Saturday, December 21, 2013

திருவெம்பாவை # 11


திருச்சிற்றம்பலம்



                                                               உத்தரகோச  மங்கை மரகத நடராசர்



மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழற் போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்!...........(11)




பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களை உடையவனே!

உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய மலையரசன் பொற்பாவை  உமையம்மையின் மணவாளனே!

ஐயனே!வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் "முகேர்"(முழுகீர்) என்று குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து , வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். ( சுனை நீராடுதல் இங்கே எம்பெருமானின் திருப் பாதங்களில் சரணடைவதைக் குறிக்கின்றது நாம் எல்லோரும் சென்றும் சரணடையும் தீர்த்தனாக எம்பெருமான் விளங்குகின்றான்.  )

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம்.எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!



திருச்சிற்றம்பலம்

No comments: