Saturday, December 31, 2011

பொன்னு பதினெட்டாம் படி பூஜை





நம்மை உயரத்திற்கு ஏற்றுபவை படிகள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நால்வரும் அவரவர்களுக்கு உரிய முறையில் நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள் அல்லவா?  ஆண்டவன் ஆலயத்தில் அமைந்துள்ள படிகள் புனிதத் தன்மையுடையவை. விஷ்ணுவாலயங்களில்  பெருமாளின் கர்ப்பகிரகங்களில் உள்ள படிகள்  “படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்று திருவேங்கடவனின் தரிசனம் எப்போதும் விரும்பிய குலசேகராழ்வாரின் பெயரால் “குலசேகரன்படி”  என்றே அழைக்கப்படுகின்றது. 

அது போலவே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் சத்திய சொரூபனாய், தர்மசாஸ்தாவாய்  ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கும் சபரிமலையின் “சத்தியம் காக்கும் பொன்னு பதினெட்டாம் படிகள்”  மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்தவை. உலகில் எந்த கோவிலிலும் இல்லாத தேவதாவிச்வாஸம் இந்த படிகளுக்கு உண்டு.

சென்ற வருடம்  ஐயப்ப சுவாமியின் விரத காலத்தில் சென்னை இராஜ அண்ணாமலைபுரத்தில் சபரி மலையைப்போலவே அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் ஆலயத்தில் பதினெட்டாம்படி பூஜையை காணும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. இப்பதிவில் பதினெட்டாம்படி பூஜையின் மகத்துவத்தை காணலாம் வருங்கள் அன்பர்களே. 
 
நலம் தரும் சபரிமலை  யாத்திரைக்கு அன்னதானப் பிரபுவை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் நாற்பது நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, பெருங்காட்டு வழியில்  கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக, குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சமாக,  சரண கோஷத்துடன்  இரவு பகல் பாராமல் மலை மலையாக ஏறி இறங்கி, கங்கை நதி போல் புண்ணிய நதியாம்  பம்பையில் நீராடி, புனிதர்களாகி,  நீலி மலை ஏறி சபரியை தரிசனம் செய்தபின்  அய்யப்பனை  தரிசனம் செய்யும் முன் பக்தர்கள் சபரிமலைக்கோவிலின் முன்னால் காணப்படும்  தெய்வாம்சம் நிரம்பிய பதினெட்டுப் படிகளின் மீது கால் வைத்துத் தாண்டியே அய்யனின் சனன்தியை அடைய வேண்டும். இந்த சபரிமலைப் பயணத்தின் தத்துவமனைத்தும் இந்தப் பதினெட்டுப் படிகளில்  அடங்கியுள்ளதென ஆன்றோர் கூறுவர். 

ஈசனுக்கு கயிலாயம். மாலவனுக்கு வைகுண்டம், பிரம்மனுக்கு சத்ய லோகம் போல பூத நாதனுக்கு பொன்னம்பலம். புராணங்களின் படி ஸ்ரீதர்ம சாஸ்தாவின் திருஅவதாரம் தான் ஐயப்பன். உலகில் தர்மத்தை  நிலை நாட்ட ஹரிஹரர்களுக்கு புத்திரனாய் அவதரித்த  தர்ம சாஸ்தா, மஹிஷி மர்த்தனத்திற்காக, பந்தளராஜன் இராஜசேகரனுக்கு பம்பையாற்றங்கரையில்   பாலகனாய் கிடைக்கப்பெற்று  பன்னிரண்டு ஆண்டுகள்  ராஜ சேவகம் செய்து, துர்மந்திரியின் சூழ்ச்சியினால் பல இன்னல் அனுபவித்து, தாயான மஹாராணியின் பொய் தலைவலிக்காக  புலிப்பால் கொண்டு வர கானகம் வந்தார். 

அங்கு நாரத முனிவர் மூலம் தன் அவதார ரகசியம் உணரப்பெற்று, மஹிஷியை வதைத்து  தேவர்கள் துன்பம் துடைத்தார். அதனால் அகமகிழ்ந்த இந்திரன் சபரிமலைக்கு எதிரில் உள்ள காந்த மலையில்  பொன் மயமான அம்பலம் ஒன்றைக்கட்டி அதன் மையத்தில் ஞான பீடம் என்ற சிம்மாசனத்தை ஏற்படுத்தி ஐயனை அதில் அமர கோரினான்.  யக்ஷ, கின்னர, கிம்புராதிகள் வாத்தியங்களை முழங்க, தேவ கன்னியர் நடனமாட, முனிவர்கள் வேதம் ஒத  தேவர்கள் ஜெய கோஷம் எழுப்ப மணிகண்டன் ஞான பீடத்தில் அமர எழுந்தருளினார், பன்னிரண்டு வயது பாலகன் உருவில் நடந்து வரும் ஐயன் உயரமாக அமைந்திருக்கும்  சிம்மாசனத்தில் உட்கார சிரமப்படக்கூடாதென்று  அங்கிருந்த பதினெட்டு தேவதைகள் கீழிருந்து பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக்கொள்ள தர்மசாஸ்தா அந்த பதினெட்டு தேவதைகளின் மேல் தனது மலர்ப்பாதம் பதித்து ஏறி ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார்.  இவ்வாறு தேவர்கள் காந்தமலையின் மேல் உள்ள ஐயனுக்கு செய்யும் பூஜையின் மாலை கற்பூர ஆரத்தியே மகர ஜோதி என்பது ஐதீகம்.  பின்னர் ஐயன் தன் கடமையை முடிக்க தேவர்கள் புலிகளாக மாறி, தாய்க்கு புலிப்பால் கொண்டு வந்து பந்தள இராஜனுக்கு உண்மையை உணர்த்தி பம்பா நதிக்கரையிலுள்ள சபரிமலையில் தனக்கு ஒரு கோவில் கட்டப்பணித்து  ஒரு அம்பால் அவ்விடத்தை காட்டி மறைந்தார். 

 
பின்னர் ஒரு சமயம் வேட்டையாட வந்த மன்னனுக்கு ஐயன் பட்டபந்த வடிவம் பூண்டு, சின்முத்திரை, ஆனந்த முத்திரை இவைகளுடன் சேவை சாதித்து பதினெட்டு தேவதைகள் இங்குள்ளது போலவே சபரி மலையில் என்னை  பதினெட்டு படிகளுடன் பிரதிஷ்டை  செய்யவும். இப்படிகளுக்கு ஜீவப்ரதானம் செய்யவும், விக்ரஹபிரதிஷ்டைக்கு ஸ்ரீபரசுராமர் வந்து சேருவார், தேவ சிற்பி விஸ்வகர்மா கட்டிட வேலைகளை கவனித்துக்கொள்ளுவார். யோகபட்டாஞ்சிதமான தவநிலையில் உள்ள என்னை போற்றி வணங்குபவர்கள் நற்கதி பெறுவர் என்று அருளினார்.

சத்ய தர்மங்களை காவல் தெய்வங்களாக கொண்டு நான் வசிக்கும் சபரி மலையில் என்னை தரிசனம் செய்ய வரும்  பக்தர்களுக்கு  அவரவர்களின் விரதநியமங்களுக்கு ஏற்ப பலாபலன்களை இந்த தேவதைகள் அருளுவார்கள். ஆகவே மனமார மண்டலகால நியமநிஷ்டையுடன் பிரம்மச்சரியம் காத்து, புலன் ஐந்து, பொறி ஐந்து, கோசங்கள் ஐந்து இவற்றுடன் மும்மலங்களையும் கூட்டி பதினெட்டு கரணங்களை அடக்கி  எவனொருவன்  முறையாக அந்தப்படிகளை  கடந்து வந்து என்னை சரணடைகின்றானோ அவன் முக்தி என்னும்  வீடுபேற்றை அடைவான்.

பதினெட்டாம் படி மிகவும் புனிதமானதாவும், முக்கியமானதாகவும் இக்கோவிலில் கருதப்படுகின்றது. சத்ய தர்மங்களின் வடிவில் கடுத்தஸ்வாமி, கருப்பஸ்வாமி, கருப்பாயி அம்மா காவல் தெய்வங்களாய் வாள் ஏந்தி காவல் காக்கின்றனர். மனதில் பக்தியின்றி, நியமநிஷ்டை குறைவாக வரும் பக்தர்களை இந்த பதினெட்டு தேவதைகளின் மேல் கால் வைக்க இவர்கள் அனுமதிப்பதில்லை என்பது ஆன்றோர் கருத்து.

தமது யாத்திரையில்  ஏறும் போது ஒரு முறையும், தரிசனம். நெய்யபிஷேகம் செய்தபின்  விடைபெறும் போது ஒரு முறை மட்டுமே  இப்படிகளை பயன்படுத்த வேண்டும்.  சிலர் இருமுடி இல்லாமாலும், மண்டலகால அளவு விரதம் இல்லாமலும்,  இப்படிகளின் மகிமை தெரியாமல் ஏறி விடும் போது இப்படிகளின் புனிதம்  கெடாமல் இருப்பதற்கும், நெறியாக  முறையாக ஏறுபவர்களுக்கு   நற்பலன்களை தர, இந்த படிகளுக்கு சக்தி கூடவும் இக்கோயில் திறக்கும் ஒவ்வொரு மாத நாளும் “படி பூஜை”  செய்து, தந்திர முறையில் இப்படிகளுக்கு புனிதத்தன்மையையும், மகிமைகளையும் புனருத்தாரணம் செய்கின்றனர்.

சபரி மலையின் முக்கிய தந்த்ரிகள் இந்த படிபூஜை செய்யும் உரிமையை பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு படி தேவனையும் தனித் தனியாக  விளித்து தியானம், ஆவாஹனம் என்று சோடசோபசார பூஜைகள் செய்து, விஸர்ஜனம் செய்து அதன் புனிதத்தன்மையை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.

 
பின்னாளில் இவ்வாலயம் பல தடவை தீக்கிரையாகியது, பல தடவை கொள்ளையர்களின் தாக்குதலுக்கும்  இலக்காயிருக்கின்றது, அப்போதெல்லாம் இப்படிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.  பிறகு ஸ்ரீதர்மசாஸ்தாவே அய்யப்பனாக அவதரித்து, ஆலயத்திருப்பணி நடத்தி இந்த திருப்படிகளில் தனது  மலர்ப்பாதங்களை வைத்து கடந்து விக்கிரஹ பிரதிஷ்டை செய்து ஜோதி வடிவில் அவ்விக்கிரகத்தில் கலந்தார் என்பர். இவ்வாறு மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்ற இந்த பதினெட்டுப்படிகள் மீண்டும் ஐயனின் தாமரைப் பாதங்கள் பட்டு புனிதம் மிகுந்து  “சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி”  என்ற அடைமொழியுடன் இன்றும் காட்சி தருகின்றன. 

இந்திரியங்கள் ஐந்து : கண், காது, மூக்கு, நாக்கு, உடல்
புலன்கள் ஐந்து : பார்வை, கேட்டல், சுவாசம், ருசி, ஸ்பரிசம்
கோசங்கள் ஐந்து : அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்
குணங்கள் மூன்று: ஸத்வ குணம், ரஜோகுணம், தமோகுணம்.
இந்த பதினெட்டையும்    ஜெயித்து, அல்லது கட்டுப்படுத்தி, இந்த பதினெட்டுப்படிகளை கடப்பவர்களுக்கு  “எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றின்றி வேறில்லை: என்ற உண்மை புலப்படும்.  ஸத் அல்லது ஆன்மா அல்லது பரப்ரமம் என்ற தெய்வ ஸாக்ஷாத்காரம். இதுதான் ஸ்ரீஐயப்பன்   கோவில் முன்வசமுள்ள பதினெட்டுப்படிகள் போதிக்கும் தத்துவம். இவற்றை கடந்தால் “தத்வமஸி” நீ எதை நாடி வந்தாயோ அதே நீயாக உள்ளாய் என்னும் உபநிஷத்  வாக்கியத்தை விளக்கும் வண்ணம் நித்தியனாய். சத்தியனாய், சாசுவதனாய், ஸச்ச்சிதானந்த ரூபனாய் ஒளி விட்டு பிரகாசிக்கின்றான் சுவாமி ஐயப்பன்.
 
முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப, பிறவி முதலே, காம குரோதங்கள் எனப்படும் பதினெட்டு துர்குணங்களுடன் பிறக்கும் மனிதர்கள், இப்பிறவியிலும் தொடர்ந்து பாவச்செயல்களைப் புரிந்து தாங்கொணா பாவச் சுமையை தாங்கி நிற்கின்றனர். இவர்கள் வருடம் தோறும்  முறையாக மாலை அணிந்து, விரதம் இருந்து  சபரிமலை வந்து  இந்த புண்ணிய பதினெட்டாம் படியைக் கடக்கும் போது ஒவ்வொரு துர்க்குணங்களாக  நீங்கி ஒவ்வொரு சித்தியாக மிகுந்து  தொடர்ந்து பதினெட்டு முறை பயணம் செய்யும் அவர்கள் சித்த புருஷர்களாய் மேல்நிலைக்கு உந்தப்பட்டு  தெய்வத்திற்கு நிகராக  போற்றப்படுகின்றனர்.

லோக நாயகனாய் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்யும் அதிகாரம் அனைவருக்கும் (சில குறிப்பிட்ட நியதிகளின் படி) உள்ளது. யார் வேண்டுமானாலும் சபரி மலை கோவில் திறந்திருக்கும் நாட்களில் பம்பையில் சென்று நீராடி, சபரிமலை ஏறி, சன்னிதானத்தின் வடக்குப்பகுதியில் உள்ள  படிக்கட்டுகளின் மூலம் சென்று பூத நாதனை, ஹரிஹரசுதனை, பந்தளத்து இராஜனை, பம்பா நதி தீரனை, வாபரின் தோழனை தரிசனம் செய்யலாம்.  ஆனால் புனிதமான இந்த பொன்னு பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் அடைந்து ஐயனை தரிசிக்க   விரதம், இருமுடி அவசியம்.

இந்த பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம். 

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம், 

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும். 

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி. 

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே  அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி
.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

பதினைந்தாம் படி – தெய்வாசுர விபாக யோகம்
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல்,  உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில்  அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி . 

சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி  தத்துவம். 


சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!

Friday, December 30, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -15

தங்கள் குழுவினர் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதிவிடுங்கள் என்று வேண்டிய ஸ்பார்க் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. ஐயா உங்களுக்காக இதோ அடுத்த பதிவு.

உத்தரகாசி சுற்றுலா மையம் 


ஜீப்பில் கேதார்நாத்திற்கு புறப்படுகின்றோம் (12-09-10)


எனவே அன்றைய தினம் (11-09-10) வழிகாட்டியை அழைத்து பேருந்து வராவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது ஜீப் வழியாக எங்களை மேலே அழைத்து செல்லுங்கள் எப்படியாவது முழு யாத்திரையும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். யாத்திரை சுமுகமாக  செல்லாமல் ஜான் ஏறினால் முழம் வழுக்குவது போல சென்று கொண்டிருந்ததால் அவருக்கும் ஒன்றும் சுரத்தில்லை. ஆயினும் அவர்களது துணை மேலாளரிடம் பேசி ஒப்புதல் வாங்கிக்கொண்டார்.  இன்னும் ஒரு சின்ன பிரச்னையும் தோன்றியது. உத்தர காசியில் நாங்கள் இருவர் தங்கும் அறையில் தங்குவதால்  அதற்குண்டான அதிகப்படி வாடகையை நாங்கள் தர வேண்டும் என்று அதன் மேலாளர் கேட்க, இதில் எங்கள் தப்பு என்ன தங்கள் பேருந்து பழுதானதால் தானே நாங்கள் இங்கு தங்க வேண்டி வந்தது என்று கூறி அவரை சமாதனப்படுத்தினோம். எப்படியும் அடுத்த நாள்  இங்கிருந்து சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் தூங்கசென்றோம். 

  
 மலை வளம் மேகமூட்டத்தினூடே (12-09-10)

அடுத்த நாள் (12-09-10) காலையில் எழுந்து தயாராகி பேருந்து நிலையம் சென்று விசாரித்த போது தராசு செல்லும் வழி நாங்கள் வரும் போது மாட்டிக்கொண்ட அதே இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால்  அடைபட்டுள்ளது எனவே வேறு வழியாக செல்ல வேண்டும் என்றார்கள். எனவே  இரண்டு ஜீப்களில் பயணப்பட்டோம். 

 JCB யந்திரம் நிலச்சரிவை சரி செய்யும் காட்சி

 நிலச்சரிவின் பின்புலத்தில் பேருந்து செல்லும் காட்சி


உத்தரகாசியில் இருந்து கேதார்நாத் செல்ல இரு பாதைகள் உள்ளன அவை என்னவென்று முதலில் காணலாமா? அன்பர்களே

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
உத்தரகாசி
தாராசு
28
1036
தாராசு
தெஹ்ரி
37
770
தெஹ்ரி
தன்சாலி
65
976
தன்சாலி
சிர்வடியா
31
2134
சிர்வடியா
தில்வாரா
42
671
தில்வாரா
அகஸ்தியமுனி
10
762
அகஸ்தியமுனி
குண்ட்சட்டி
15
976
குண்ட்சட்டி
குப்தகாசி
5
1479
குப்தகாசி
நாலா
3
1475
நாலா
ஃபடா
11
1601
ஃபடா
ராம்பூர்
9
1646
ராம்பூர்
சோன்பிரயாகை
3
1829
சோன்பிரயாகை
கௌரிகுண்டம்
5
1982
கௌரி குண்டம்
கேதார்நாத்
14(நடை)
3583

இரண்டாவது வழி உத்தரகாசி – தெஹ்ரி - கடோலியா -  கன்சாலி – குட்டு– பன்வாலி –மக்கு – த்ரியுக் நாராயண் – சோன்பிரயாக் – கௌரி குண்டம் –கேதார்நாத்.
 
எங்கள் பேருந்தில் திரு.வைத்தி  (13-09-10)

நாங்கள் இன்றைய தினம் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடியாததால் மூன்றாவது வழியில் தெஹ்ரி அணையின் பின்பக்கமாக பயணம் செய்தோம். உத்தரகாசியிலிருந்து  சௌரங்கி கால் என்னும் இடத்திற்கு பயணம் செய்தோம், பாதியில் குட்டீதி மாதா கோவில் உள்ளது. சௌரங்கி காலில் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கு ஒரு அருமையான சிவன் கோயில் இருந்தது அவரை வணங்கிப்புறபட்டோம். செல்லும் வழியில் தேவேந்திரனின் உடல் நிலை மேலும் மோசமாகியது, ஜீப்பில் குலுங்கி குலுங்கி பயணம் செய்ததால்   சாப்பிட்ட கொஞ்சமும் வாந்தி ஆகிவிட்டது, எப்படியோ பயணத்தை தொடர்ந்தோம். இப்பாதை கிராமப்பாதை என்பதால் ஒரு வழிப்பாதைதான், நடு நடுவே கிராமங்கள் வந்தன, கீழே ஓடும் ஆறு செழுமையான நெல் வயல்கள் மலையின் சரிவில்   என்று அற்புதமாக காட்சியை பார்த்துக்கொண்டே  பயணம் செய்தோம். போகப் போக தெஹ்ரி அணையின் நீர் அதிகமாகிக்கொண்டே வருவதைப் பார்த்தோம்,மலையில் ஏறு உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தோம் மேகங்கள் வந்து உரசி சென்றன, மழைச்சாரல் வேறு துவங்கியது. இவ்வாறு பயணம் செய்து கோடார், லம்ப்காவ் வழியாக ராஜாகேத் என்னும் ஊரை நோக்கிச்சென்றோம். மலை உச்சியை அடிந்து விட்டோம் அது வரை எந்த பிரசனையும் இருக்கவில்லை சுமார் 3 கி.மீ இருக்கும் போது மீண்டும் ஒரி நிலச்சரிவு. பயணம் தடைப்பட்டது. அங்கு ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது. ஒரு மணி நேரம் தங்கினோம். மேகங்கள் ஆட்டிய கண்ணாமூச்சி நாடகத்தையும் மழை பெய்யும் அழகையும், அந்தப் பகுதி மக்கள் எதுவும் நடக்காதது போல தங்கள் வயல்களில் பணி செய்வதையும், பெண்கள் மலையேறி சென்று, புல் மற்றும் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வருவதையும் பார்த்தோம்.  இன்னும் மூன்று கி.மீதான்  இங்கு மாட்டிக்கொண்டேமே என்று வழ்காட்டி நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல் அந்த ஒத்தைக் கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு  உத்தரகாசிக்கே திரும்பி கிளம்பினோம். வரும் வழியில் ஜீப் ஓட்டிகளின் கிராமம் வந்தவுடன் அவர்கள் அதற்கு மேல் வரவிரும்பாமல் எங்களை அங்கேயே இறக்கி விட்டனர். வழி எல்லா இடங்களிலும்  அடைபட்டு கிடப்பதால் யாரும் உத்தரகாசிக்கு வர தயாராக இருக்கவில்லை. கடைசியாக  இரண்டு ஜீப்காரர்கள் வந்தனர் அதிக பணம் கொடுப்பதாக சொன்னபின், அவர்களும் வழியில் ஒரு குறுக்கு வழியில் செல்ல யத்தனித்தனர், அவர்களிடம் பேசி தாஜா செய்து சென்ற வழியிலேயே  திரும்பி வந்து உத்தரகாசி அடைந்தோம்.

நிலச்சரிவு காட்சிகள்


உத்தரகாசியில் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்று  வந்து இறங்கிய போது நொந்து நூடுல்ஸ்  ஆகிவிட்டோம்   என்பார்களே அது போல்தான் இருந்தது எங்கள் நிலை.   ஒரு நாள் முழுவதும் சுற்ரியும் பயன் இல்லாமல் போனது,  அதுவும் இல்லாமல் இரண்டு நாட்கள் வீணாகப்போனது. தேவேந்திரன் உடல் நலம் மோசமானதால் சிலர் இனி எங்கும் செல்ல வேண்டாம் இப்படியே ரிஷிகேஷ் சென்று விடலாம் என்று கூற ஆரம்பித்தனர்.  எப்படியோ அவர்களை சமாதனம் செய்து கேதார்நாத் செல்ல வேண்டாம், பத்ரிநாத்  மட்டும் செல்லலாம், பேருந்து  கோவில் வரையில் செல்லும்  என்பதால் அதிக பிரச்னை இருக்காது, மேலும் உடல் நலம் இலலாமல் யாத்திரை வந்த கோபால் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது பேருந்து ஓடுனரிடமிருந்து போன் வந்தது, வண்டி சரியாகி விட்டது காலையில் உத்தரகாசி வந்து விடுவோம் என்று கூறினார்.  இனி அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதோ என்று தூங்கச்சென்றோம்.


