Tuesday, December 31, 2013

உலகுக்குயிரானாய் பள்ளியெழுந்தருள்

 
திருசிற்றம்பலம் 

திருப்பள்ளியெழுச்சி # 9




விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்படியோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே........(9)





பொருள்: வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!

பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

Monday, December 30, 2013

பந்தணை விரலி பங்கா எழுந்தருள்

திருப்பள்ளியெழுச்சி # 8
 
திருசிற்றம்பலம் 






முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெ
ருந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!..........(8)





பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?


இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(குருந்த மரத்தடியில் குருவாய் ,  எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பாடலில்)

Sunday, December 29, 2013

உத்தரகோச மங்கைக்கரசே பள்ளியெழுந்தருள்

திருப்பள்ளியெழுச்சி # 7

திருசிற்றம்பலம்



அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!........(7)




பொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே!

பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

Saturday, December 28, 2013

அணங்கின் மணவாளா பள்ளியெழுந்தருள்

 
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 6



பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!........(6)






பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பதிகம்.

திருப்பெருந்துறை மன்னா பள்ளியெழுந்தருள்


திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 5




"பூதங்கள் தோறுநின் றாய்" எனின் அல்லால்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள்பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே! ............(5)







பொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே! எண்ணத்திற்க்கும் எட்டாதவனே!

உன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.

சிவபெருமானே! எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக!

Friday, December 27, 2013

இன்னருள் புரியும் அரசே பள்ளியெழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!.........(4)



பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

எம்பெருமானைத் தரிசிக்கத் திருப்பெருந்துறைக்கு வந்திருக்கும் தொண்டர் கூட்டத்தையும் அவர்களுடைய பரவசத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்:

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

இணையார் திருவடி காட்ட பள்ளியெழுந்தருள்


திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 3




கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!..........(3)






பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Thursday, December 26, 2013

அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்


திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 2






அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இவையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
..........(2)

அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்

பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!

கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.

அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

எருதுக்கொடியையும் எம்மையும் உடையவனே பள்ளி எழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 1




இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக எழுந்தருளி இருப்பவன், சகல வல்லமை கொண்டவன். அவர் உறங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை, ஆனால் மானிட இயல்பினால் நாம் அந்த இறைவனை இரவு திருப்பள்ளிப்படுத்துகின்றோம், அவர் உறங்குவதாக பாவித்து, பிறகு காலையில் அவரை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகின்றோம். ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் ஆயிரம் நாமம் பாடி வணங்குவதைப் போன்றதே இதுவும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணா  மூர்த்தி இறைவனின் கருணையை உணரச்செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல்.

 அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை,  குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளுயெழுச்சிப் பாடல்கள்.  மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய பதிகங்கள் இவை.

எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன.




திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது
(திரோதன சுத்தி)


போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றி தழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எம்மை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.........(1)





பொருள்:போற்றி! என் வாழ்விற்கு மூலப்பொருளே! சேற்றில் செந்தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானே! உயர்த்திய எருது கொடி உடையவனே! சிவபெருமானே போற்றி!

பொழுந்து விடிந்தது, உனது அழகிய மலர் போன்ற திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்கள் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள் புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி உன் திருவடிகளை வணங்குகிறோம். எம்மை தொண்டனாக ஆட்கொண்ட எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Wednesday, December 25, 2013

அடியேனது இரண்டாம் புத்தகம்


மிக்க நன்றி அன்பர்களே

அடியேன் இந்த வலைப்பூக்களில் பதிந்து வரும் செய்திகளை  தொகுத்து புத்தகமாக வெளியிடுகின்றேன்.  "திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்"  என்ற தலைப்பில் முதல் புத்தகம் வெளியானது.





 2007ம் ஆண்டில் முதலில் பதிப்பும்  பின்னர் 2011ம் ஆண்டில் இரண்டால் பதிப்பு வெளியிடப்பட்டது. 


தற்போது "சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்கள்"  என்ற  தலைப்பில் இரண்டாவது புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானுக்குரிய  அஷ்ட மஹா விரதங்கள்  எவை, அவற்றை எப்போது அனுஷ்டிக்க வேண்டும், எப்படி அனுஷ்டிக்கலாம். இந்த விரதங்களை ஒட்டி எந்தெந்த திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த கோவில்களின்  இதர சிறப்புகள்  மற்றும் அந்த  சிவசக்தி  தலங்களின் வரலாறு மற்றும் பதிகங்கள்,  ஸ்தோத்திரங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.




இந்நூல் விரதங்கள், திருவிழாக்கள்,மற்றும் திருக்கோவில்கள் என்று மூன்றும் கலந்த முக்கனியாக தித்திக்கின்றது. இப்புத்தகத்ததையும் பிரசுத்தவர்கள்  பிரேமா பிரசுத்தினர், கோடம்பாக்கம் சென்னை. 460 பக்கம் கொண்ட இந்த நூலில் பல அரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.  புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.comல்   மின்னஞ்சல் செய்யலாம்.  அடியேன் இது வரை வந்து அடியேனது பதிவுகளை படித்து  ஊக்கமளித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். 



திருவெம்பாவை # 20

 
திருசிற்றம்பலம் 




போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிக்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! ..........(20)


பொருள்: திருவெம்பாவையின் துவக்கத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி என்றருளிய மாணிக்க வாசகர், முடிவில் அப்பெருஞ்சோதி ஐந்தொழில் புரியும் பொருட்டு திருவுள்ளங் கொண்டருளும் பொருட்டு ஆதியாயிற்று. ஐந்தொழில் செய்து முடித்ததில் அந்தமாயிற்று. முதலும் முடிவும் முழுமுதற்பொருட்கு முதலும் முடிவும் நேர்கின்றன. ஐந்தொழில் புரிவதால் அத்தகைய ஆதியும் அந்தமும் எம்பெருமானது திருவடிகளே.


அந்த திருவடிகள் நம்மை காத்தருள்க. தோற்றம்(படைப்பு), போகம்(காப்பு),ஈறு(அழிப்பு), காணாமை(மறைப்பு), ஆட்கொண்டருளல்(அருளல்) என்னும் ஐந்தொழில்களும் அனைத்து உயிர்களுக்கும் பொது, ஐந்தொழில்களும் திருவடிகளே செய்யும். காணாமை அடி முடி தேடிய வரலாற்றால் குறிப்பித்தது உய்தல் எல்லாவுயிரொடும் எமக்கும் உரித்து.

முதல் ஏழு அடிகளிலும் திருவடிகள் காத்தல் வேண்டும் என்றபடி ஈற்றடியில் பொங்கு மடுவாக விளங்கும் தேவ தேவனின் திருவடிகளில் சேர வேண்டும் என்ற மார்கழி நீராடல் என்ற "தொல் வழக்கம்" கூறப்பட்டது.

(பாவை நோன்பின் நோக்கம் அந்த எம்பெருமானின் தாள் அணைவதற்கே என்பதை உணர்க)


நடராச பெருமானது உருவத்தில் தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊற்றும் மலர்பதத்தே உற்ற திரோதம், முத்தி நான்ற மலர் பதத்தே நாடு. இவ்வுண்மை விளக்குத் திருவெண்பாவிற் திருக்கரங்கள் முத்தொழிலுக்கு இடமாக கூறப்படினும், இத்திருவாசகம் உணர்த்தும் உண்மை திருவடிகளேயாகக் கொள்க. அருவம் அருவுருவம் உருவம் மூன்றும் கடந்த ஞான சொரூபத்தில் எவ்வுறுப்பும் ஞானபாவனையாகத்தாம் அமையும்; உண்மையில் உருவமில்லை. ஞானமே அம்பலம் ஆனந்தமே திருக்கூத்து

திருச்சிற்றம்பலம்


இத்துடன் திருவெம்பாவை நிறைவுற்றது இனி திருப்பள்ளியெழுச்சிப் பதிகங்களைக் காண்போம்.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

திருவெம்பாவை # 19

 
திருசிற்றம்பலம் 



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!..........(19)



பொருள்: எங்கள் பெருமானே! "உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்ற சொல் பழமையானது. அதை புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு தோன்றியுள்ளது. ( இம்மண்ணில் பிறந்த யாவரும் இறுதியில் எம்பெருமானின் திருவடிக்கமலங்களில் தான் சென்று சேர்கின்றனர், அதுவல்லாமல் மீண்டும் பிறவி வேண்டாம் என்பதை இவ்வாறு கூறுகின்றனர்)

குழந்தைகளின் துன்பத்தை நீக்கி இன்பத்தை கொடுப்பவள் தாய் தான். நாங்கள் குழந்தைகள் நீயே தாய். எங்கள் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும். அந்த விண்ணப்பத்தை கேட்டு அருள்!

எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த பணிகளையும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.

