Monday, October 26, 2015

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

இந்த வருடம் (2015) ஐப்பசி பௌர்ணமி இரண்டு நாள் இருப்பதால் இன்றே போக் சாலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது அந்த தரிசனத்தையும் மற்றும் அன்னாபிஷேகத்தின் சிறப்பு என்பதையும் இப்பதிவில் காணலாமா அன்பர்களே? 

அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமான் 


சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்,  ஐப்பசி பௌர்ணமி நாள்.

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
 பையுறு சீவனுக்கும்

மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லை நடனசபாபதிக்கு நித்யமும் அன்னாபிஷேகம் 


தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.  

இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் எம்பெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும் . 

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.  அவை என்ன என்று காணலாமா அன்பர்களே,

மாதம் -                    அபிஷேகப் பொருள் -             பலன்
சித்திரை  - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி  - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி  - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி  - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி  - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி  - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி - அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை  - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி  - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை  - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி  - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம்
பங்குனி  - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி.

திருமயிலை கபாலீசுரத்திலும், வடபழனி வேங்கீஸ்வரத்திலும்  மாதா மாதம் இதே கிரமம் திரவியங்கள் சிவபெருமானுக்கு  சார்த்தப்படுகின்றன. 
ஐப்பசி மாதம்  அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர் ஒரு  வருடம் கருமாரி அம்பாள்,  புற்றின் கீழ் காமதேனு வாகனத்தில் கற்பகாம்பிகையாக எழுந்தருளி அருள் பாலிக்கும் அருமையான சந்தனக் காப்பு அலங்காரம் செய்திருந்தனர். அம்மனை தரிசித்த உடன் அப்படியே மெய் சிலிர்த்தது.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷியம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, சென்னை திருமயிலை முண்டககண்ணியம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.



இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள்   போக் சாலை முத்து மார்ரியம்மன் ஆலயத்தின் அன்னாபிஷேக படங்கள் ஆகும்,  தில்லையில் இரத்ன சபாபதிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பதால் சிவகாம சுந்தரி சமேத   நடராஜர் சிலைகளையும் சந்தனத்தால் அருமையாக அமைத்த்திருந்தனர்.  இன்றும்  பல ஆலயங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
 அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
 கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்யலாம்.

நாளை (27.10.2015) பல ஆலயங்களில்  அன்னாபிஷேகம் நடைபெறுவதால் முடிந்த அன்பர்கள் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்து கோடி சிவ தரிசன பலன் பெறுமாறு வேண்டுகின்றேன்.




Thursday, October 22, 2015

விஜய தசமி


முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந்தாம்நாள்,     ஆறாம் நாள்,         ஏழாம் நாள்,                   எட்டாம் நாள் ,    ஒன்பதாம் நாள்



சென்னை காளி பாரி துர்கா பூஜை

இன்றைய தினம் விஜய தசமி, அன்னை துர்க்கை மகிஷாசூரனை வென்ற நாள். துர்கா பூஜையின் நிறை நாள் திருக்கயிலாயம் விட்டு பூலோகத்திற்கு வந்த தங்கள் மகள் ( மகளா?? இல்லை தாயை) மீண்டும் திருக்கயிலாயம் வழியனுப்புகின்றனர். பெண்கள் அனைவரும் அம்மன் உச்சியிலும் முகத்திலும் குங்குமம் இட்டுி, கன்னங்களில் சந்தனம் தடவி, இனிப்பு ஊட்டி, வெற்றிலையால் கண்ணேறு கழித்து, தாம்பூலம் கொடுத்து எப்படி தன் மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்களோ அது போல வழியனுப்புகின்றனர்.

******

கற்பகாம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் 


அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!


இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே!
மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
எங்களை காப்பாற்றுவாயாக.


விஜய தசமியான இன்று ஸ்ரீ துர்க்கையை துதிக்க துர்க்கா சப்த ஸ்லோகி மற்றும் துர்க்கா ஸுக்தம் உரையுடன்.


ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகீ


காமாக்ஷி அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் 

ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இனையாக கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் "கீதை", "விஷ்ணு சகஸ்ரநாமம்", "தேவி மஹாத்மியம்", "லலிதா ஸகஸ்ரநாமம்" இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ ஸ”மங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இகத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹிமையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாயா அருள் புரியட்டும்.

கற்பகாம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் 


நாக ஜடையுடன் கற்பகாம்பாள் பின்னழகு 


ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா

பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)


ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)


ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.


சந்திர கௌரி அலங்காரம் 



ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே

சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)



எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே

ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)


தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாக உண்டாகும்.

ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே

பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5) 



அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.




ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா

ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்

த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்

த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி (6)


உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.





ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்(7)


எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே மூவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.




இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.


இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த "ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகியின்" பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

* * * * * *



முத்து மாரியம்மன் 
சரஸ்வதி அலங்காரம்

                                                      துர்கா ஸூக்தம்


ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி
(1)


அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேச்ஷு ஜுஷ்டாம்

துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)

செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா.

பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)

அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.


கற்பகாம்பாள் 
கம்பா நதி சிவபூஜை செய்யும் கோலம் 

விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-திபர்ஷி

அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)
ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.


ப்ருதநா ஜிதகும் ஸஹமாந-முக்ர-மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)

எதிரிகளின் சேனைகளை வெல்பதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.



பிரம்ம பத்னி அலங்காரம்

ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ
(6)

அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.

கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் (7)


இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்.

முத்து மாரியம்மன்
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அலங்காரம் 


ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.
*************

அபிராமி அம்மை பதிகம் -2


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழை இருந்தால்
சினம் கொண்டு அது ஓற் கணக்காக வையாது நின்
திருவுளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியும் நான் பாழ்வினையில் ஆழ்ந்து இன்னல்
படாது நல்வரம் அளித்துப்
பாதுகாத்து அருள் செய்ய வேண்டும்! அண்டாண்டவுயிர்
பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி
புரியும் பதாம் புயமலர்ப்
புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி!
புராணி! திரிபுவநேஸ்வரீ!
மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி! வராகி எழில்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (7)

பொருள்: அமிர்த்த்தினும் மிக்க இனிய மொழி பேசும் பைங்கிளியே! வராகியாய் வந்து உலகத்தை இரட்சிப்பவளே! அழகு மிகுந்த திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

அடிமையாகிய அடியேன் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறுகளை  எண்ணிக் கோபம் கொள்ளாமல் உன் திருவுள்ளம் இரங்கி அன்பு காட்டி வந்து இன்னமும் அடியேன் பாழும் வினைகளால் துன்பப்படாதபடி நல் வ்ரங்களைத் தந்து அடியேனை பாதுகாத்து அருள் செய்வாயாக!

இந்திரனும், பிரம்மனும், திருமாலும் துதிக்கும் தாமரைத் திருவடியை உடைய தெய்வப்பெண்ணே! திரிபுரங்களை அழித்த சிவசக்தியே! அகிலாண்டங்களையும் காத்து அருளும் புரந்தரியே! பர்வத ராசகுமாரியாய் தோன்றிய பார்வதியே! பழமையானவற்றிக்கும்  பழமையான ஆதிமூலமான தேவியே! மூவுலகங்களுக்கும் தலைவியே! அண்டங்கள் அனைத்திலும் வாழும் உயிர்களைப் பரிவுடன் காத்து அருளும் முதல்வியே! அடியேனைக் காத்து உனது திருவருளை வழங்குவாயாக.

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்தினுக்காக வேண்டினும்
மறந்தும்  ஓர்  பொய்ம்மொழி சொல்லாமலும் தீமையாம்
வழியினில் செல்லாமலும்
விஞ்சுநெஞ்சதனில் பொறாமை தரியாமலும்
வீண்வம்பு புரியாமலும்
மிக்கப் பெரியோர்கள் சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளி அவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது பதகஞ்சம் துதித்திடத்
தமியனுக்கு அருள் புரிந்து
சர்வ காலமும் எனைக் காத்து அருள வேண்டும்!
சலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரு வாவியாம் பல்மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (8)

பொருள்கயல் மீன்களைப் போன்ற கண்களையுடைய பெண்களின் சிவந்த வாயைப் போன்ற செம்மலர்கள் பலவும் ம்லரும் பொய்கைகள் நிறைந்த திருக்கடவூரில் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

வஞ்சகம் நிறைந்த கொடியவர்களின் நட்பை விரும்பாமல், மறந்தும் பொய் சொல்லாமலும், தீய வழியில் செல்லாமலும், உள்ளத்தில் பொறாமை கொள்ளாமலும், விண் வம்பு புரியாமலும், கற்றறிந்த பெரியோர்களின் அறிவுறைகளை ஒதுக்கித் தள்ளாமலும், கோபம் கொள்ளாமலும், உன் திருவடித் தாமரையே சரணம் என்று துதிக்கும் வண்ணம் இந்த திக்கற்றவனுக்கு அருள் புரிந்து எப்போதும் காத்தருள வேண்டும்.

மாந்தர்கள் கடைத்தேற சத்சங்கம் அவசியம், அது போலவே துஷ்டர்களின் சகவாசத்தை ஒதுக்கி தள்ள வேண்டியது அவசியம், அதற்கு அன்னைதான் அருள்புரிய வேண்டும் என்று இப்பாடலில் கூறுகின்றார் அபிராமி பட்டர்.

எனது இன்னல்  இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு
இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்
இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும்
எள் அளவும் முடியாது நின்
உன்னத மருவும் கடைக்கண்ணின் அருள்சிறிது செயின்
உதவாத நுண்மணல்களும்
ஓங்கு மாற்று உயர் சொர்ணமலையாகும்  அதுவன்றி
உயர் அகில புவனங்களைக்
கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறமும்
கவின் பெறச் செய்யும் நின்னைக்
கருதும் நல் அடியவருக்கு எளிவந்து ததியினில்
காத்து ரட்சித்து  ஓர்ந்து
வனசம் நிகர் நின் பாதம் நம்பினேன் வந்து அருள் செய்!
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (9)

வளங்கள் மிகுந்த திருக்கடவூரில் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!


என்னுடைய துன்பங்கள் இவை என்று ஒருவரிடமும் கூறி அவர்கள் அதைக் கேட்டு தீர்த்து மனமிரங்கி நன்மைகள் செய்வது என்பது எள்ள்ளவும் மூடியாது. உன் உயர்ந்த இனிய க்டைக்கண் அருட்பார்வை பட்டால் பயன்படாத நுண்ணீய மணல்துகள்கள் கூட உயர்ந்த பொன் மலைகளாகும். அதல்லாமல் அனைத்து புவனங்களையும் படைத்துக்காத்து முப்பத்திரண்டு அறங்களையும் அழகுறச் செய்யும் உன்னை தியானிக்கும் அடியவர்களுக்கு தக்க சமயத்தில் எளிதில் வந்து காத்தருளும் தகைமையை நினைத்து உன் தாமரைத் திருப்பாதங்களை நம்பினேன் அருள் புரிவாய்


கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட
கனதண்ட வெம்பாசமும்
கைக்கொண்டு சண்டமாகாலன் முன்னெதிர்க்க மார்க்
கண்டன் வெருண்டு நோக்க
அருநீலகண்டன் எனும் ~னின் பதியை உள்ளத்தில்
அன்பு கொண்டு அர்ச்சனை செய
அரனும் அவ்விலங்கம் பிளப்ப நின்னொடு தோன்றி
அவிர் செய்சூலத்தில் ஊன்றிப்
பெருநீலமலை என நிலத்தில் அன்னவன் விழப்
பிறங்குதாளால் உதைத்துப்
பேசுமுனிமைந்தனுக்கு அருள் செய்தது உனது அரிய
பேரருளின் வண்ணம் அலவோ?
வருநீல மடமாதர் விழிஅன்ன மலர்வாவி
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (10)

பெண்களின் கருநீலக் கண்களைப் போல மலர்ந்துள்ள மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்த திருக்கடவூரில் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

கருநீல எருமைக்கடா மீதேறி. அச்சம் தரும் கொடிய, பாசக்கயீற்றையும், தண்டத்தையும் கொண்டு வலிமை மிகுந்த காலன் தன் முன்னே வர, மார்க்கண்டன் அச்சம் கொண்டு, உன்னுடைய பதியாகிய சிவபெருமானை உள்ளத்தில் அன்புடன் அர்சிக்க, சிவன் அந்த லிங்கம் பிளக்க உன்னோடு தோன்றி, ஒளி மிகுந்த சூலத்தால் எமனைத் தாக்கி உனது காலால் எமனை உதைத்து மிருகண்டு முனிவரின் மைந்தனான மார்க்கண்டனுக்கு அருள் செய்த்து நின் பேரருளின் சிற்ப்பு அல்லவா அம்மா என்று வியந்து  பாடுகின்றார் அபிராமி பட்டர்.

சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச
தநயை! மாதேவி! நின்னை
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை, கல்வி, தனதானிய மெய்
அழகு புகழ் பெருமை  இளமை
அறிவு சந்தானம்  வலி துணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்ஊழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் நீ தந்தருளி
சுகாந்ந்த வாழ்வளிப்பாய்!
சுகிர்த குணசாலி, பரிபாலி! அநுகூலி! திரி
சூலி! மங்கள் விசாலி!
மகவு நான்; நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (11)

நலந்தரும் நற்குண செல்வியே! அனைத்தையும் பரிபாலிப்பவளே! அனைத்து உயிரகளுக்கும் நன்மை செய்பவளே! திரிசூலம் ஏந்தியவளே! மங்கலம் அளிப்பவளே! பெருமை மிகும் திருக்கடவூரில் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

சகல் செல்வங்களையும் அருளும் இமய மலையர்சன் செல்வியே! தினமும் உன்னை சத்தியமாய் உள்ளத்தில் நினைத்து துதிக்கும் உத்தமர்களுக்கு இரங்கி இப்பூவுலகில் நோயற்ற வாழ்வு, கல்வி, தனம், தான்யம், உண்மை, அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, நீண்ட ஆயுள், வெற்றி, நல்வினைகளின் அனுபவம் ஆகிய பதினாறு பேறுகளை அன்னையே நீ அருளுவாய்!
நான் உன் குழந்தை, நீ என் தாய்! எனவே எனக்கு அந்த பதினாறு பேருகளையும் தந்தருள்வாய் என்று அன்னையிடம் நமக்காக மன்றாடுகிறார்  அபிராமிபட்டர்.

அபிராமி பதிகம்-2 நிறைவுற்றது.




* * * * * * *