Monday, October 19, 2015

அன்னையின் நவராத்திரி - 7

ஏழாம்   நாள்  கொலு

முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,   மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந் தாம்நாள்,     ஆறாம் நாள்


கற்பகாம்பாள் ரிஷப வாகனத்தில் 
மஹேஸ்வரி கொலு 
அம்மனின் பின்னழகு 






சப்தமி நாளான இன்று அன்னை ஆதி பராசக்தியை மது கைடபரை சம்ஹாரம் செய்த மஹா துர்க்கையாக வழிபடுகின்றோம். இதனால் சத்ரு பயம், தீவினை, கெடுதிகள் விலகி இன்பம் உண்டாகும்.

                                                                    ****************  


   
நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம் ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திரு உருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*************************


காலராத்ரி துர்க்கா 

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலதாத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி , கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் ,காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். 

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் . 

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள். 


வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)

********************

மஹா வில்வத்தினால் அம்பாளுக்கு அர்ச்சனை 




ரோக நிவாரணி அஷ்டகம்


கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க் கையளே |

நாவுரை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே |
|
பூவுறை ஜோதி பூரணி ஜோதி
பூதநல் ஜோதி பூரணையே

ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (7)

****************


வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன் 
மஹேஸ்வரி அலங்காரம்




துக்க நிவாரணி அஷ்டகம்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
யென்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமதைத் தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய்வந்து
பழவிணை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (7)

********************



திருமயிலையில் நவராத்திரியின் ஏழாம் இரவு  மதுரை மீனாட்சியாக கொலு தர்பார் காட்சி அருள்கின்றாள். மலையத்துவஜன் புத்ரியாக மதுரையின் இராணியாக துள்ளிப் பாயும் வெள்ளைக் குதிரையில் அம்பாள் இன்று தரிசனம் தந்தருளுகின்றாள். 
************************

அபிராமி அம்மை பதிகம் -2

கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
    கலாமதியை நிகர் வதனமும்
கருணை பொழிவிழிகளும் விண்முகில்கள் வெளிரென
    காட்டிய கருங்கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம்
   தங்கு மணிமிடறும் மிக்க
சதுர்பெருகு துங்க பாசாங்குசமும் இலங்கு கர தலமும்
    விரல் அணியும் அரவும்
புங்கவற்கு அமுதருளும் மந்திர குசங்களும்
    பொலியும் நவமணி நூபுரம்
பூண்ட செஞ்சேவடியும் இவ்வடியேன் நிதம்
     போற்றி என வாழ்த்த விடை மேல்
மங்கள்அம் மிகுந்த நின்பதியினொடும் வந்து அருள் செய்!
    வளர்த்திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி! சிவசாமி மகிழ்
    வாமி! அபிராமி! உமையே! (1)

கங்கையையும் தும்பையும் தனது சடாபாரத்தில் தரித்த சிவபெருமான் அன்னையை கேசாதி பாத அழகைக் கண்டு வியக்கும்  வகையில் இப்பாடலை பாடியுள்ளார் அபிராமி பட்டர். அன்னையின் திருமுகம் பூரண சந்திரனை காந்தியுடன் திகழ்கின்றது. அவளுடைய மான் போன்ற கண்கள் கருணையை பொழிவதாக உள்ளனகருங்கூந்தலோ வானத்தில் உலவும் மேகங்களை வெண்மையானவையாக மாற்றிவிட்டனஅன்னையின் சங்கு மணி கழுத்தில்   மங்கலநாண்    ஒளிர்கின்றது அது அனைவருக்கும் மங்களத்தை வழங்குகின்றது. அன்னை தனது மேற்த்திருக்கரங்களில் அங்குசத்தையும், பாசத்தையும் ஏந்தியுள்ளாள். விரல்களில் நாகாபரணம் இலங்குகின்றது. தேவர்களுக்கு அமுதம் அருளும் மேருமலையையொத்த தனங்களுடன் அருள் பாலிக்கும்  அன்னையின் திருப்பாதங்களில் ஜொலிக்கும் நவமணிகள் பதித்த சிலம்புகள் பிரகாசிக்கின்றன.
அன்னையே உன்னுடைய இந்த அழகிய திருக்கோலத்துடன் அடியேன் நிதமும் வாழ்த்த ரிஷப  வாகனத்தின்  மீது உனது வலபாகத்தில் உறையும் நினது கணவர் சிவபெருமானுடன் வந்து அருள் புரிவாயாக! பொருள்: வளங்கள் மிகுந்த திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையேஎன்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.

சந்திர சடாதரி! முகுந்த சோதரி துங்க
      சலசலோசந மாதரீ
ஸம்ப்ரம பயோதரீ! சுமங்கலி! ஸுலக்ஷணி!
       சாற்றரும் கருணாகரீ!
அந்தரி! வராகி! சாம்பவி! அமலை! ஸுரதோத்ரி!
       ஆதி ஜலஜால ஸூத்ரி!
அகிலாத்ம காரணீ! விநோதசய நாரணி!
     சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! மலைராஜ
சுகுமாரி! கௌமாரிஉத்
      துங்க கல்யாணி! புஷ்பாஸ்த்ர அம்புஜ பாணி!
தொண்டர்கட் கருள் சர்வாணீ!
      வந்து அரிமலர்பிரமன் ஆதிதுதி வேதஒலி
வளர்த்திருக்கடவூரில் வாழ்   
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (2)

சந்திரனை ஜடையில் தரித்தவளே!, திருமாலுக்கு இளைய சகோதரியே!, தூய தாமரை போன்ற  திருவிழிகளை உடையவளே! காளியே! எக்காலத்தும் தந்தருளும் அமுதம் நிறை தனங்களையுடைய தாயே! மங்கள் வடிவானவளே! அனைத்து லட்சணங்களையும் கொண்ட அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத அபிராம வல்லியே! வார்த்தைகளால் விவரிக்க முடியாத கருணையின் வடிவானவளே! அனைத்திற்கும் ஆதாரமான துர்க்கையே! உலகம் உய்யும் பொருட்டு பன்றி ரூபத்தில் வந்தவளே! சிவபெருமானின் நாயகியே! பார்வதியே! இன்பம் தருபவளே!, உலகை இயக்கும் மாயவித்தையின் சூத்ரதாரியே! உலக உயிர்களுக்கு காரணமானவளே! வெற்றி மிக்க நாரணியே! முழுமையான ஞான பூரணியே!, பேரழகுடையவளே! ஆதியும் அந்தமும் இல்லாமல் நிரந்தரமாய் விளங்குபவளே! அனைத்துயிர்களையும் காப்பவளே! மலையர்சனின் புதல்வியாக அவதரித்தவளே! என்றும் இளமையாக உள்ளவளேஅனைத்து மங்களங்களையும் வழங்கும் கல்யாணியே! தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்க்கணைகளை ஏந்தியவளே!, தொண்டகர்களுக்கு அருள் புரியும் சர்வேஸ்வரியே உன்னை  வணங்குகின்றோம்.

திருமாலும் பிரம்மனும் வந்து துதிக்கின்ற வேத ஒலி முழங்குகின்ற திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே! என்று அன்னையின் உருவ அமைப்பையும், பராக்கிரமத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தனிச்சிறப்பையும் உணர்த்துகின்ற பல நாமங்களைக் கூறு துதிக்கின்றார் அபிராமி பட்டர்

(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி பட்டரின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)




திருமயிலையில் திருகொள்ளம்பூதூரில் சம்பந்தருக்காக சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்.   




    அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: