Saturday, December 3, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -10

 ங்கா மய்யாக் கீ ஜே!
 
( கங்கையின் உற்பத்தி ஸ்தானம்)


விடிவதற்காக காத்துக்கொண்டிருக்கும் கந்தசாமி ஐயாவிற்கு மிக்க நன்றி. காலைப்பொழுதும் இனிதாக விடிந்தது. அதற்கு முன் இரவில் உத்திரகாசி சுற்றுலா பவனை அடைந்தவுடன் இரண்டு செய்திகள் கிடைத்தன ஒன்று நல்ல செய்தி, இரண்டாவது சரியான செய்தி இல்லை என்றாலும் அதனால் பலம் ஒன்றுமில்லை. முதலாவது கங்கோத்ரி பாதை தற்போது சரியாக உள்ளது மூன்று நாட்களாக இருந்த நிலச்சரிவுகள் எல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டது என்பதே அந்த நல்ல செய்தி. ஆனால் கோமுக் செல்வதற்கு அனுமதி கிட்டவில்லை, கிடைத்திருந்தலும் சென்றிருக்க முடியாது.  கோமுக் பாதை  மிகவும் கடினமானது  மற்றும் ஆபத்து நிறைந்தது என்பதால் விசேஷ அனுமதி பெறவேண்டும் இது உத்தரகாசியில் தான் அளிக்கப்படுகின்றது. 

 கோமுகி  சென்றிருந்தால் இவ்வாறு நடந்திருப்போம்


கங்கோத்ரியில் இருந்து கௌமுக் மொத்தம் 22 கி.மீ நடைப்பயணம், சென்றிருந்தால் முதல் நாள் 14 கி.மீ நடை  பயணம். பாதை காடுகளுக்கிடையில் ஒற்றையடிப்பாதை. சீர்வாஸா என்ற ஊரில்,   கையில் எடுத்து சென்ற மதிய உணவை  அங்கு உண்டு, போஜ்வாஸா ( 3792 மீ உயரம்) என்ற ஊரை அடைந்து இரவு GMVN சுற்றுலா இல்லத்தில் தங்கி பின்னர் மறுநாள் அதிகாலை  புறப்பட்டு  கோமுக்கை (3890 மீ/ 12770 அடி) அடைந்து பனியாற்றில் ஸ்நானம் செய்து கங்கா மாதா உற்பத்தியாகி வரும் அந்த புண்ணீய இடத்தை தரிசனம் செய்த  மகிழ்ச்சியுடன் உடனே திரும்பி  மலை இறங்கி  கங்கோத்ரி அடைந்து பேருந்து மூலமாக பட்வாரி என்னும் இடத்தை அடைந்திருக்க வேண்டும் , ஆனால் நிலச்சரிவு காரணமாக பிரம்மாகாலில் தங்க வேண்டி வந்ததாலும் மழை அதிகமாக பெய்வதால் அனுமதி கிட்டாத்ததாலும்  இப்பயணம் நடைபெறவில்லை. எல்லாம் அவன் செயல் இன்னும் பல ஏமாற்றங்கள் உள்ளது என்று அப்போது நாங்கள் உணரவில்லை.  கோ = பசு, முக் = முகம், கங்கை உற்பத்தியாகும் இடம் பசுவின் வாய் போல உள்ளதால் இந்தப் பெயர். கங்கோத்ரி சிகரத்தின் மையத்தில் உள்ளது கௌமுகி.  கௌமுகியிலிருந்து தபோவன்( 4463 மீ/ 14683 அடி) நடைப்பயனம் செல்வாரும் உண்டு. மேரு-கங்கோத்ரி மலைக்களுக்கிடையில்  அமைந்துள்ள தபோவனம் அருமையான சமவெளிப்பகுதி. இதற்கு எதிரில் நந்தவனம் உள்ளது இங்கும் நடைப்பயணம் செல்வார் உண்டு. 

 பாதி வழி இப்படித்தான் இருந்தது

 
பட்வாரியில் காலை உணவு

காலையில் சீக்கிரம் உத்த்ரகாசியிலிருந்து கிளம்பிவிட்டோம். காலைபனி இருந்தது. மழை இல்லை. பாதை பல இடங்களில் மோசமாகவே இருந்தது. ஒரு வண்டி மட்டும் செல்லும் அளவிற்கு பாதையை சரி செய்து வைத்திருந்தனர். முழுவதும் சரிவை சரியாக்கினால் மேலும் மேலே இருந்து மண் சரிந்து விழும் என்பதால் இவ்வாறு செய்கின்றனர். ஆகையால் அந்த இடங்களில் போக்குவரத்து மெதுவாகி விடுகின்றது. முதலில் கங்கோரி என்னும் ஊரைக் கடந்தோம் இங்கு டோடிட்தால் என்னும் அருமையான  ஒரு ஏரி உள்ளது. பின்னர்  பாகீரதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மனேரி-பாலி அணை, பைலட் பாபா ஆசிரமத்தில்  பல்வேறு தெய்வ சிற்பங்கள் அருமையாக அமைத்திருப்பதைப் பார்த்துக்கொண்டே மேலும்   பயணம் செய்தோம். NTPCயின் நாக்-பாலா மின் திட்டத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.வழியெங்கும் எண்ணற்ற அருவிகளைக் கண்டோம். அவையனைத்தும் பாகீரதியில் வந்து தம்முடைய நீரை சேர்த்துக்கொண்டிருந்தன. 

 மின் அனல் நிலையப் பணி 
முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தது


 அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் பாகீரதி நதி


ஆப்பிள் தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு

வழியெங்கும் உயரமான தேவதாரு மரங்கள். தாரு என்றால் மரம், தேவர்களின் மரம் என்று பொருள், தேக்குப்போன்ற மரம் இங்குள்ளவர்கள் வீடுகட்டவும்  மற்றும் பல வகைகளில் இம்மரத்தை   பயன்படுத்துகின்றனர். சொர்க்கத்திலிருந்து வந்ததால்  தேவதாரு என்று பெயர் வந்தது என்று வழிகாட்டி கூறினார். மேலும் கங்கோத்ரி செல்லும் இப்பாதை யமுனோத்ரி பாதையை விட செழிப்பானதாக காணப்பட்டது. வழியெங்கும் ஆப்பிள் பழத் தோட்டங்களைப் பார்த்தோம். யமுனோத்ரி செல்லும் போது தோட்டம் கண்ணீல் படவில்லை ஆனால் ஆப்பிள் ஏற்றி வந்த லாரிகள் மட்டுமே அங்கே பார்த்தோம். இயற்கையின் வனப்பு அருமையாக இருந்தது இவ்வழியில், ஏகபப்ட்ட உடும்பு குட்டிகளையும் பார்த்தோம். மேலும் அடியேனுக்கு இமயமலைப்பகுதியில் மிகவும் பிடித்த ஆர்க்கிட் மலர்களைப் பார்த்தோம். இவ்வாறு பாகீரதியின்  வலப்பக்கம் பயணம் சுமார் 30 கி.மீ  செய்து பட்வாரி என்னும் ஊரை அடைந்தோம். அங்கு ஆலூ பரோட்டா சாப்பிட்டுவிட்டு  கிளம்பினோம். இரவு இங்குதான் நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வழிகாட்டி கூறினார்.

ஆப்பிள் பழம் பறிக்கும் கணேசன்

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் அருமையான ஒரு காட்சி கண்ணில் பட்டது பாகீரதி மற்றும் சிவலிங்க பனிச்சிகரங்கள் அருமையாக கண்ணில் பட்டது அருகிலேயே ஆப்பிள் தோட்டங்களும் இருந்தன. ஆகவே வண்டியை நிறுத்தி முதலில் சிகரங்களையும் அங்கிருந்த  மலர்களையும்  புகைப்படம் மற்றும் சலனப்படம் மற்றும் பிடித்தோம். ஆப்பிள் தோட்ட ஒன்றில் அனுமதி பெற்று நுழைந்து எவ்வாறு ஆப்பிள் செடி வளர்ந்திர்க்கின்றது என்று பார்த்தோம். அங்கு ஆப்பிள் கிலோ 20 ரூபாய்தான். சென்னையில் தக்காளி விற்கும் விலையை விட குறைவான விலை. ஆனால் இது கைமாறி பெட்டியில் அடைபட்டு வரும் போது  எவ்வளவு அதிக விலையாகி விடுகின்றது. பேருந்து பயணத்தின் போது சாப்பிட கொஞ்சம் ஆப்பிள் வாங்கிக்கொண்டோம். மேகமூட்டம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டுதான் இருந்தது. பாகீரதி  இங்கே அமைதியாக பலமுகம் காட்டிக்கொண்டு ஒடிக்கொண்டிருந்தாள்.



கங்கோத்ரி பனிச்சிகரம் 

 
 
 கங்கோத்ரி பனிச்சிகரத்திலிருந்து
ஓடி வரும் பாகீரதி நதி 

 ர்க்கிட் பூக்கள்


 
 ஆப்பிள் பழம் தின்ன ஆசையா?
கிலோ ரூ.20 தான்

பனிச்சிகரம், ஆர்க்கிட் பூக்கள், பாகீரதி நதி,  ஆப்பிள் தோட்டங்களை இரசித்துக்கொண்டே  சுகிடாப் கடந்து கங்நானி என்னும் ஊரை அடைந்தோம், இவ்வூரில் வெந்நீர் உற்றுகள் உள்ளன நாங்கள் இங்கு நிற்கவில்லை கங்கோத்ரியை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். ஹரிசில் என்னும் ஊரை அடைந்த போது வண்டி தள்ளாடத் துவங்கியது, வண்டி ஒட்டுநர் வண்டியில் ஏதோ கோளாறு சரி செய்தால் தான் வண்டி ஒடும் என்று வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டார். இந்த ஹரிசில் கிராமத்தில்தான் ராம் தேரி கங்கா மைலி என்னும் ஹிந்தி சினிமாப்படம் படமாக்கப் பட்டதாம்.
 