தெஹ்ரி அணையின் சில காட்சிகள்




அடுத்தநாளும் (13-09-10) விடிந்தது காலை உணவை முடித்தோம், பேருந்தும் வந்து சேர்ந்தது, மிக்க மகிழ்ச்சியுடன் அதில் ஏறி , நல்ல பாதையிலேயே பயணம் செய்து  சம்பா சென்று விடலாம் என்று புறப்பட்டோம்,  முதலில் உத்தரகாசியின் சுரங்கபாதையை கடந்து   தராசு அடைந்தோம். அங்கிருந்த நிலச்சரிவு சரிசெய்யப்பட்டிருந்தது.  சின்யாலி சௌர் நோக்கி சென்றோம் அங்கே ஒரு நிலச்சரிவு,  ஒரு ஜீப் மாட்டிக்கொண்டிருந்தது. JCB  யந்திரம் வந்து நிலச்சரிவை சரி செய்து கொண்டிருந்த போது எங்களுடன் மாட்டிக்கொண்ட இரண்டு  இராணுவ லார்களில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் போர் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்.  எங்களுக்கு முன் சென்ற ஒரு பேருந்தின் உள்ளேயே ஒரு பாறை வந்து விழுந்ததில் ஒரு பயணி காயம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டோம். அங்குள்ள மக்கள் சிலர் காலில் GUM BOOT அணிந்து கொண்டு அந்த சேற்றில் நடந்து கடந்து சென்றனர். இவர்களைப் பார்த்து ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை.    சுமார் இரண்டு மணி நேரத்தில்  இந்த நிலச்சரிவு சரி செய்யப்பட்டது. பின்னர் கண்டிசௌர் என்ற இடத்தில் மதிய உணவை உண்டோம். 

 அந்தி நேர செக்கர் வானம்

 
  ஒரு அழகிய மலர்
அதற்கு பிறகு பயணம் மெதுவாகவே இருந்தது, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால்  பாதை ஒருவழிப்பாதை ஆகிவிட்டது. மேலும் அதிக நிலச்சரிவில் மாட்டவில்லை. அதற்குள் மாலையாகி விட்டது. அந்தி வானம் செந்நிறமாகி  எல்லாவற்றையும் செக்க சேவேல் ஆக்கியதை  புகைப்படம்  பிடித்தோம்.  சிறிது சூரிய வெளிச்சம் வந்ததால்  ஈரம்  மேகமாகி மேலே சென்று மழையாக பொழியும்  நிகழ்ச்சியை இரசித்தோம். எப்படியும் சம்பா அடைந்து விடவேண்டும் என்று ஓட்டுனர் இரவிலும் வண்டியை ஒட்டினார். இரவில் மலைகளின் பல இடங்களில் கிராமங்களில் மின் ஒளியில் ஒளிரும் அழகை கண்டு இரசித்தோம். காலையில் புறப்பட்ட நாங்கள் இவ்வாறு பல தடங்கல்களை கடந்து இரவு 8  மணியளவில் சம்பா அடைந்து, மிகவும் தேவைப்பட்ட ஒய்வெடுத்தோம். அடுத்த நாள் என்ன நடந்தது பத்ரிநாத் செல்ல முடிந்ததா? என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.   

Thursday, December 29, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -14





முக்தி தரும் சக்தி ஆலயங்கள் இரண்டையும்  மிகவும் திருப்தியாக தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன், எங்களது பேருந்து பழுதாகி ஹர்சில் கிராமத்திலேயே நின்று விட்ட காரணத்தினாலும், ஜீப் எதுவும் கிடைக்காத காரணத்தாலும், அரசு பேருந்தில் புறப்பட்டோம், ஆகியாவின் உயர்ந்த பாலமான புது வர்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த  ஜாட்கங்கா பாலத்தைக் கடந்து வரும் போது பாகீரதியின் மறு கரையில் உள்ள முக்பா கிராமத்தில் கங்கா மாதா வந்து தங்கும் கோயிலை வழிகாட்டி காட்டினார், பேருந்தில் இருந்தே புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 

 பைரான் காட் பைரவர் ஆலயம்
பின்னர் பைரான்காட் கடக்கும் போது பைரவர் ஆலயத்தையும் புகைப்படம் எடுத்துகொண்டோம். இறங்கி தரிசனம் செய்ய முடியவில்லை. இருபக்கமும் ஓங்கி வளர்ந்த, வானத்தை ஒட்டடை அடிக்கும் தேவதாரு மரங்கள், சல சலவென்று பாய்ந்து ஒடும் பாகீரதி, காற்றில் மென்மையான ஈரம் என்று சுகமான பயணம், மலைப்பாம்பு போல நெளிந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில். நடுவில் ஒரு கிராமத்தில் வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினார். அங்கு ஆப்பிள் பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கும், பேரிக்காய்  கிலோ 15  ரூபாய்க்கும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப்பொடியுடன் விற்றுக்கொண்டிருந்தார்கள், நாம் இங்கு புகைவண்டியில் பயணம் செய்யும் போது கொய்யாப்பழம் வாங்கி சாப்பிடுவது போல அங்கு ஆப்பிள் பழத்தை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். 
 
 வழியெங்கும் தேவதாரு மரங்கள் 


ஹர்சில் என்னும் இந்த கிராமம் ஹரி-சிலா என்பதின் திரிபு என்று கூறுகிறனர். ஜாலந்தரின் மனைவி மஹா தன்னை ஏமாற்றி ஜாலந்தரன் வதமாக காரணமாக இருந்ததால்  கல்லாக போக சாபம் கொடுத்தாள் எனவே மஹாவிஷ்ணு பாறையானதால் இவ்விடம் ஹரிசிலா ஆனதாம்.

முன்னரே கூறியது போல நாங்கள் பதிவு செய்திருந்தது அனைவரும் சேர்ந்து தங்கும் அறைகளுக்குத்தான், உத்தரகாசியில் உள்ள GMVN தங்கும் விடுதியில் இருவர் தங்கும் அறைகள்தான் உள்ளன , எனவே நாங்கள் கங்கோத்ரியில் இருந்து திரும்பி வரும் போது பட்வாரி என்னும் ஊரில்தான் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பட்வாரிக்கும் உத்தரகாசிக்கும் இடையே 30 கி.மீ தூரம். பட்வாரியிலிருந்து ஒரு நடைபாதை வழி கங்கோத்ரிக்கும், மற்றொரு நடைபாதை கேதார்நாத்திற்கும் உள்ளது.    எங்கள் வழிகாட்டி அங்கேயே நாம் இறங்கிக்கொள்ளலாம் என்று கூறினார், முதலிலேயே பிரம்மகாலில் மாட்டிக்கொண்டது போல இங்கு மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, உத்தரகாசி சென்று விடலாம் என்று அடம் பிடித்து, GMVN கூடுதல் மேலாளரிடம் பேசி, உத்தரகாசி செல்வதற்கு அனுமதி பெற்று இரவில் உத்தரகாசி அடைந்தோம். ஆனால் உத்தரகாசியிலிருந்தும் இரண்டு நாட்கள் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொண்ட கதையை தொடர்ந்து படியுங்கள். 

 
  
எழில்மிகு உத்திரகாசி GMVN  சுற்றுலா இல்லம்




எழிலார்ந்த பூந்தோட்டம்



  

சுற்றுலா இல்ல தோட்டத்தில் திரு.இரவி

யமுனோத்ரி தீர்த்ததை  அடைக்கும் 
தேவராஜன், தனுஷ்கோடி, சொக்கலிங்கம்

மறு நாள்  காலை பேருந்து  இல்லை என்பதால் இங்கேயே  இன்று தங்கி உத்தரகாசியை சுற்றிப் பாருங்கள் என்று வழிகாட்டி கூறினார் எனவே அதற்கு ஒத்துக்கொண்டு அங்கு தங்கினோம். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி தினமாகும் என்பதால் இங்குள்ள கோவில்களை காணச் சென்றோம். முதலில் உத்தரகாசி நகரைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா? இந்நகரம் ஒரு மாவட்ட தலை நகரம். கங்கோத்ரி செல்பவர்களுக்கு இந்நகரம் நுழைவாயிலாக உள்ளது. இந்நகரமே ஒரு புண்ணிய ஸ்தலம் உத்தர் என்றால் வடக்கு உத்தர காசி என்பது  வடக்கு காசி என்று பொருள்.  புராணங்களில் இவ்விடம் பாராஹாத் என்று அறியப்பட்துள்ளது. காசியில் உள்ளது போல் இரண்து ஆறுகள் இங்கு பாகீரதியுடன் கலக்கின்றது இந்த சங்கமங்களுக்கு இடையே இந்நகரம் அமைந்துள்ளது.  எனவே இந்நகரம் சௌமிய காசி அதாவது புனித காசி என்றும் அழைக்கப்படுகின்றது. கங்கையின் கரையில் உள்ள ஐந்து காசிகளில் இதுவும் ஒன்று. காசியில் உள்ளது போலவே  விஸ்வநாதர் ஆலயமும், மணிகர்ணிகா ஸ்நான கட்டமும் உத்திர காசியிலும் உள்ளது. 

இந்நகரம் பாகீரதியின் கரையில் ஐந்து யோசனை தூரம் பரவியுள்ளது என்று புராணங்களில்  கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் கலியுகத்தில் தெய்வங்கள் வாசம் செய்யும் இவ்விடத்தில் தங்குவது முக்தி நல்கும் என்று கூறப்பட்டுள்ளது.   கடல் மட்டத்திலிருந்து 1150 மீ உயரத்தில் இமயமலையின் மடியில் பாகீரதியின் கரையில்   இந்நகரம் அமைந்துள்ளது. 
 

 உத்தரகாசியில் பாகிரதியின் அழகு




 இரண்டு நாட்கள் உத்தர காசியில் தங்கினோம்
என்ன செய்தோம்?
மோகன், வைத்தி, தனுஷ்கோடி, தேவராஜன்

 சொக்கலிங்கம், இரவி, கணேசன்,  கோபாலன், ரேணுகா, இராதாகுமாரி, தேவேந்திரன், மனோகரன் 

(நன்றாக சாப்பிட்டுத் தூங்கினோம்) 

