Tuesday, March 29, 2011

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா -2

இந்த பதிவிற்காக தாங்கள் LOGAN ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். என்ன ஆயிற்று கடந்த மூன்று மாதங்களாக பதிவுகள் ஒன்றும் வரவில்லையே என்று பின்னூட்டம் இட்டிருந்தார் அவர்.


செப்டெம்பர் மாதம் யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத் யாத்திரை, பின்னர் டிசம்பர் மாதம் நவ பிருந்தாவனம், மந்திராலயம் யாத்திரை பின் வீட்டில் ஒரு விஷேசம் என்று இருப்பதாலும், இமயமலையின் இனிய பயணத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி வருவதாலும் சமயம் குறைவாக இருப்பதால் பதிவிட முடியவில்லை.


பதிவிடுதலை நிறுத்தி விடும் எண்ணம் இல்லை. முடிந்த அவனருளால் அவன் தரும் தரிசனங்களை அன்பர்களாகிய தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள அவன் அருள் புரியட்டும்.



வரம் தரும் திருமயிலையின் கற்பகாம்பாள்




கபாலீஸ்வர சுவாமியின் பின்னழகு




அம்பாளின் முன்னழகும் பின்னழகும்



இந்தப் பதிவின் ஒரு சிறப்பு அம்சம் இப்படங்கள் அனைத்தும் இரவில் எடுக்கப்பட்டவை. எப்போதும் அறுபத்து மூவர் திருவிழாவை இதுவரை பகலில் தரிசனம் செய்யும் பாக்கியம்தான் கிட்டியுள்ளது சிவசக்தியின் அருளால் இந்த வருடம் இரவில் வடக்கு மாட வீதியில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. மின்னொளியில் பஞ்ச மூர்த்திகளும் மற்ற தெய்வங்களும் அற்புத காட்சி தங்கள் முன்னே.


வள்ளி தெய்வாணை உடனுறை சிங்கார வேலவர்





அழகன் முருகனின் பின்னழகு


இந்த அறுபத்து மூவர் திருவிழாவின் ஒரு சிறப்பு கபாலீச்சுர தெய்வ மூர்த்தங்கள் மட்டுமல்ல திருமயிலையின் பல்வேறு ஆலயங்களின் மட்டும் அல்ல சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக் குமரனும் இத்திருவிழாவில் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். அதனால் தானோ என்னவோ அறுபத்து மூவர் என்றவுடன் திருமயிலைதான் எல்லாருக்கும் நினைவுக்கு வருகின்றது. வருடா வருடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டுதான் செல்கின்றது. இந்த வருடம் அடியேன் இரவு சுமார் 9 மணிக்கு திருக்கயிலை நாதனாம் கபாலியை தரிசனம் செய்யும் போது அவர் அப்போது தான் வடக்கு மாட வீதிக்கு எழுந்தருளியிருந்தார்.



பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர்


திருமயிலையில் கபாலீஸ்சுரம், வெள்ளீச்சுரம், வாலீஸ்வரம், காரணீஸ்வரம், முதலிய ஏழு சிவாலயங்கள் அமைந்துள்ளன.



சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்



முத்துக்குமரன் பின்னழகு



வள்ளுவரும் வாசுகியும்



மயிலையிலே கோயில் கொண்டாய் முண்டக கண்ணியம்மா


மயிலை நாதர் நாயகியே முண்டக கண்ணியம்மா

Sunday, March 27, 2011

திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா - 2011

பிறையணி படர்சடைமுடியிடை புனலுடை இறையவனை, நாதனாகிய நன்னெறிப் பொருளினை அம்பலத்தாடும் நர்த்தனனை, நீடிய நிமலனை, விரிகடலும் மண்ணும், விண்ணும், மிகுதீயும், புனலெறி காற்றாகி எண் திசையான எம்பிரானை, பொய்யேதுமில்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, பல்லுயிர்க்கு துணையானானை, ஆதி மூர்த்தியை, அம்பலத்தானை, புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவளச்சடை முடி தாமரையானை, பாசம் நீங்கிய பசுவாகிய உயிர்களுக்கு பதியாகிய ஈசனை கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தானை, கண்ணார் கயிலை மலையானை திருமயிலையில் அருள் புரியும் கபாலியை

வேதியா, வேதகீதா, விண்ணவரண்ணா, என்றன்சோதியே, மலர்கள் தூவியொருங்கி நின்கழல்கள் காண பாதியோர் பெண்ணைக் கொண்டவனே, படர்சடை மதியஞ்சூடும் ஆதியே, ஆண்டவனே, அழகனே, அறிவனே என்று

அல்லும் பகலும் அனவரதமும் தம் உள்ளத்திலே கொண்டு, தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவத்தொண்டுக்காகவே தத்தம் செய்து, மெய்யிலே திருநீறு, வாயிலே திருவைந்தெழுத்து, நினைவிலே சிவ உருவு, நெஞ்சிலே சிவநேசம், உணர்விலே சிவபக்தி, சிந்தனையெல்லாம் சிவமயம் என்று வாழ்ந்து சிவத்தொண்டிற்காக, எவரும் செய்ய நினைக்கக் கூடிய செயல்களை செய்த தொண்டர்கள்தாம் 63 நாயன்மார்கள்.

சிவனடியே சிந்தித்து, சிவத் தொண்டிற்கே தங்களை அர்பணித்துக் கொண்டு, உடல் பொருள் ஆவி அனைத்தையும் அந்த சிவபெருமானுக்கே தத்தம் செய்த அன்பர்களை பெருமைப் படுத்தும் நாள். இறைவன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம், சிவத்தொண்டே தம் வாழ்க்கை இலட்சியமாக வாழ்ந்து பெறக்கரிய பேறு பெற்ற அறுபத்து மூவர்களுக்கும் ஐயன் அருள் வழங்கும் நாள்தான் அறுபத்து மூவர் திருவிழா.
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE
முழுமுதற்க் கடவுள் கணேசன் முதலில் உலா


திருமயிலையின் கோலவிழியம்மன்


அன்பர்கள் ஐயனை வணங்கியபடி முன்னே செல்ல ஐயன் அவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே பின்னே செல்லும் நாள். மொத்த தமிழகமும் அந்த மாட வீதிகளிலே குவியும் நாள் மயிலையில் மற்ற தெய்வங்களும் ஐயனுடன் வலம் வரும் நாள் மண்குடத்திலே தாங்கள் வேண்டிக் கொண்டபடி பிரசாதம் இறைவனுக்கு படைத்து அதை அன்பர்களுக்கு வழங்கும் நாள். அறுபத்து மூவர் பெருவிழா என்று அழைக்கப்படும் அந்த நாளின் சிறப்பைக் கூறிக்கொண்டே செல்லலாம். 'தொண்டர் தன் பெருமை சொல்லவும் அரிதே" என்று வியந்து தமிழ் மூதாட்டி பாராட்டியது போல ஐயனின் தொண்டர்கள் அறுபத்து மூவரையும் சிறப்பிக்கும் விழா. இவர்கள் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில், பல்வேறு குலங்களில், தோன்றியும் கூட சிவபக்தி என்னும் ஒரே சீர்மை பெற்ற அருள் கூடாரத்துள் ஒன்றுபட்டவர்கள். இவர்களுள் கிரகஸ்தர்களும் உண்டு, பிரம்மச்சாரிகளும் உண்டு. இசைஞானியார், அனைத்துயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைத்த காரைக்கலம்மையார், கூன் பாண்டியனாய் இருந்து நின்ற சீர் நெடுமாறனாக ஞானசம்பந்தப் பெருமானால் மாற்றப்பட்ட பாண்டியனின் துணைவி மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று பெண்களும் உண்டு.


திருஞான சம்பந்தரால் என்பிலிருந்து பெண்ணாகிய

அங்கம் பூம்பாவை



காலை சுமார் பத்து மனியளவில் தொடங்குகின்றது இந்த அற்புதத் திருவிழா.அம்மையின் ஞானப்பலுண்டு ஐயனிடம் பொற் தாளமும், முத்துப் பந்தலும், முத்துசிவிகையும் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் இந்த திருமயிலையில் நிகழ்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியாம் என்பான பெண்ணை உயிருடன் கொண்டு வந்த வரலற்றை ஐதீக முறைப்படி நிகழ்த்திக் காட்டுவதை மையமாகக் கொண்டே இவ்விழா சிறக்கின்றது. ஆலயத்திற்கு மேற் புறத்தில் உள்ள எட்டுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார் ஞான சம்பந்தப்பெருமான் அவரது தந்தையார் சிவபாத இருதயரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அப்போது மயிலை அன்பர் சிவநேச செட்டியார் சம்பந்தருக்கென்று நிச்சியித்து வைத்திருந்து அரவம் தீண்டி இறந்த பூம்பாவையின் அஸ்தி (இன்று மலர்) கலசத்துடன் அங்கு எழுந்தருளுகின்றார். அம்மண்டபத்தில் அன்று கபாலீச்சுரம் அமர்ந்தான் திருவிழா காணாதே போதியோ பூம்பாவாய் என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய பதிகத்தை இன்று ஓதுவா மூர்த்திகள் பாடுகின்றார். சம்பந்தப்பெருமானே பதிகம் பாடுவதாக ஐதீகம், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தூப தீப ஆராதனைகள் நிகழ்கின்றன. பத்தாவது பாடலை பாடி முடித்ததும் அந்த அஸ்தி கலசத்திலிருந்து அங்கம் பூம்பாவை உயிர் பெற்று எழுகின்ற வைபவம் பக்த கோடிகளின் பேரார்வ முழக்கத்திற்கிடையே நிகழ்கின்றது. சிவநேசர் அங்கம் பூம்பாவையை ஏற்றுக் கொள்ள வேண்ட இவள் நும் செல்வியல்ல இறையருளால் தோன்றிய எம் செல்வி என்று அங்கம் பூம்பாவையை சிவத்தொண்டில் ஈடுபடுத்திகின்றார் சம்பந்தப் பெருமான்.

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்

அண்ணலார் அடியார்தம்மை அமுது செய்வித்தல்

கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்

உண்மையாம் எனில் உலகர் முன் வருகென உரைப்பார் என்று சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சீர் பரவும் பெரிய புராணத்தில் அங்கம் பூம்பாவையை உயிருடன் ஞான சம்பந்த பெருமான் அம்மையப்பர் அருளால் எழுப்பிய அற்புதத்தை பாடுகின்றார்.


அங்கம் பூம்பாவையும் அவரது தகப்பனார்
சிவநேச செட்டியாரும்


மாலை
3 மணியளவில் அம்மையப்பர் 63 நாயன்மார்களுக்கு அருட்காட்சி தரும் நிகழ்ச்சி துவங்குகின்றது ஐயன் சர்வ அலங்காரத்தில் வெள்ளி விமானத்திலும் அம்மையும், சண்முகரும், வினாயகரும், சண்டிகேஸ்வரரும் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அலங்கார தீபத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்று, பின் திருக்கோவில் வலம் வந்து யாக சாலை பூஜை கண்டருளி பின் விமானங்களில் எழுந்தருளி கோபுர வாசல் வழியாக பஞ்ச மூர்த்திகள் பதினாறு கால் மண்டபம் வந்து அருட்காட்சி தருகின்றனர். முதலில் நால்வர் பெருமக்களும் தனித்தனி பல்லக்கில் வந்து அம்மையப்பர் முன் வந்து வணங்கி நிற்க ஒரே சமயத்தில் ஐயனுக்கும் நாயன்மார்களுக்கும் தீபாராதனை நடைபெறுகின்றது. பின் அவர்கள் அம்மையப்பரை வலம் வந்து அம்மையப்பரை நோக்கியபடி முன் செல்கின்றனர். பின் அங்கம் பூம்பாவையும் சிவநேச செட்டியாரும் வந்து அம்மையப்பரை வணங்கி செல்கின்றனர். பின் மற்ற நாயன்மார்கள் அனைவரும் பவளக்கால் சப்பரத்தில் , நால்வர் ஒரு சப்பரத்தில் எழுந்தருளி அருள் பெற்று செல்கின்றனர் அனைத்து நாயன்மார்களும் அம்மையப்பரை வணங்கி சென்ற பின் அம்மையப்பர் மண்டபத்தை விட்டு திருவீதி உலா புறப்படுகின்றனர். அப்போதே மாட வீதியெங்கும் மக்கள் வெள்ளம், திருமயிலையின் நடுவே உள்ள கோவிலை நோக்கி வருகின்ற எல்லா வழிகளிலும் மக்கள் கூட்டம் தேன் கூட்டை நோக்கி தேனீக்கள் வருவது போல அறுபத்து மூவர் திருவிழாவை காண வருகின்றது.

சைவ சமயக் குரவர் நால்வரில் மாணிக்க வாசகர்


அறுபத்து மூவரும் எழிலாக மாட வீதிகளில்
அம்மையப்பரை வணங்கியபடி வலம் வரும் அழகு




மாட
வீதியில் மயிலையின் முண்டககக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், திரௌபதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு அருட் காட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பின் வினாயகப்பெருமான் முன்னே வர அறுபத்து மூவர்கள் ஐயனை நோக்கியபடி வரிசைக்கு இரண்டு சப்பரமாக வருகின்றனர் அவர்களுக்கு அருட்காடசி தந்த படி வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் வருகின்றார் அவருக்குப் பின்னால் அம்மை கற்பகவல்லி, பின் சண்முகர் அவருக்குப்பின் சண்டிகேஸ்வரர் என்று கபாலீச்சுவரத்தின் மூர்த்திகள் வர அவர்களுக்குப் பின் வாசுகியுடன் உலக பொதுமறையாம் திருக்குறள் அருளிய திருவள்ளுவர் வருகின்றார். அவர்களுக்குப்பின் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்த சுப்பிரமணியரும் திருவீதி உலா வருகின்றார். பின் பிரம்மாண்டமாய் கோலவிழி அம்மன் வருகின்றார்.

வெள்ளி விமானத்தில் அருள் பாலிக்கும் கபாலீஸ்வரர்




ஐயனின் பின்னழகு


மக்கள் வெள்ளத்திற்கு நடுவே அலைகடலில் நாவாய்கள் வருவது போல விமானங்கள் ஆடி வரும் அழகை எப்படித்தான் வர்ணிப்பது? பார்த்தால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வை நாம் அறிய முடியும். இன்றைய நாள் ஐயனுக்கு மண் கலயத்தில் கரும்பு சக்கரை வைத்து படைத்து அனைவருக்கும் அதை வழங்குவது மிகவும் சிறப்பான நேர்த்திக்கடன் ஆகும். பூம்பாவையை அஸ்தி கலசத்திலிருந்து ஞான சம்பந்தப்பெருமான் எழுப்பியது போல மண் கலயத்தில் நாம் எம் பெருமானுக்கு அமுது படைப்பதால் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றார் என்பது ஐதீகம். அந்த மக்கள் வெள்ளத்தில் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால், இருக்கோடு தோத்திரம் இயம்புவர் ஒரு பால், துண்ணிய பினை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் துவள்கையர் ஒரு பால் கபாலி! கபாலி! என்று ஆற்றி அழுபவர் ஒரு பால் , கயிலையே மயிலை மயிலையே கயிலை என்று துதித்து நிற்பவர் ஒரு பால், தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று போற்றி துதித்து நெக்கு நெக்கு உருகி நிற்பவர் ஒரு பால். அம்மா கற்பகவல்லி நீயே துணை அம்மா என்று அம்மையை வேண்டிநிற்பவர் ஒரு பால் என்று அனைத்து தரத்து மக்களையும் காணலாம். அன்பர்களுக்கு பிஸ்கட், சாக்கலேட், பழச்சாறு, சக்கரைப் பொங்கல், தயிர் சாதம், சித்திரான்னம், தண்ணிர், நீர் மோர், தர்பூசணிப் பழம், என்று எல்லாவிதமான பிரசாதங்களையும் வாரி வழங்குகின்றனர். அதனால் மாட வீதிகள் அன்று அசுத்தமாவது உண்மை ஆனால் அது அந்த ஐயன் அம்மை மேல் அன்பர்கள் கொண்ட பக்திக்கு ஒரு சான்று.


விரை மலர் குழல்வல்லி மறைமலர் பதவல்லி விமலி கற்பகவல்லி
அறுபத்து மூவருக்கும் அருள் பாலிக்கும் கோலம்





அந்தி சாய்ந்தபின் அனைத்து விமானங்களிலும் மின் விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. அந்த அற்புதக் காடசி நம்மை சொர்க்க லோகத்திற்கே அழைத்து செல்கின்றது. மாட வீதிகளில் உள்ள கட்டிடங்களில் கூட மின் விளக்குகள் குறிப்பாக வெள்ளீசுரர் கோபுரம் மின் விளக்குகளில் மின்னும் அழகே அழகு. நேரம் செல்ல செல்ல மக்கள் வெள்ளமும் அதிகமாகின்றது திருவீதி உலா நகர்வது இப்போது எறும்பு ஊர்வது போல ஆகிவிடுகின்றது. மாட வீதி வலம் முடித்து ஐயன் திருக்கோவில் விழா அடையும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிடுகின்றது. ஒரு முறை அந்த தெய்வீக தரிசனத்தை கண்டவர்கள் மறுபடியும் மறுபடியும் அறுபத்து மூவர் விழாவைக் காண வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவ்வளவு கூட்டம் அந்த மாட வீதிகளில் அன்று கூடுகின்றது என்பதால் தானோ என்னவோ ஆதி காலம் முதல் தமிழ் திரைப்படங்களில் அறுபத்து மூவர் திருவிழாவில் குழந்தைகள் தொலைந்து போவது போல் காட்டுகின்றனர். நான் அன்பர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்று தான் அறுபத்து மூவர் திருவிழா ஒரு மாபெரும் திருவிழா தொண்டர்களின் பெருமையை எடுத்துக் காட்டும் விழா கபாலீஸ்வரரின், கற்பகாம்பாளின் கருணையை பறை சாற்றும் விழா. ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயமாக சென்று அந்த திருவிழா கண்டு அம்மையப்பர் அருள் பெறுங்கள். .

அறுபத்து மூவர் திருவிழா தொடரும் ......