எங்கள் தலைவனாகிய தாங்கள் அடிமைகளாகிய எங்களுக்கு இந்த வண்ணம் அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?


( மனம், காயம், வாக்கு ஆகியவற்றால் செய்யும்   எல்லா செயல்களும் அந்த சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்னும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் பதிகம்)

(பாவை நோன்பின் நோக்கமான நல்ல கணவனை அடைய வேண்டும் என்பதைக் கூறும் பாடல் என்பாருமுண்டு. )


மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Tuesday, December 24, 2013

திருவெம்பாவை #18

 

திருசிற்றம்பலம் 



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(18)


பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

அண்ணாமலையார் மகிமை காண செல்லுங்கள் முதல் பதிகம்  http://thiruvempavai.blogspot.in/2007/12/1.html

திருவெம்பாவை #17

 

திருசிற்றம்பலம் 




செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலாதக்
கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமல பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(17)

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

Monday, December 23, 2013

புண்ணிய யாத்திரை மேற்கொண்டவர்கள் தமிழக அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தினமலர் நாளிதழில் வந்த செய்தி. 2013- 2014 நிதியாண்டில்  திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்ட  அன்பர்கள்  இந்த மானியத்திற்காக விண்ணப்பம் செய்யலாம்.

செய்தி சுட்டி இதோ:

http://temple.dinamalar.com/news_detail.php?id=25895

செய்தி இதோ:

புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!
டிசம்பர் 20,2013

அ-
+
Temple images
சென்னை: மானசரோவர், முக்திநாத் புனித தலங்களுக்கு சென்று வந்த, யாத்ரீகர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. இதில், பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்கிநாத் புனித தலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும், மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு புனித தலங்களுக்கும் சென்று வந்த, தலா, 250 பேருக்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அவற்றிலிருந்து குலுக்கல் முறையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18க்குள், விண்ணப்பிக்க வேண்டும். www.tnhrc e.org என்ற இணைய முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு ஆணைக்கான சுட்டி இதோ:

http://tnhrce.org/Maanasarovar.pdf


விண்ணப்பப் படிவத்திற்கான சுட்டி இதோ :

http://tnhrce.org/manosarover-tamil.pdf

முக்கிய அம்சங்கள்: 

1. தமிழகத்தை சார்ந்த இந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். வட்டாச்சாரியர் சான்றிதழ் தேவை.


2. 2013-2014 நிதியாண்டில் யாத்திரை செய்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 70 வயதுள்ளவர்கள் தகுதி உடையவர்கள்.

3. ஒரு மாதத்திற்குள்ளாக வேண்டிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. இரு யாத்திரைகளிலும்  250 யாத்திரிகளுக்கு மானியம் வழங்கப்படும்.  திருக்கயிலாய யாத்திரைக்கு ரூ. 40000/- மற்றும் முக்திநாத யாத்திரைக்கு ரூ. 10000/- மானியம் வழங்கப்படும்.

5. வருமானம் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 250 பேருக்கு மேல் இருந்தால் குலுக்கள் நடத்தப்படும்.

6. திருக்கயிலாய யாத்திரையில் அரசு யாத்திரை மூலமாக செல்பவர்களுக்கு முன்னுரிமை, நேபாள் வழியாக சென்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

7. திருக்கயிலாய யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, கட்டண சான்று நகல், கடவு சீட்டு நகல், விசா நகல் மற்றும் பயண அட்டையுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 

8. முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, பயண சீட்டு நகல், புகைப்படங்கள் -3   மற்றும் பயண  திட்ட நகலுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 



தகுதியுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.

திருவெம்பாவை #16

 

திருசிற்றம்பலம் 




முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!.........(16)

பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப்பரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

மழை குறையாமல் பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும், அதன் மூலம் உயிரினங்கள் வாழும் என்பதால் பாவை நோன்பின் போது மாதம் மும்மாரி பொழிய வேண்டுவது மரபு. இப்பாடல் மழை வேண்டி பாடும் பாடல்.   

( மழை கற்குறைய பெய்தல்)

திருவெம்பாவை # 15


திருச்சிற்றம்பலம்



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
ஓரொருகால் வாயோவான் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(15)


பொருள்:கச்சு உருவுமாறு அழகிய அணிகலன்களைப் பூண்ட முலையையுடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வணங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.

