Friday, August 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -5

திருச்சிற்றம்பலம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவிலும் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.





அதிகார நந்தியில் எம் கோனும்
அன்ன வாகனத்தில் எங்கள் பிராட்டியும்
சேவை சாதிக்கும் எழிற்கோலம்






என்ன நிறைய நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டதா? அன்பர்களே இந்நேரம் இம்மண்டபத்தின் அற்புத ஒவியங்களை கண்டு களித்தீர்களா?. ஐயன் சன்னதிக்கு உள்ளே செல்லும் முன் முதலில் சன்னதி முகப்பில் உள்ள கஜலக்ஷ்மியை வணங்கி விட்டு உள்ளே செல்வோமா? கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் லிங்க ரூபத்தில் கர்ப்பகிரகத்தில் அருள் பாலிக்கின்றார் அகத்தீஸ்வரர், அப்பருக்கு சூலை நோயை கொடுத்து ஆட்கொண்டதைப் போல, பொம்மராஜனின் சூலை நோயைத் தீர்த்து ஆட்கொண்ட வள்ளலை வணங்கி நிற்கும் போது மனதில் ஒரு அற்புதமான நிம்மதி. ஐயனின் அருட்கருணை நம்மை அப்படியே ஆட்கொள்கின்றது. ஐயனுக்கு வலப்புறம் கணேசர். அர்த்த மண்டபத்தின் முன்னை கல்லால் ஆன துவாரபாலாகர்கள். ஆலம் உண்ட நீலகண்டனை, மாதொரு பாகனை, கங்கை தங்கிய சடையனை, தியாகராஜனை வணங்கி அவர் சன்னதியை வலம் வரும் போது கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமுர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வ மூர்த்தங்களை கண்டு வணங்கலாம்.






உள் பிரகாரத்தில் பின்புறம் , இருந்தாடும் அழகர் சோமாஸ்கந்தர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் சன்னதி, நால்வர் சன்னதி, மற்றும் பிக்ஷாடணர் சன்னதி அமைந்துள்ளது. சுந்தர பிச்சாண்டவரின் மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. நாள் முழுவதும் அப்படியே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவருடைய திருவாசியும், ஜடாமுடியும், தோளில் தாங்கிய சூலமும், மானுக்கு புல் உறுத்தும் அழகும், கையில் உள்ள பிச்சை பாத்திரமும், திருப்பாதங்களில் உள்ள பாதுகைகளும், அருகில் மோகினியாக ஒய்யாரமாக சாய்ந்து, கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி தண்டத்தில் இடக்கரத்தை ஊன்றிய வண்ணம் அம்மன் எழிலாக நிற்கும் அந்த அற்புத அழகு கண்ணை விட்டு அகல மறுக்கின்றது.






அன்னவாகனமேறி அழகாக ஒடி வரும்
அன்னை அகிலாண்டேஸ்வரி




உட்பிரகாரத்தின் வடப்புரம், சண்டேசுரர் சன்னதி, மற்றும் நடராஜர் சன்னதி, ஆடல் வல்லானுடன் நால்வர் பெருமக்களும் , சிறிய ஆடல்வல்லான் மற்றும் கணேசர் மூர்த்தங்கள் அருமையாக உள்ளன , அம்பலவாணருக்கு எதிரே சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடுத்து அம்மன் சன்னதி அம்மை அகிலாண்ட நாயகியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி மேலூர் திருவுடையம்மன், கிரியா சக்தி திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மற்றும் ஞான சக்தி திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்னும் முப்பெரும் தேவியர் அருள் பாலிக்கின்றனர். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை, அகிலாண்ட ஈஸ்வரி அருள்பாலிக்கின்றார். அன்னையை ஐயனையும் ஒருமித்து வணங்கி வெளியே வந்து அமர்ந்து அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தால் ஒரு அற்புத நிம்மதி. மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் ஒரு அருமையான கோயில் இது.


பொதுவாக பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் அதிகாலை அதிகார நந்தி சேவை, ஐந்தாம் திருநாள் நள்ளிரவு வெள்ளை ரிஷப சேவை, ஏழாம் திருநாள் பகல் தேரோட்டம், மற்றும் பத்தாம் திருநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

இத்திருக்கோவிலிலும் மூன்றாம் திருநாள் அதிகார நந்தி சேவை மிகவும் சிறப்பாக கொண்டாடபப்டுகின்றது. பஞ்ச முர்த்திகளுக்கும் அற்புதமான அலங்காரம் மற்றும் யானை முன் செல்ல நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள் பக்தர்களை மகிழ்விக்கவும், சிறப்பு மேள தாளங்களுடன் அம்மையப்பர் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சாம்பவி தீஷை அருளுகின்றனர்.


யானை பூஜை செய்யும் காட்சி




நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள்





இவ்வாறு அதிகார நந்தி சேவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது இத்திருக்கோவிலில். பக்தர்களுக்கு அருளும் பொருட்டி சிவசக்தி அங்கங்கே நின்று நாதஸ்வர இசை கேட்டு அருள் பாலிக்கு காட்சியை காண கண் கோடி வேண்டும்.



அம்மையப்பர் அருட்கோலம்




அன்னவாகனமேறி இன்னல் துடைக்க வரும் அன்னை









எழிற் குமரன் தேவியருடன்



சண்டிகேஸ்வரர்






அலங்கார மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போதைய அலங்காரம்


ஜாலந்தர முர்த்தி ஓவியம்

ஓவிய வடிவில் நால்வர்






இன்றைய தினம் அதிகாரநந்தி சேவை சமயக்குரவர்கள் நால்வர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியவர்களுக்கு அம்மையப்பர் சேவை சாதிக்கும் விதமாக இக்கோவிலில் கொண்டாடப்படுவதால் இவ்வாலய முன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புதமான இயற்கைவண்ண ஒவியங்களில் உள்ள நால்வரின் ஓவியமும் இப்பதிவில் இடம்பெறுகின்றது.




அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

2 comments:

Sankar Gurusamy said...

சிறந்த தரிசனம்... ஓம் நமசிவாய..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய