Sunday, December 25, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -13


கங்கோத்ரி கோவிலின் முன் குழுவினருடன்

முதற்கண் அன்பு உள்ளம் கொண்ட  அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள்.  மின்னஞ்சல் மூலமும், பின்னூட்டம் மூலமும்  நலம் விசாரித்த அனைவருக்கும், மற்றும் பின் தொடரும் வந்து தரிசனம் பெற்றுச் செல்பவர்களுக்கும்   மிக்க நன்றி.  இன்றிலிருந்து பதிவுகள் தொடர்கின்றன. 

கங்கோத்ரி ஆலயம் 

 
 பக்கவாட்டுத்தோற்றம்
  
சிவன் சன்னதியுடன்  



 அம்மன் சன்னதி  மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 
சார்த்தியிருக்கும் என்னும் அறிவிப்புப் பலகை

வெகு நேரம் கங்கா மாதாவின் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லாமல் நிறுத்தி வைத்து விட்டேனா? பரவாயில்லை வாருங்கள் அடியேனுடன்.  முன்னரே கூறியது போல கங்கோத்ரி ஆலயம் வரையில் வண்டிகள் செல்கின்றன. வண்டியில் இருந்து இறங்கியவுடன் கண்ணில் கங்கோத்ரி ஆலயத்தின் பளிங்கு கோபுரம் கண்ணில் பட்டது. கூடவே மூன்று  முக்கோண முகப்பு வாயிலும் கண்ணில் பட்டது. நுழைவு வாயில் தொடங்கி கோயில் வரையில் இருபக்கமும் கடைகள். 

 பரம கருணாமூர்த்தி சிவபெருமான் கங்கையை
தனது ஜடாமுடியில் தாங்கும்  சுதை சிற்பம் 

ஆலயத்தில் இருந்து நதிக்கு செல்ல படிகள் உள்ளன , நதிக்கரையில் உள்ள கணேசரை வணங்கி விட்டு,   முதலில் பாகீரதியில் ஸ்நானம் செய்து விட்டு  பின்னர் கங்கம்மாவை தரிசனம் செய்யலாம் என்று அனைவரும் பாகீரதியில் குளிக்க சென்றோம். இங்கு தண்ணீர் மிகவும் குளிர்ந்ததாக உள்ளது. மூன்று முழுக்கு போடுவதற்குள் உடம்பெல்லாம் விறைத்து விட்டது. அவசர அவசரமாக குளித்து விட்டு வெளியே ஓடி வந்து தலை  துவட்டிக்கொண்டு, கம்பளி உடைகளை அணிந்து கொண்டோம்.  மானசரோவரில் இருந்ததை விட இங்கு  தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது.  அதை அடியேனுடன் திருக்கயிலாயம் பயணம் செய்த திரு. முட்கல் அவர்கள் இரண்டாம் தடவை பயணம் செய்த போது உறுதி செய்தார். அவர் மிகவும் குளிர்ந்த குளங்கலில் முதலாவதாக மலர் பள்ளத்தாக்கில்   உள்ள ஹேமகுண்ட சாஹிப் குள நீரும், இரண்டாவதாக கங்கோத்ரி நீரும், மூன்றாவதாக திருக்கயிலாய கௌரி குளத்து நீர் என்று வரிசைப்படுத்தினார். எனவே இந்த மாதிரி இடங்களில் முதலில் கரையில் அமர்ந்து செம்பின் மூலம் தண்ணீரை முகர்ந்து உடம்பில் ஊற்றிக் கொள்வது நல்லது. மேலும் தலையில் நீரில் உள்ளே கொண்டு செல்லாமல் நீரை உற்றிக்கொள்வது உத்தமம் என்று கூறினார். 

 பாகீரதி நதிக்கரையில் திரு.இரவி 

 பாகீரதி கங்கோத்ரியில் பாயும் அழகு 

 கங்கா மாதாவிற்கு பூஜை 



கங்கா ஸ்நானத்திற்குப்பின் கங்கா மாதாவிற்கு, முக்தி தாயினிக்கு, வாழ்வளிக்கும் அன்னைக்கு  தூப தீப நைய்வேத்யம் படைத்து பூஜைகள் செய்தோம்.
பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜலலவ கணிகா பீதா

ஸக்ருதபி ஏன முராரி சமார்ச்சா

க்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா

கொஞ்சமாவது கீதையை பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தம் பருகி  ஒரு முறையாவது அர்ச்சனை  செய்கிறானோ அவன் எமலோகமான நரகத்திற்குப்போகாமல் புண்ணிய லோகத்திற்கு போகின்றான் என்றபடி  முக்தியளிக்கும் கங்கா தீர்தத்தை கேதாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யவும், வீட்டிற்கும், நண்பர்களுக்கு கொடுக்கவும் கங்கா தீர்த்தம் சேகரித்துக்கொண்டோம்.  பின்னர் பாகீரதியின் கரையில் அமைந்துள்ள பாகீரதனின் சன்னதியில் சென்று நாம் எல்லாரும் உய்ய கங்கையை ஆகாயத்திலிருந்து பாகீரத தவம் செய்த செம்மலை வணங்கினோம். இவர் அமர்ந்துள்ள பாறை பாகீரதன் சிலா என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அமர்ந்ததுதான் இவர் கங்கையை பூலோகத்திற்கு வரவழைக்க தவம் செய்தாராம். தன் முன்னோர்களை கரையேற்ற பாகீரதன் தவம் செய்த இடம் என்பதால் இவ்விடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்தது. 

பாபாவுடன் சொக்கலிங்கம் மற்றும் இரவி


பின்னர் கணபதி சன்னதிக்கு சென்று முழு முதற்கடவுளுக்கு தோப்புக்கரணம் இட்டு வணங்கி  கங்கோத்ரி கோவிலுக்கு வலப்பக்கத்தில் அமைந்துள்ள சிவ பெருமான் சன்னதிக்கும் சென்று சிவ லிங்கத்திற்கு கங்கா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கினோம். பின்னர் கங்கா மாதாவின் சன்னதிக்கு சென்று வணங்கினோம். கூட்டம் அதிகம் இருக்கவில்லை ஆயினும் அனைவரும்  வரிசையில் நின்று சென்றனர். லலிதா சகஸரநாமம் ஜபித்துக்கொண்டே மூன்று முறை அருமையாக சன்னதியை சுற்றி வந்து தரிசனம் செய்தோம்.

தேவதாரு வனம்


கருவறையில் கங்கை அன்னை நடு நாயகமாக சிலா ரூபத்தில் அமர்ந்த ரூபத்தில் பட்டுப்பீதாம்பரதாரியாய், சர்வாபரணபூஷிணியாய்  எழிலாக கொலு வீற்றிருக்கின்றாள். அன்னையின் இரு புறங்களிலும் இவளது சகோதரிகள் யமுனையும் சரஸ்வதியும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இராதாகிருஷ்ணரும் சேவை சாதிக்கின்றனர். இமயமலையின் பல ஆலயங்களில் தெய்வ மூர்த்தங்கள் பஞ்சாதாயன முறையில் முக்கிய மூர்த்தி நடுவிலும் மற்ற மூர்த்தங்கள் அவருடன் இருக்கும் முறையில்  அமைக்கப்படுகின்றன.   
  நடராஜர் அபிஷேகத்திற்கு கங்கா தீர்த்தம் சேகரிக்கும்
வைத்தி அவர்கள் 

வெளியே வந்து  சிவ பெருமான் பெருங்கருணையுடன் தன் ஜடா முடியில் கங்கையை தாங்கும் சிலா ருபத்தை புகைப்படம் எடுத்தோம். அங்கு ஒரு வயதான பாபா புறாக்களை வளர்த்துக்கொண்டிருந்தார் அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றோம். பனிபடர்ந்த சிகரங்களை கண்டு களித்தோம். அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  மணி இரண்டாகிவிட்டது கோவில் சன்னதியும் சார்த்தப்படும்  உடனே கிளம்பிவிடலாம், நமது பேருந்து இல்லை என்பதால்  ஜீப்பில்தான்  தான் செல்ல வேண்டும், இங்கிருந்து பகல் மூன்று மணிக்கு மேல் பேருந்து இல்லை என்று வழிகாட்டி கூறியதால் அற்புத   தரிசனத்திற்கு கங்கா மாதாவிற்கு நன்றி கூறி கிளம்பினோம். இனி இக்கோவிலைப்பற்றி காண்போமா? 
பாகீரதன் சிலா பித்ரு தர்ப்பணம் செய்யும் இடம்
 
பாகீரதியின்  வலக்கரையில் 3753 மீ (12313 அடி) உயரத்தில் வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன  கங்கோத்ரி கோயில் அமைந்துள்ளது  கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சார்ந்த ஜெனரல் அமர்சிங் தாபா 18ம் நூற்றாண்டில்   இக்கோவிலைக் கட்டினார்.  அருகிலேயே சிவபெருமானுக்கு  ஒரு தனிக்கோவில் உள்ளது.    கோயில் அமைந்திருக்கும் கல் பகீரதன்  காலை ஊன்றி  தவம் செய்த இடம் என்பது ஐதீகம். அதனால் தான் இது பாகீரத சிலா   என்னும் பெயர் பெற்றது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததாக நம்பிக்கை. ஆதிசங்கர பகவத்பாதாள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவருக்கும்  கோயில் எடுத்தாராம். 

இக்கோவில் தாருகாவனம் எனப்படும் தேவதாரு மரங்கள் சூழ்ந்த காட்டில் அமைந்துள்ளது. கங்கோத்ரியில் உள்ள ஆலயம் 20 அடி உயரம் கொண்டது. அற்புதமான இயற்கை சூழல் அமைந்த அந்த இடத்தில் சிவலிங்கத்தையும், கங்காதேவியையும் வணங்கிப் பணிவது அற்புதமான ஓர் அனுபவம். நம் மனதில் தொக்கி நிற்கும் அற்பமான ஆசைகள் அங்கு தானாக விடைபெற்றுக் கொள்கின்றன.


கங்கோத்ரி நுழைவு வாயில் பின்பக்க தோற்றம் 
 
கங்கோத்ரி பகுதியில் ஓடும் பாகீரதி நதிக்குள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. நீர் மட்டம் குறையும்போது இந்த லிங்கத்தை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு உயரத்தில் அமைந்திருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையில்தான் கங்கோத்ரியை அடைய முடியும் என்றாலும்,  ஆண்டு தோறும் இரண்டரை லட்சம் பேர் இங்கு கூடி ஈசனையும், கங்காதேவியையும் தரிசித்து  மகிழ்கின்றனர். திபெத்திய எல்லைக்கருகே இந்த இடம் இருக்கிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு பாண்டவர்கள் இங்கு யாகம் செய்துள்ளனர். கங்கோத்ரியில் இயற்கை எழிலுக்குப் பஞ்சமே இல்லை. அழகிய பள்ளத்தாக்குகள், அற்புத வனங்கள், ட்ரெகிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சியையும் இங்கு செய்கின்றனர். ஆலயத்தின் மறுபுறத்தில் நிறைய ஆசிரமங்கள் உள்ளன. மொத்தத்தில் அமைதி அளிக்கும் சூழல் இங்கு நிலவுகிறது.
 
நவம்பர் மாதத்தில் இந்த பகுதி முழுவதும் பனி சூழ்ந்து விடும். ஆலயத்தையும் பனிப்படலம் மூடி விடும். எனவே, தீபாவளி திருநாள் முடிந்தவுடன் இங்கு இருக்கும் கங்கை அம்மன் திரு உருவத்தை அலங்காரம் செய்து பல்லக்கில்  இங்கிருந்து 12 கி.மீ., கீழே உள்ள ஹர்சில் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள முக்பா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நிறுவுகின்றனர். அடுத்த மே மாதம் தான்  பூஜாரிகள் அம்மனின் சிலையை மீண்டும் கங்கோத்ரி ஆலயத்திற்கு எடுத்துச்செல்வர். அக்ஷய திருதியை அன்று முக்பாவிலிருந்து கங்கையன்னை திரும்பி கங்கோத்ரிக்கு பல்லக்கில் திரும்பி வருகின்றாள் அன்றையதினம் சன்னதியிலும் நதிக்கரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளியன்று ஆலயம் மூடும் போதும் கோயில் முழுவதும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.  இரண்டு நாட்களிலும் பக்தர் கூட்டம் கங்கோத்ரியில் அலை மோதும். 

கோடை காலத்தில் ஆலயம் காலை 6:15 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 9:30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். குளிர் காலத்தில் காலை 6:45 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 7 மணி வரையிலும்  திறந்திருக்கும். தினமும்  காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தி சன்னதியில் நடைபெறுகின்றது அதற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. கோடைக் காலத்தில் மாலை  7:45 மணிக்கும், குளிர் காலத்தில் 7 மணிக்கும் கங்கோத்ரிக் கரையில் ஆரத்தி நடைபெறுகின்றது. 

இந்திய திபெத் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது கங்கோத்ரி, டேராடுனிலிருந்து 300  கி.மீ, ரிஷிகேஷிலிருந்து 250  கி.மீ. உத்தரகாசியிலிருந்து 105 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கங்கோத்ரி. பார்க்கோட்டிலிருந்து  செல்லும் பாதை சிறிது தூரத்தில் இரண்டாக பிரிகின்றது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனைக் கரையோரம் யமுனோத்திரிக்கு செல்கின்றது. வலப்பக்கம் செல்லும் பாதை பிரம்மகால், கல்யாணி, தராசு, உத்தரகாசி வழியாக வழியாக கங்கோத்ரிக்கு செல்கின்றது.. ரிஷிகேஷிலிருந்து நரேந்திர நகர், ஜகல், சம்பா, தேஹ்ரி, தராசு, உத்தரகாசி வழியாகவும்  கங்கோத்திரிக்கு ஒரு பாதை உள்ளது. 


அன்னையை அற்புதமாக தரிசனம் செய்தபின் வாகனங்கள்  நிற்கும் இடத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது  ஜீப் ஒன்றும் இருக்கவில்லை, கடைசி அரசு பேருந்து மட்டுமே இருந்தது, வேறு வழியில்லாமல் அதி ஏறி உத்தரகாசி வரை பயணம் செய்தோம். பேருந்து   பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களையும், அடுத்து உத்தரகாசியில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்ட அனுபவத்தையும் அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே. 

6 comments:

ப.கந்தசாமி said...

நல்ல வர்ணனை மற்றும் வழிகாட்டுதல்.

S.Muruganandam said...

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

Sankar Gurusamy said...

சிறப்பான, கங்கா மாதா தரிசனம் உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் கிடைக்கிறது..

பகிர்வுக்கு மிக்க நன்றி...

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

மிக்க நன்றி சங்கர் ஐயா.

Spark Arts Kovai said...

கங்கையின் பெருமைகளை அருமையாக உணர்த்திய கைலாஷி ஐயா அவர்கட்க்கு கோடானு கோடி நன்றிகள், தொடர்ந்து எழுதுங்கள் ஊக்கத்துடனும், உற்சசாகத்துடனும் தொடர்ந்து வருகிறேன் vவாழ்த்துக்கள், ,

S.Muruganandam said...

//தொடர்ந்து எழுதுங்கள் ஊக்கத்துடனும், உற்சசாகத்துடனும் தொடர்ந்து வருகிறேன் vவாழ்த்துக்கள்//

உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்காக பதிவுகள் நிச்சயம் தொடரும் வந்து பாருங்கள் கார்த்தி.