Sunday, December 22, 2013

திருவெம்பாவை # 14


திருச்சிற்றம்பலம்



காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!..........(14)


பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங்கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப்பாடி, அம்மறைப்பொருள ஆமாறு(-ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப்பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும்பாடி,(அவரது முழு முதன்மையையும்), முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்கலினும் நம்மை வேறுபடுத்துச் சிறப்புறவைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் ஆகியோரின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

எளிதில் உணரமுடியாத வேதப்பொருளான இறைவனே எளி வந்த கருணையினால் சோதி ரூபமாக, நடராஜரூபமாக காட்சி தருவதையும்,  சிவசக்தி ரூபமாக அருள் பாலிப்பதையும் கூறும் அருமையான பாடல்.

திருவெம்பாவை # 13

 
திருசிற்றம்பலம்  




பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். .....(13)


எம்பெருமானுக்கும், எம் பிராட்டிக்கும்( தனித் தனியாக) பொங்கு மடுவிற்கும் சிலேடை

1. பைங்குவளைக் கார்மலரால்:
கருமையான குவளை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பிராட்டி போன்று இசைந்த மடு.(குவளைக் கண்ணி கூறன் காண்க)

செங்கமலப் பைம்போதால்:
 செந்தாமரை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பெருமான் போன்று இசைந்த மடு.( செய்யான் காண்க)

2.அங்கங் குருகினத்தால்

அங்கம் - அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு.

அங்கு அம் - அவ்விடத்தில் அழகிய குருகு இனத்தால்- பறவைக் கூட்டத்தினால் பொங்கும் மடு.

அங்கு அங்கு உருகும் இனத்தால்: அன்பின் மிகுதியால் அங்கே அங்கே உருகும் தொண்டரினத்தால் எங்கோனும், எம்பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.


3. பின்னும அரவத்தால்: 

எம்பெருமான் திருமேனியில் அணிந்துள்ள பாம்புகள் பின்னுவதால் எம்பெருமான் போன்று இசைந்த பொங்கு மடு.

பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையால் பொங்கும் மடு.

4. தங்கண் மலம் கழுவார் வந்து சார்தலினால்:

தங்களுடைய உடம்பு அழுக்கை(மலம்) கழுவ வந்து சேர்பவர்களினால் இசைந்த பொங்கு மடு.

தங்களுடைய ஆணவம் முதலிய மலங்களை நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய எங்கோனும் எங்கள்பிராட்டியும் போன்ற  பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

நம் மன அழுக்கு நீங்க இறைவன் திருவடியே சரணம் என்பதை உணர்த்தும் அற்புதமான சிலேடைப்பாடல். மும்மல கலப்பினால் தூங்குகின்ற ஜீவான்மா விழித்து எழுந்து  மலம் நீங்கி சிவனுடன் இணைவதே  பாவை நோன்பின் தாத்பரியம்.

Saturday, December 21, 2013

திருவெம்பாவை # 12


திருசிற்றம்பலம்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!............(12)
பொருள்:
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில் பொன்னின் செய் மண்டபத்துள்ளே தனது இடக் கரத்திலே அனலை ஏந்தி சிவானந்த வல்லியுடன் நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்றான் எம்பெருமான், நமக்கு ஆனந்த நடராசனாக சிவகாமியம்மையுடன் அருட்காட்சி தருகின்றார்.

 நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய (மொய்யார்) தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார்.

இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தையும் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். (ஐந்தொழிலும் ஐயனின் விளையாட்டே).

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரிலும் நாம் மார்கழி நீராடுவோமாக! (இறைவனின் பொற் திருவடிகளை அடைவோமாக)

திருசிற்றம்பலம்

திருவெம்பாவை # 11


திருச்சிற்றம்பலம்



                                                               உத்தரகோச  மங்கை மரகத நடராசர்



மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழற் போல்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்!...........(11)




பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களை உடையவனே!

உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய மலையரசன் பொற்பாவை  உமையம்மையின் மணவாளனே!

ஐயனே!வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் "முகேர்"(முழுகீர்) என்று குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து , வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். ( சுனை நீராடுதல் இங்கே எம்பெருமானின் திருப் பாதங்களில் சரணடைவதைக் குறிக்கின்றது நாம் எல்லோரும் சென்றும் சரணடையும் தீர்த்தனாக எம்பெருமான் விளங்குகின்றான்.  )

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம்.எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!



திருச்சிற்றம்பலம்

Friday, December 20, 2013

திருவெம்பாவை # 10


திருசிற்றம்பலம்








பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!..................(10)


பொருள்:

சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!

அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.

அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.

அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 9


திருசிற்றம்பலம்






முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)



பொருள்: ( பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடுகின்றனர். )

இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.


உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.



எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!

பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல். 



திருசிற்றம்பலம்

Thursday, December 19, 2013

அம்பல கூத்தனின் ஆனந்த ஆருத்ரா தரிசனம் -2

மானச கந்தர்வ மாணிக்க விமானம் 

திருமணக்  கோலத்தில் சிவகாமி அம்பாள் 


ஐயனுக்கு நான்கு கோண விமானம் ஆனால் அம்மைக்கோ எண்கோண விமானம். பதினாறு வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் கூரையைத் தாங்குகின்றன.  கோபுரத்தில் அம்மைக்கும் மூன்று கலசங்கள் ஒன்று நடுவிலும் மற்ற இரண்டும் தனியாக, கோபுரத்தில் கிளிகள் கொஞ்சுகின்றன. வளைவுகளிலே அழகிய சிற்பம் , நடுவில் பூவேலைப்பாடு. கோபுரத்தை யாழிகள் தாங்க  கந்தர்விகளும், கின்னரிகளும், கையில் கிளியுடன் முத்து மாலை ஏந்தி விமானத்திற்கு அழகு சேர்க்கின்றனர். பிரம்ம சக்தி, சிவ சக்தி, பராசக்தி, நாகம், வராஹி, மகேஸ்வரி, விஷ்ணு சக்தி, வீர சக்தி என்னும் தன் எட்டு ரூபங்கள் விமானத்தை சுற்றி அருட்காட்சி தரஇறக்கையை விரித்த கந்தர்விகள் முன்புறமும் பின்புறமும் வீணை இசை மீட்ட தாமரைப் பூக்களால் அமைந்த பீடத்தில் மணிகள் ஒலிக்க   எழிலாக பவனி வருகின்றாள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிசக்திகளின் ஆடை ஆபரணங்கள் அப்படியே அற்புதம்.

 விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம் 



அம்பாளுக்கு முத்து மாலை ஏந்தி சேவை செய்யும் கந்தர்விகள் 

விமானத்தில் 



 விமானத்தின் பின்னழகு 

விமானத்தை சிம்மங்கள் மற்றும் நாகங்கள் தாங்குகின்றன. பீடத்தில் பூ வேலைப்பாடுகள் அற்புதம். ஐயனின் விமானம் ஒரு வித அழகு என்றால் அம்மனின் விமானத்தின் அழகு மற்றொரு விதம். ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரமும் ஒவ்வொரு வகை. ஒரு தடவை நின்ற கோலம் .மறு வருடம் அமர்ந்த கோலம், அதற்கடுத்த வருடம் யோகக் கோலம் என்று காணக் கண் கோடி வேண்டும். விமானத்தில் அன்பே சிவம் விஷ்ணு சக்தி மயம், இரையைத் தேடுவதோடு இறைவனையும் தேடு, தாய் தவக்கோலமே சேய்க்கடிமை ஞாலமே,  வாணி வேணி பூமியில்லையேல் வையமில்லை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று  என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. 


வள்ளி தேவ சேனா சமேத முருகர், தங்க மயில் வாகனத்தில் பவனி வருகிறார், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருக்கிறானல்லவா? எனவே முருகரது தங்க மயில் ஒரு குன்றின் மேல் நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளதுகுன்றில் அனைத்து பறவைகள் மற்றும் மிருகங்களைக் காணலாம்.     எம்பெருமானுக்குரிய கைலாய வாகனத்தில் இது போல்தான் மிருகங்களும் பறவைகளும் காட்டப்பட்டிருக்கும், ஆனால் இங்கு குன்றிலேயே அனைத்து ஜீவராசிகளும் காட்டப்பட்டுள்ளனமயிலின் காலின் கீழ உள்ளது ஐந்து தலை நாகம். அலகில் இருப்பது மூன்று தலை நாகம். பீடத்திலும், திருவாசியிலும் அழகிய பூ வேலைப்பாடுகள்முருகரும் நான்கு புறமும் கந்தர்விகள் யாழ் மீட்ட பவனி வருகின்றார்





சண்டிகேஸ்வரருக்கு தங்க  சிறிய ரிஷப வாகனம். ரிஷபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அற்புதம். வருடாவருடம் வினாயக, முருக, சண்டிகேஸ்வரர் அலங்காரமும் அம்மனின் கோலத்தை ஒட்டி  செயப்படுகின்றது


பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு