Wednesday, December 26, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 3

திருவேட்களம்


இரண்டாயிரம் ஆண்டு பழமையான தலம்.  அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கிய தலம் திருஞானசம்பந்தப்பெருமான் இத்தலத்தில் தங்கி இருந்து தில்லைப்பெருமானை நாள் தோறும் தரிசித்ததாக  பெரிய புராணம் கூறும் தலம்.  மத்யந்த முனிவர் வண்டெச்சில் படுவதற்கு முன் மலர் பறிக்க ஏதுவாக புலி போல காலும் பார்வையும் பெற்று   வியாக்ர பாத முனிவரான பின்  நடராஜப்பெருமானின் தரிசனம் பெற தவம் செய்த தலம்.  மூங்கில் காடாக இருந்ததால் வேணுபுரம். வேடர்கள் அதிகமாக வசித்ததால் வேட்களம்.

அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி) சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.

இறைவன் - பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்.
இறைவி - சற்குணாம்பாள், நல்லநாயகி.
தலமரம் - மூங்கில்.
தீர்த்தம்கிருபா காடாட்ச குளம்..
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.
சோழ நாட்டு (வடகரை) 2வது தலம் 

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார்.  அருணகிரிநாதர் இத்தல முருகன் மேல்  திருப்புகழ் பாடியுள்ளார்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கற்றளியாக மாற்றப்பட்டது.

தல வரலாறு : குருஷேத்திர பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவபெருமான் தலையில் கொக்கிறகு, கையில் வில், முதுகில் அம்புறாத் தூணியுடன்  கிராதக வேடராய் (வேடன்) கிஞ்சுக வாயவள் உமையம்மையுடன், வேதம் நாலும் அறியா மலர்ப்பாதம்  பூமியில் பட நடந்து அர்ச்சுனனுக்கு அருள் புரிய  நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வர பூமியில் எழுந்தருளினார். வேடனாக வந்த சிவபெருமான் அம்பெய்து வந்து பன்றியை கொன்றார்.  அதே  சமயம் பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) சற்று தள்ளி நில் என்கிறார்.

 பின் இருவருக்கும் மற்போர் துவங்கியது, சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். பின் அர்ச்சுனன் சிவ பூசை செய்ய அந்த மலர்கள் எல்லாம் வேடனின் மேல் தோன்ற அர்ச்சுனன் உண்மை உணர்ந்து அம்மையப்பர் தாள் பணிய அந்த பரம கருணாமுர்த்தி தியாகராஜர்,  பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார்.

 கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம், கோடி புண்ணியம் தரும் இறைவனின்  ஸ்தூல வடிவமான கோபுரத்தை தரிசனம் செய்து உள்ளே நுழைந்து ஒரே பிரகாரத்தை வலம் வந்தால், சுற்றுப்பகுதியில், தல விநாயகர்-சித்தி விநாயகர் கன்னி மூலையில் அருளுகின்றார்,  கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, அஷ்ட புஜ துர்க்கை, லிங்கோத்பவர் அருளுகின்றனர். தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். தென்முகக் கடவுள் முன் அமர்ந்து காயத்ரி ம‘ன்திரம் ஜெபிக்க கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பிரகாரத்தில் சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.  சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு கிரஹண தோஷங்கள் நீங்கும். தல மரம் மூங்கிலும் பிரகாரத்தில் உள்ளது.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி  அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு திருக்கரங்களில் அங்குச பாசம் இல்லாமல் தாமரையும், நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள் . அம்மனுக்கு  எதிரிலும் நந்தி  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. மனோன்மணி என்னும் அம்மனுக்கு சந்தனக்காப்பு சார்த்தி வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் வண்டெச்சில் படாததற்கு முன் மலர் பறிக்க ஏதுவாக     புலிக்கால் பெற்ற  முனிவர் வியாக்ரபாதர் பாசுபதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அர்ஜுனன் அக்னியை பிரார்த்தனை செய்து பெற்ற காண்டீபம் என்னும்  வில்லால் அடித்த  தடத்தை  இன்றும் லிங்கத்தின் மீது காணலாம் என்கிறார்கள்.


சந்நிதி வாயிலின் முன்னால் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன  சபையில் ஆடல்வல்லான்  மகுடமணிந்து காட்சி தருவது சிறப்புடையது. இடப்பால் நால்வர் உற்சவத் திருமேனிகளும் தொடர்ந்து உற்சவ மூர்த்தங்கள் சந்நிதி இம்மூர்த்தங்களுள்  கிராதமூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ திருமேனியும், அருச்சுனன்  திருமேனியும் தல வரலாற்றுத் தொடர் புடையவை. இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதி முன் மண்டபத்தில்  நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்து அம்பாள் வேடுவச்சியாக வேட்டை நாய்களுடன் எழுந்த்ருளும் சிற்பம், சிவனும் அர்ஜுனனும்  மல்யுத்தம் செய்யும் காட்சி, இந்திரன் ஐராவதத்தில் பவனி வரும் காட்சி  போன்ற சிற்பங்கள்  சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன..

 திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் இந்திர மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த  அற்புத திருவுருவம்.

ஆலயத்திற்கு எதிரில் உள்ள  நாக லிங்க மரம்

கோவிலுக்கும் திருக்குளத்திற்கும் இடையில் மிகப் பிரமாண்ட  நாக லிங்க மரமும்  ஆலமரமும் உள்ளன. இங்கு நின்று கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்த போது கருட தரிசனமும் கிட்டியது

கொடி மரம் கிடையாது. சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது அன்று பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.















திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் தனது பதிகத்தின் 6-வது பாடலில் "கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்" என்றும் குறிப்பிடுகிறார்.

நன்று நாள் தோறும் நம்வினை போய் அறும்
என்றும் இன்பந் தழைக்க இருக்கலாம்
சென்று நீர் திருவேட்களத்துள் உறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே.

சோமவாரத்தன்று இத்தலத்தை 108 முறை சுற்றி வலம் வந்து இறைவனையும், இறைவியையும் வணங்க மனோபலம் கூடும் திறமை வெளிப்பதும் என்பது ஐதீகம்.


கல்வெட்டில் திருவேட்களம் கிராமம் முழுவதும் சிதம்பரம்கோவிலுக்கு அச்சுதப்ப நாயக்கரால் தானமாக கொடுக்கப்பட்ட செய்து குறிப்பிடப்படுகின்றது.


அம்பாளின் ஞானப்பாலுண்ட ஆளுடைய பிள்ளையாம் திருஞானசம்பந்தருடன் தொடர்புடைய  இந்த திருவேட்களம், சிவபுரியின் திருநெல்வேலி, திருகழிப்பாலை மற்றும் அவர் திருமணம் நடந்த நல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரம் ஆகிய நான்கு தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சிவபார்வதி அருளால் நல்வாழ்க்கை  கிட்டும் எனவே நாளை (27-12-12) ஆனந்த கூத்தரின் திருத்தேரோட்டம் காண வரும் அன்பர்கள். தில்லைக்கு  மிக அருகில் உள்ள இத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.