறைப்புள் உயர்த்தார், அருளாழிப்புள் கடவர், வலங்கொள் புள்ளுயர்த்தாய், கொடியா வடுபுள்ளுயர்த்த வடிவார் மாதவனார், ஆடற் பறவையுயர் கொடி எம்மாயன், பொன் புரை மேனி கருளக்கொடியுடை புண்ணியன், நிறை புகழ் அஞ்சிறைப்புள்ளின் கொடியான்கருட தாரணன் என்றெல்லாம் வைநதேயன் மஹா விஷ்ணுவின் கொடியாக விளங்கும் பாங்கை ஆழ்வார்கள் பலவாறு அனுபவித்துப்  பாடியுள்ளனர்.

நாமும் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜகருடக்கொடியானே கோவிந்தனே திருக்கண் மலர்ந்தருள்வாய்”  என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றோம். இனி எவ்வாறு கருடசேவையை காண்பது வைகுண்ட வாழ்வளிக்கும் என்பதைக் காணலாம்.

சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாகத் தூக்கி எறிவார்கள். இது ஜீவாத்மாவின் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவை அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு அது தூய்மையாவதைக் குறிக்கின்றது.

எனவே கருடசேவையைக் காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும் (நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும். முக்திக்கு வழி பிறக்கும் எனவேதான் பெருமாளின் கருடசேவையைக் காண்பதால் வைகுண்ட வாழ்வளிக்கும் என்பது ஒரு ஐதீகம்.

மோக்ஷப் பேறு என்பதற்கான இன்னொரு விளக்கம். வேதங்கள் தொலைந்த போது அதை மீட்டெடுத்துக் கொடுத்தவர் எம்பெருமான், ஏனென்றால் வேதங்கள் அவரே பரம்பொருள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கருடன்  அந்த வேத மயமானவன், அதாவது "வேதஸ்வரூபன்". எனவே ஸ்ரீஆளவந்தார் வேதாத்மா விஹகேஸ்வர:அதாவது கருடன் வேதாத்மா  என்று போற்றுகின்றார். விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதி.

முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
ஸூபர்ணோஸி கருத்மாந்த்ரி வ்ருத்தேசிரோ
காயத்ரம் சஷீஸ் ஸ்தோம ஆத்மாஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
ஸ்ரீவைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. ஸ்தோமம்என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது.  த்ரிவ்ருத்”  என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது.  யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். த்ஷ்ண்யம்என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால்  பாதங்களாகின்றன.  வாமதேவ்யம்என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்”  என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன.  யஜ்ஞாயஜ்ஞியம்என்ற  சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருவரங்கத்து மாலையில் ஒரு பாடலில் இதே கருத்து கூறப்பட்டுள்ளது. 
சிரம் சேதனன் விழி, தேகம், சிறை, பின்சினை, பதம், கந்-
தரம், தோள்கள், ஊரு, வடிவம், பெயர், எசுர் சாமமும் ஆம்
பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி, அருள்
சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே. ( தி.மா 88)
தம் அடியார்களுக்கு இருக்கும் தீவினைகளை அழித்துக் கருணை பொழிந்து அருளும் அரங்கருடைய வாகனம் ஆன சுபர்ணன் எனப்படும் கருடனுக்கு தலை, உயிர், கண்கள், திருமேனி, சிறகுகள், பின்புறம், கழுத்து, தோள்கள், தொடை, உருவம், திருநாமம், ஆகிய யாவும் யஜுர் வேதமும், சாமவேதமும் ஆகும்.

இப்படி வேதஸ்வரூபனான பொன் மலையான  கருடனில் பச்சைப் புயலென பெருமாள் வரும்போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருடசேவையைப் பார்த்தால் வைகுண்ட வாழ்வளிக்கும் என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.

இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும் போது நாம் காண்பது என்ன? கருடன் வேத சொரூபி.  எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருடசேவை தந்து எழுந்தருளும் போது  "மறை போற்றும் இறை"  இவனே என்றும்.  "மறைமுடி"  இவனே என்றும் காட்டித் தருகின்றது.  அதாவது வேதங்களால் போற்றப்படும் பரம் பொருள் இவன் தான் என்று காட்டித்தருகிறான் கருடன்.  அந்த வேதச் செழும்பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருடவாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

எனவே அடுத்த தடவை கருடசேவையைக் காணும் போது மும்மலம் நீக்கி. முக்தி தா பெருமாளே!என்று வேண்டிக் கொண்டு சேவியுங்கள். கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன்   பெருமாளை வேண்டினால் முக்தி நிச்சயம் என்பதை மனதில் கொள்ளவும்.