 ஹர்சிலில் பேருந்து பழுதாகி நின்ற சமயம்

இவ்வூரிலிருந்து இராணுவ நடமாட்டம் அதிகம் ஏனென்றால் இவ்விடம் திபெத்(சீனா)  எல்லைக்கு அருகில் உள்ளது. இவ்வூரில் ஒரு ஹெலிகாப்டர் தளமும் உள்ளது. லக்ஷ்மி நாராயணர் ஆலயமும் உள்ளது.   இங்கிருந்து உள்ளூர் ஜீப்பில் பயணம் செய்து லங்கா சட்டி,  பாகீரதியும் ஜானவியும் சங்கமிக்கும் பைரான்காட்டி என்னும் ஊரை கடந்தோம் , இவ்வூரில் பைரவருக்கு ஒரு  அருமையான கோயில் உள்ளது. பின்னர் ஜாட் கங்கா நதி பாலத்தை அடைந்தோம்.

 பைரவர் கோயிலை நெருங்குகின்றோம்

 இவைதான் ஊசியிலைக் காடுகள்

பனி விழும் மலர் வனம்

இந்த ஜாட் கங்கா  நதி திபெத்தில் உருவாகி இந்தியாவிற்குள் பாயும் நதி. இந்நதியின் குறுக்கில் உள்ள இப்பாலம்தான் மேலே நாம் செல்ல ஒரே வழி என்பதால் இப்பாலம் இராணுவத்தின் கட்டுப்பாடில் உள்ளது. நாங்கள் சென்ற சமயம் இராணுவ வீரர்கள் தங்களுடைய வண்டியின் மேற்பக்கம் நின்று கொண்டு பாலத்திற்கு பச்சை வர்ணம் அடித்து கொண்டிருந்தனர். ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். ஆசியாவிலேயே உயரமான பாலம் இந்த  ஜாட் கங்கா பாலம்தான். இப்பாலத்தை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இப்பகுதியில் திபெத்தியர்கள் வசிக்கின்றனர் கிராமங்களின் பெயர்கள் கூட திபெத்திய மொழியில் உள்ளன என்று  வழிகாட்டி கூறினார். சுமார் 15  நிமிடம் கழித்து இராணுவ வண்டி நகர்ந்தது பாலத்தை கடந்து கங்கோத்ரியை சுமார் 12 மணியவில் அடைந்தோம். இனி கங்கா மாதாவை  தரிசனம் செய்வதற்கு முன்னால் அவளது மகிமைகளை அறிந்து கொள்ளலாம் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.        

11 comments:

ப.கந்தசாமி said...

தம்பி, என்னை ரொம்பவுமே கவுரவப்படுத்தி விட்டீர்கள். நன்றி.

1998 ல் நாங்கள் நான்கு நண்பர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொண்டோம். பத்ரிநாத் பார்க்க முடியவில்லை. போன வருடம் அந்தக் குறை நிவர்த்தியாயிற்று.

ப.கந்தசாமி said...

நல்ல வர்ணனை.

S.Muruganandam said...

//தம்பி, என்னை ரொம்பவுமே கவுரவப்படுத்தி விட்டீர்கள். நன்றி//

யாராவது நமது எழுத்தையும் படிக்கின்றார்கள் என்று அறியும் போது உற்சாகமாக உள்ளதல்லவா .

S.Muruganandam said...

//1998 ல் நாங்கள் நான்கு நண்பர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொண்டோம். பத்ரிநாத் பார்க்க முடியவில்லை. போன வருடம் அந்தக் குறை நிவர்த்தியாயிற்று.//

அடியேன் கதையும் அவ்வாறே, 2010ல் கேதார்நாத் செல்ல முடியவில்லை. இந்த வருதம் சென்று தரிசனம் செய்தோம்.

மிக்க நன்றி ஐயா.

Sankar Gurusamy said...

அற்புதமாக இருக்கிறது... தொடருங்கள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

S.Muruganandam said...

நிச்சயம் தொடர்கிறேன் சங்கர் ஐயா

karthic said...

c

karthic said...

c

karthic said...

c

karthic said...

Thanking you sir

S.Muruganandam said...

மிக்க நன்றி கார்த்திக்