Thursday, June 20, 2013

.ஹிமாலய சுனாமி


இறைவா! ஏன் இந்த சோதனை?........................


உத்தரக்காண்ட் மற்றும் ஹிமாசல் பிரதேச மாநிலங்களில் காலத்திற்கு முன்னாலேயே பெய்த பெருமழையால் (ஹிமாலய சுனாமி) நதிகளில் வெள்ளப் பெருக்கு, சாலைகள், பாலங்கள், வீடுகள், கிராமங்கள் கூட  அனைத்தும் சேதமடைந்து விட்டன.

 பல இடங்களில் 60000திற்கும் மேற்பட்ட யாத்திரிகள் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு, உணவு, தண்ணீர் மருந்து எதுவும் இல்லை.

 எத்தனை உயிர்கள் போயின என்று யாருக்கும் தெரியவில்லை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள், நிலச் சரிவின்  காரணத்தில் ஏற்பட்ட சேற்றில் எத்தனை பேர் புதைபட்டிருக்கின்றனரோ  தெரியவில்லை. 

அநேகர் இதிலே இறைவனை தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றவர்கள் என்பதுதான் கொடுமை.

மாநில மத்திய அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மலைப் பிரதேசம், சாலைகள் அனைத்தும் பழுதடைந்து விட்டன, மழையும் பெய்து கொண்டிருக்கின்றது. 

தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் மனத்தை உருக்குகின்றன, ஆற்றின் கரையோரம் கட்டிய அடுக்கி மாடி வீடுகள் எல்லாம் எதோ மண் வீடு போல  வெள்ளத்தினால் அப்படியே சரிந்து விழுகின்றன, வண்டிகள் எல்லாம் தண்ணீரின் பிரவாகத்தில் அடித்து செல்லப்படுகின்றன.



கேதார்னாத் கோவிலை சுற்றி ஒன்றுமே இல்லை அனைத்தும் அடித்துச் செல்லபட்டுவிட்டன. சுற்றிலும் எல்லாம் அழிந்து விட கேதார்நாத் கோவில் மட்டும் எஞ்சியுள்ளது. தரிசனம் தொடங்க வருடங்கள் ஆகுமாம்   .


2010 வருடம் நாங்கள் 13 பேர் இவ்வாறுதான் ஒரு பெயர் தெரியாத குக்கிராமத்தில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டோம், ஆகவே பெயர் தெரியாத அத்துவானக் காட்டில் மாட்ட்க்கொள்வது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும்.

அது ஒரு பங்கு என்றால் இதுவோ நூறு மடங்கு.

ஆயினும் " இறைவா! உன் பக்தர்களை காக்க ஏன் தவறிவிட்டீர்" என்று கதறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.  

இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே  கூறியும் உள்ளனர், ஒரு நாளில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள இரு மலைகள் கீழே விழுந்து பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலுமாக அடைபட்டுவிடும் என்று புராணங்களிலேயே உள்ளது. 

இறந்த ஆத்மாக்கள் அந்த இறைவனடி சேர மோட்ச தீபம் ஏற்றுவோம். தங்கள் உறவினர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் அந்த இறைவன் அதைத் தாங்கும்  சக்தியை அளிக்கட்டும்.

இனி மேலும் இது போன்று ஒரு சம்பவம் நடக்காதிருக்க வேண்டுவோம் என்று அவனிடம் மன்றாடுவோம்.

படாதபாடு பட்டு மாட்டிக்கொண்டிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ, துணை ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள், அருமையான பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணீருடன்

அன்பன் கைலாஷி,

இதைப் படிப்பவர்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, June 1, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -46

ரிஷிகேஷ் நீலகண்ட மஹாதேவர் தரிசனம்

கங்கைக்கரையின் வியாஸ் கட்ட சிவன் சன்னதி 

மறு நாள் காலை எழுந்து மீண்டும் கங்கையில் புனித  நீராடினோம். வியாஸ் கட்டத்தில் ஆல மரத்தடியில் இருந்த சிவபெருமானுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து நன்றி கூறினோம்.முதல் வருடம் ரிஷிகேசை சுற்றிப் பார்த்தோம், இரண்டாம் வருடம் ஹரித்வாரை சுற்றிப் பார்த்தோ எனவே இந்த வருடம் ரிஷிகேசிற்கு அருகில் உள்ள நீலகண்டர் ஆலயம்  செல்ல திட்டமிட்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த மடத்தின் அருகிலேயே ஒரு இந்து பல்கலை கழகம் உள்ளது. பின்னர் பட் பட் மூலமாக லக்ஷ்மண் ஜூலா  பாலத்தை அடைந்தோம். அங்கு எங்களுடன் பட் பட்டில் பயணம் செய்த ஒருவர் இன்று சிவானந்த ஆசிரமத்தில் விசேஷம் வந்து தரிசியுங்கள் என்றார். அவராகவே குருநாதர் அழைக்கும் போது செல்லாமல் இருக்க முடியுமா?   ஆகவே முதலில் சிவானந்தர் ஆசிரமம் சென்றோம்



சிவானந்த சுவாமிகள் 125வது ஜெயந்தி விழா

திருநெல்வேலிக்கருகில் பத்தமடையில் பிறந்து, மருத்துவம் படித்து மலேசியா சென்று பணி புரிந்து, பின் ரிஷிகேசம் வந்து உலகம் முழுமைக்கும் யோகாவை கொண்டு சென்ற சிவானந்த குருவின் 125ம் ஜெயந்தி  விழா நடந்து கொண்டிருந்தது. அதில் நடந்த யாகத்தில் கலந்து கொண்டு ஆரத்தி கண்டு அவரது பிருந்தாவனத்தை வணங்கி விட்டு  பின் நீலகண்ட மஹாதேவர் ஆலயத்திற்கு புறப்பட்டோம்.





 ராம் ஜூலா பாலத்தை கடந்து அப்புறம் சென்றால் ஸ்வர்க்காஸ்ரமத்திற்கு அருகில் ஸ்ரீ நீலகண்ட் மஹாதேவ் ஆலயம் செல்லும் ஜீப் வண்டிகள் புறப்படும் இடம் உள்ளது. ஒரு ஜீப்பில் பத்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். போவதற்கும் வருவதற்குமாக ரூ 100/- முதலிலேயே வசூலித்துக் கொள்கின்றனர்.  சுமார் 30  கி. மீ மலையில் பயணம் செய்து நீலகண்டரை  தரிசனம் செய்யலாம். மேலும் 12 கி.மீ மலையேற்றப் பாதையும் உள்ளது. மணிகூடம், விஷ்ணு கூடம், பிரம்ம கூடம் என்று மூன்று சமவெளிகள், மற்றும் மதுமதி மற்றும் பங்கஜா ஆறுகளின் சங்கமத்தில் அடர்ந்த  காட்டின் இடையே சுமார் 1330 மீ உயரத்தில் சிவபெருமானுக்குரிய இந்த ஆலயம் அமைந்துள்ளது
 
வானவர் அமுதுண்ண தான் அமுதுண்ட நீலகண்டராக சிவலிங்க வடிவத்தில் தியாகராஜர் சிவபெருமான் இத்தலத்தில் வணங்கப்படுகின்றார். ஆடி மாதத்தில்( இவர்களுடைய சிரவண மாதம்) காவடி எடுக்க வரும் லக்ஷக் கணக்கான பக்தர்கள் முதலில் இவருக்கு கங்கை நீரை சமர்பித்த பிறகே தங்கள் ஊர்களுக்கு கங்கை தீர்த்தம் கொண்டு செல்கின்றனர். மாசி மாத மஹா சிவராத்திரியின் போதும், ஆடி மாத சிவராத்திரியின் போதும் இங்கு மேளா எனப்படும்  பெருவிழா நடைபெறுகின்றது.

ஜீப்பில் மலைப் பயணம் செய்து நீலகண்ட மஹாதேவர் ஆலயத்தை அடைந்தோம்அன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சரியான கூட்டம், சுமார் ஒரு கி. மீ தூரம் முன்பாகவே வண்டியை நிறுத்தி விட்டனர். கோவிலிலும் சரியான கூட்டம். ஆலய விமானம் நமது திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது புதுமையாக இருந்தது. மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலை தேவர்களும், அசுரர்களும்  கடையும் போது ஆலாலம் வெளிப்பட அதை பரம கருணா மூர்த்தியான சிவபெருமான் அருந்தி சகல ஜீவராசிகளையும் காப்பாற்றும் சுதை சிற்பம் பிரம்மாண்டமாக அற்புதமாக அமைத்துள்ளனர்.

 திராவிட பாணியில் அமைந்துள்ள
 நீலகண்ட மஹாதேவர் ஆலய விமானம்

பாற்கடலைக் கடையும் சுதை சிற்பம்

கூட்டம் அதிகமாகவே இருந்த்தனால் வரிசை மெதுவாகவே நகர்ந்த்து. மற்ற வடநாட்டு ஆலயங்கள் போல அருகே சென்று ஐயனைத் தொட்டு அபிஷேகம் செய்ய முடியவில்லை தூரத்திலேயே  தாரா பாத்திரம் அமைத்துள்ளனர் அதில் நாம் கங்கை நீரை ஊற்ற ஒரு குழாய் வழியாக அது பாய்ந்து அபிஷேகம் ஆகும்படி அமைத்துள்ளனர். பன்னீர் அபிஷேகம் செய்தோம். ஒரு நிமிடம்தான் தரிசனம் கிட்டுகின்றது. ஆலமுண்ட நீலகண்டரை அற்புதமாக தரிசனம் செய்து விட்டு ரிஷிகேஷ் திரும்பி வந்து ராம் ஜூலாவிலிருந்து லக்ஷ்மண் ஜூலா வரை ரிஷிகேஷ் நகரத்தின் பல்வேறு ஆலயங்களையும், ஆசிரமங்களையும் பார்த்துக்கொண்டே நடந்தோம்
லக்ஷ்மண் ஜூலா பாலத்தில் திரு.தேஷ்பாண்டே அவர்கள்


ராம் ஜூலா பாலம்

பின்னர் லக்ஷ்மண் ஜூலா அருகில் உள்ள சோட்டிவாலா என்னும் ஹோட்டலில் மதிய உணவருந்தினோம். சோட்டி என்றால் குடுமி. இந்த ஹோட்டலின் சின்னமாக (Mascot) குண்டாக பெரிய தொப்பையுடன், மொட்டையடித்த தலையுடன் உச்சிக் குடுமி வைத்து அமர்ந்திருக்கும் ஒருவர். இதைப் போன்று ஒருவரை ஹோட்டலின் முன்னர் அமர வைத்துள்ளனர்மிகவும் பழமையான அதே சமயம் தரமான உணவளிக்கும் ஹோட்டல்.

 ஹரித்வார் கங்கா ஆரத்தி

பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் ஹரித்வார் வந்து ருத்ராக்ஷம், ஸ்படிக மணி மாலைகள், அரக்கு வளையல்கள் ஆகியவை வாங்கிக்கொண்டு மாலை  உலகப் புகழ் பெற்ற  கங்கா ஆரத்தியும்  தரிசனம் செய்து விட்டு, வீட்டிற்கு கொண்டு செல்ல ஹரி-ஹா- பௌரியில் கங்கா தீர்த்தம் முகர்ந்து கொண்டு மிகவும் திருப்தியுடன் ரிஷிகேஷ் திரும்பி வந்தோம்.


குடுமிக்காரர்( சோட்டி வாலா)
 நடு மண்டையி்ல் செங்குத்தாக செல்லும் குடுமியைப் பாருங்கள்

மறு நாள் காலையும் இந்த யாத்திரையின் நிறைவாக கங்கையில் புனித நீராடி பின்னர் மடம் வந்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் வந்து டெல்லி செல்லும் விரைவு வண்டி பிடித்து  மதியம்மணியளவில் டெல்லி  ISBT பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பேருந்து மூலமாக விமான நிலயத்தை அடைந்தோம். பெங்களூர் செல்லும் திரு.தேஷ்பாண்டே அவர்களுக்கு அவர் அருமையாக யாத்திரைக்கு வேண்டிய னைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததற்காக நன்றி கூறி  விடை பெற்று Spicejet விமானம் மூலம் சென்னை வந்தடைந்தோம். இவ்வாறு இந்த மூன்றாம் வருட யாத்திரை நினைத்துப் பார்த்ததை விட அருமையாக நிறைவேறியது.        


ஒரு அன்பர் இந்த யாத்திரை அனுபவங்களை pdf  கோப்பாக மாற்றி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார், எனவே முதல் இரண்டு வருட அனுபவங்களை அவ்வாறு படங்களுடன் தொகுத்து வேண்டும் அன்பர்கள், பதிவிறக்கம் (download) செய்து கொள்ள வசதியாக அமைத்துள்ளேன் . விரும்பும் அன்பர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


 இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது வரை வந்து பதிவுகளை படித்த, பார்த்த, பின்னூட்டம் இட்ட, அறிவுரைகள் கூறிய அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி நன்றி.

ஜெய் பத்ரி விஷால் கீ!                                                     ஜெய் கேதார்நாத் ஜீ கீ!