Wednesday, November 30, 2011

ஆறாத இன்பம் அருளும் மலை





திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர்

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது வழக்கு. அந்த திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் மகளிர் விளையாடல்களை, இறைவன் புகழ்பாடுவதற்கு ஏற்ற செயல்களாக அமைத்துப் பாடினார். திருவாசகத்தில் வரும் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, திருத் தோள்நோக்கம், திருவுந்தியார், திருச்சாழல், திருத்தெள்ளேணம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருவெம்பாவை எல்லாம் இவ்வாறு மகளிர் விளையாடல்களாக அமைந்த பாடல்கள்.

பெண்கள் உட்கார்ந்து ஆடுவது அம்மானை;
வாசனைப்பொடி இடித்தவாறே பாடுவது பொற்சுண்ணம்;
மலர் பறிக்கும்போது பாடுவது பூவல்லி;
ஊஞ்சல் ஆடும்போது பாடுவது ஊசல்;
குயிலையும், தும்பியையும், அன்னையையும் முன்னிலை வைத்துப் பாடுபவை குயில் பத்து, திருக்கோத்தும்பி, அன்னைப்பத்து ஆகியவை.
பாவைநோன்பு நோற்கும் போது பாடுவது திருவெம்பாவை.

இவற்றுள் திருவெம்பாவையின் அண்ணாமலையாரின் புகழ் பாடும் ஒரு பாடலை அருணாசல நாயகரின் கார்த்திகைப்பெருவிழாவின் இரண்டாம் திருநாளாகிய இன்றைய தினம் காணலாம் அன்பர்ளே.

அண்ணமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளியங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புமல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
.

பொருள்: திருவண்ணாமலையானுடைய திருவடித்தாமரைகளில் சென்று பணிகின்ற தேவர்களுடைய முடிகளிலுள்ள மணியின் ஒளி, சூரியன் தோன்றிவுடன் , நட்சத்திரங்கள் தம் ஒளி இழப்பது போல ஒழிய, பெண்ணுருவாகி, ஆணுருவாகி , அலியுருவாகி விளங்குகின்ற ஒளிபொருந்திய ஆகாயமாகிப் பூமியாகி இவ்வளவு பொருள்களிடமிருந்து வேறுபட்டுப் பெருமை நிறைந்த அமுதமாகி நின்றவனது திருவடிகளைப் பாடிக்கொண்டே. மாதே! இந்த அழகிய சீதப்புனலில் குதித்து மூழ்குவாய்! எம் பாவையே! தலைவன் தான் கண்ணாரமுதமாமாறு கருணை புரிக.

உண்ணாமுலையுமையாளுடனாகிய அண்ணாமலையார்


அடி .. முடி.. தேடி

இன்றைய பதிவில் இத்தலத்துடன் கூடிய சில புராணக் கதைகளைப்பற்றிக் காணலாம் அன்பர்களே. தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந் தெய்வங்களும் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்கள் பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர்.



லிங்கோத்பவர்

உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து மைகலந்த கண்ணி பங்கன், மாதொரு பாகன், செங்கண் கருங்குழலி நாதன் சிவபெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய்து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.
பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ
என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷிகளும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்கு வருவதாக ஐதீகம்.
திருக்கார்த்திகை ஜோதி
இவ்வாறு ஐயன் ஜோதிப் பிழம்பாக நின்றதன் தத்வார்த்தம் என்னவென்று பார்த்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். இங்கே தான் என்ற அகந்தை கொண்ட மாலும் அயனும் ஜீவாத்மாக்கள். இந்த சீவன்கள் அகந்தை கொண்ட மட்டும் இறை தரிசனம் பெற முடியாது, அகந்தை அகன்றால், மற்ற ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்னும் மன மாசுகள் அகன்றால் இறைவனை தன்னுள்ளேயே ஜோதி வடிவில் காணலாம் அவ்வாறு காணும் சீவன் சிவனாகின்றது, ஆணவ மலம் கெட்டு இறைவன் திருவடி நிழல் அடைந்தவர்கள் சிவமாக விளங்குவர் என்பதை உணர்த்துவதே திருக்கார்த்திகை தீபம்.


தீப தரிசன நேரத்தில் இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிப்பார் அதற்கான ஐதீகம், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் போற்றும் அப்பெற்றியனான எம் ஐயன் பவள வண்னர் சிவபெருமான், பேரமை தோளி பங்கன், மானேர் நோக்கி மணாளன், குவளைக்கண்ணிகூறன் ஒரு நாள் தன் நாயகியாம் மரகதச்சிலை மலையரசன் பொற்பாவை, பார்வதி, கௌரி, உமை நங்கை, பர்வத நந்தினி, கிரிஜாவுடன் வெள்ளிப் பனிமலையாம் திருக்கைலாய மலையிலே திருவோலக்கம் சாதிக்க பிருங்கியும், திருநந்தி தேவரும், பெருங்தகுதியுடைய சிவகண தலைவரும், சனகாதி முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அமர்ந்திருக்கும் போது குற்றமற்ற கற்பினையுடைய உமையம்மை, சூரிய சந்திரர்களான ஐயனின் கண்களை விளையாட்டாக பொத்தினாள். உடனே அண்ட சராசரங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர். இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலக மக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.
அம்மை பார்வதி சிவபூஜை செய்யும் கோலம் 
 
பின் அம்மை கொம்பரார் மருங்குல் மங்கை, செவ்வாய் சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை, கயல் மாண்ட கண்ணி, பந்தணை விரலி பார்வதியம்மை, மாங்காட்டுப் பதியிலே வந்து ஐந்து குண்டங்களிலே அக்னி வளர்த்து நடுக்குண்டத்தில் ஒற்றைக்காலில் சிவ பெருமானைக் குறித்து கடுந்தவம் புரியலுற்றாள். அம்மை காமாக்ஷியின் தவத்தில் அகம் மகிழ்ந்த ஐயன் அசரீரியாக காஞ்சி நகருக்கு வருமாறு பணிக்கிறார். அம்மையும் காஞ்சிக்கு வந்து கம்பா நதிக்கரையில் , நான்கு வேதங்களுமே நான்கு கிளைகளாக அமையப் பெற்ற அற்புத மாமரத்தின் அடியிலே, மணலாலேயே சிவலிங்கம் அமைத்து, ஐயன் அழித்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் முறையாக செய்து சிவபூஜை செய்து வரலானாள்.
அர்த்தநாரீஸ்வரர்
அப்போது எம்பெருமான் திருவண்ணாமலை சென்று இடப்பாகம் பெற தவம் செய்யுமாறு கூற அம்மையும் திருவண்ணாமலை வந்து பவழக் குன்று மலையில் பர்ண சாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். பின் கார்த்திகை மாதம் பௌர்ணமியுடன் கூடிய கார்த்திகை நன்னாளில் பிரதோஷ காலத்தில் ஜோதி தரிசனம் கண்டு இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார். எனவே தான் மலை மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் சமயத்தில் அருணாசலேஸ்வரர் அர்த்த நாரீசுவரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவ்வாறு அம்மை இடப்பாகம் பெற்ற தினமே திருக்கார்த்திகை திருநாளாகும்.


இறைவன் ஒளி வடிவானவன் என்பதே நமது வேதங்களில் காணப்படும் உண்மை. எனவேதான் பல்வேறு அருளாளர்கள் இறைவனை ஜோதி வடிவன் என்று பாடியுள்ளனர். "அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்" என்று வள்ளலாரும், "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி" என்று மாணிக்கவாசகரும், "எரிகின்ற இள ஞாயிறன்ன மேனி", " ஒளி வளர் விளக்கே", "ஒளிச்சுடரான மூர்த்தி" என்றும் ஆன்றோர் பலர் ஆண்டவனைப் பாடிப்பரவியுள்ளனர். உண்மையான உலக அதிசயமான உலக அற்புத தெய்வக்குழந்தை திருஞான சம்பந்தரின் பதிகத்தில் ஒன்பதாம் பாடல் இந்த அருட்பெருஞ்சோதியை போற்றி வணங்குகின்றது.
ஆணோ பெண்ணோ அரிவையோ என்று இருவரும் காணா கடவுள்
தன்னை இன்னான் என காண்பரிய தழல் ஜோதி
என்று தேவாரம் போற்றுகின்றது எம்பெருமானை. தழல் தூணே ஜோதி லிங்கம். அந்த ஜோதி ஸ்வரூபனை ஜோதி வடிவமாக வணங்கும் நாளே திருவண்ணாமலையில் சிறப்பாக கொண்டாடப்படும் திருக்கார்த்திகை ஆகும்.




அண்ணாமலை புராணம் தொடரும்..........

2 comments:

ஷைலஜா said...

நல்ல இடுகை

S.Muruganandam said...

மிக்க நன்றி ஷைலஜா.