Sunday, December 22, 2013

திருவெம்பாவை # 14


திருச்சிற்றம்பலம்



காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!..........(14)


பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங்கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப்பாடி, அம்மறைப்பொருள ஆமாறு(-ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப்பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும்பாடி,(அவரது முழு முதன்மையையும்), முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்கலினும் நம்மை வேறுபடுத்துச் சிறப்புறவைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் ஆகியோரின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

எளிதில் உணரமுடியாத வேதப்பொருளான இறைவனே எளி வந்த கருணையினால் சோதி ரூபமாக, நடராஜரூபமாக காட்சி தருவதையும்,  சிவசக்தி ரூபமாக அருள் பாலிப்பதையும் கூறும் அருமையான பாடல்.

2 comments:

Anonymous said...

வணக்கம்

மிகச் சிறப்பாக உள்ளது வாழத்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

S.Muruganandam said...

மிக்க நன்றி ரூபன்.