கருடசேவை மிக, மிக அரிதானது! காய்சினப்புள் - பெரிய திருவடியின் கருணைப் பார்வையிலும், காய்சின ஆழியின் பாதுகாப்பிலும், காய்சின வேந்தனின் வெது, வெதுப்பிலும் தங்கள் வினைகள் எல்லாம் அழிந்து வைகுண்டம்  பெறுவது உறுதி.

பாகவதனைப் பற்றிக் கொண்டால் பகவானை எளிதாக அடையலாம். ஆகவே நாம் கருடனை பற்றிக் கொண்டு பக்தி, ஞானம் என்ற இரண்டு சிறகுகளின் துணை கொண்டு அவன் தன் இரு கரங்களில் ஏந்தி இருக்கும் பத்தராவியை நித்திலத் தொத்தினை, திருமாலை அம்மானை, புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை  பெருமாளின் திருவடிகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்துவதே கருடசேவை. நமக்குப் பெருமாளைக் காட்டி தரும் ஆச்சாரியனாக இருந்து நாம் வைகுண்ட வாழ்வு பெறக் கருடாழ்வார் உதவுகின்றார்.

இவ்வாறு கருடனில் ஆரோகணித்து திருவுக்கும் திருவாகிய செல்வன்  வரும் அழகை  வேதம் தமிழ் செய்த மாறன்  நம்மாழ்வார் எவ்வாறு பாடுகின்றார் பாருங்கள்.
காய்சினப் பறவையூர்ந்து பொன் மலையின் மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலி மானென்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே! (திரு 9-2-7)
பொருள்: மேருமலையின் மேல் தங்கும் நீருண்ட கருத்த மேகம் போலே கோபம் கொண்டு தாக்கவல்ல கருடப்பறவையின் மீது ஏறி வந்து  நீ மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களையும் அழித்தாய். (காய்சின வேந்தன் என்னும் திருநாமம் பெற்றாய்). காய்சின வேந்தே! ஓளி மிகுந்த  திருமுடி உடையவனே! வளம் மிகுந்த  வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட  சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு, ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு காட்சி தரும்  நீ என் துயரத்தை  நீக்குபவன் அன்றோ! எனக்கு அருள் காட்டுவாயாக.  

கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார் முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம்.  எம்பெருமானும் கோபமாகச் சென்று தன் எதிரிகளை அழிப்பவன், தீ உமிழும் கோபச் சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்தி பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.

நீள்நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்கடலை
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூணார மார்வனை; புள் ஊரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல; கண்டாமே. (பெ.தி 11-7-1)
பொருள்: நீண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிறாகச் சுற்றிப் பெரிய மந்தர மலையை மத்தாக நாட்டி ஆழ்ந்த பாற்கடலை மதியாதவனாகிக் கடைந்து அமுதத்தை எடுத்து  தந்து திருவுள்ளம் உவந்த பெருமானும், ஆரங்களை அணிந்த திருமார்பை உடையவனும் பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற பொன் மலை போன்றவனுமான  பெருமாளை சேவிக்கப் பெறாதவர்களுடைய கண்களானவை ஒரு நாளும் கண்களே அல்ல, இதை நாம் நன்கறிவோம் என்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆழ்வார்கள் மட்டுமா? மால் மருகனைப் (முருகனை) பாடிய  அருணகிரி நாதரும் திருமாலை கருடாசனன் என்று   இவ்வாறெல்லாம் பாடுகின்றார்.
இரணியணை மார்பீறி வாகை புணை உவணபதி நெடியவன்;
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவணமூர்தி மாமாயன்;
நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்;
இரணியனது மார்பை வஜ்ர நகங்களால் பிளந்து வாகை சூடிய  கருடனின் தலைவன் நெடிய திருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாய் தனது திருத்தாளினால் விண்ணும் மண்ணும்  அளந்த மாமாயன்பாற்கடலில் நாகணையில் பள்ளி கொள்ளும்    திருமால் கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற பச்சைப்புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார். (சுபர்ணன் என்பதின் தமிழ்ப்பதம் உவணம்)  ஆகவே  கருடசேவையைப் பற்றிப் பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்குப் புரியும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட கருட சேவையை தாங்களும் நேரம் கிடைக்கும் போது கருடசேவையை கண்டு சேவியுங்கள். 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்







சேவை தொடரும் . . . . . . .