பாண்டவர்களின்  பாதம் பட்ட புண்ணிய பூமி இது.  முன்னர் நாம் பார்த்த லாக்ஷாகிரகத்தில் (அரக்கு மாளிகையில்) இருந்து ஸ்ரீகிருஷ்ணரின்  ஆலோசனைப்படி  சுரங்கத்தின் மூலமாக தப்பித்த பாண்டவர்கள் வெளியே வந்த இடம் உத்தரகாசி. மேலும் அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதஸ்திரம் பெற்ற  இடம் உத்தரகாசி.      ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் இங்குதான் அமைந்திருந்தது, பரசுராமர் தந்தையின் ஆனைப்படி தன் தாயார் ரேணுகாதேவியின் சிரம் கொய்த பூமியும் இதுதான். ஆயிரமாயிரம் தபோவானர்கள் தவம் செய்த பூமி இந்த பூமி. ஆதி காலத்தில் பாதைகள் இல்லாத போது இந்நகரம்தான் சார்தாம் யாத்திரையின் நுழைவாயிலாக இருந்துள்ளது.  பாகில்ய, இந்திரகீல், வருணாவத், ஐராவத மலைகள் இந்நகரின் நான்கு திசை காவல் அரணாக உள்ளன. இவற்றுள் வருணாவத்   மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.  சித்திரை மாதத்தின்  கிருஷ்ணபக்ஷ திரயோதசியன்று வாருணி என்னும் இந்த வாருணாவத் மலையை கிரி வலம் வரும் விழா நடைபெறுகின்றது.  அன்றைய தினம் முப்பத்து முக்கோடி தேவர்களும் இம்மலையில் வந்து அருளுகின்றனர். தேவர்கள் கூடும் சமௌ கி சௌரி  என்னும் இடம் இந்நகரில் அமைந்துள்ளது. இன்றும் இந்நகரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கு கூடி பக்தர்களுக்கு  நடனக்காட்சி அருளுகின்றார்கள்.  ஆதிகாலத்தில் இருந்தே  திபெத்திய வணிகர்கள் இந்நகரத்தில்  கணவாய் வழியாக வந்து வணிகம் செய்துள்ளனர்.  
 
விஸ்வநாதர் ஆலய முன் வாயில் 
 
 உத்தரகாசி விஸ்வநாதர் சன்னதி

உத்தரகாசியில் பல் வேறு திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் முதன்மையானது காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும் இங்கு அன்னை திரிசூல வடிவில் வணங்கப்படுகின்றாள். மேலும் ஜெய்ப்பூர் மன்னர் கட்டிய  ஏகாதச ருத்ரர் ஆலயம், ஞானேஸ்வரர் ஆலயம், காளி மாதா ஆலயம்,  பரசுராமர் கோயில். குடேடி தேவி ஆலயம் ஆகிய பல ஆலயங்கள் உள்ளன. ஜடபரதர் மற்றும் பல ஆசிரமங்களும் உள்ளன.  மேலும்  ஜவஹர்லால் நேரு மலையேற்ற பயிற்சிப் பள்ளியும் இவ்வூரில் உள்ளது. இந்நகரம் சில வருடங்களுக்கு முன் கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு  ஏராளமான சேதம் ஏற்பட்டது. ஆனால் பீனீக்ஸ் பறவையைப் போல எல்லாம் சரி செய்யப்பட்டு இன்று முன்னை விட பொலிவாக விளங்குகின்றது இந்நகரம். 
 மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த பரமன் சன்னதி

GMVN சுற்றுலா இல்லங்கள் எல்லாம் மிகவும் சிறப்பான முறையில் அருமையான பூங்காக்களுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த உத்தரகாசி சுற்றுலா பாகீரதி நதிக்கரையோரம் அருமையான மலர்தோட்டத்துடன் புல்வெளியுடனும் அமைந்துள்ளது. காலை எழுந்தவுடன்  சன்னலை திறந்து சூரிய ஒளியில் மின்னும் பாகீரதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு இரம்மியமான காட்சி பாகீரதி பாயும் அழகை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் நாங்கள் தேவையில்லாமல் பேருந்து பழுதாகி விட்டதால் இங்கு மாட்டிக்கொண்டதால் மனது அதில் ஒன்றவில்லை. வழிகாட்டி இங்குள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்று கூறியதால் அப்படியே நடந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றோம். 
 விஸ்வநாதர் விமானம்

மிகவும் புராதமான ஆலயம், சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்த மிருத்யுஞ்செய மூர்த்தியாய் தெற்காக சாய்ந்த வண்ணமும் அன்னை  மலைமகள் பார்வதி பிரமாண்ட திரிசூல வடிவிலும் அருள் பாலிக்கின்றனர் இந்தக்கோவிலில்.  ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் உத்தர காசியின்  மகிமை இவ்வாறு கூறபப்ட்டுள்ளது.  கலி காலத்தின் காசி இது.  பூமியில் பாவம் அதிகரித்து அரக்கர்கள் நடமாடும் காலத்தில் நான் இமய மாலியில் தங்குவேன் கலை காலத்தில்  கிழக்கு காசியைப் போல வடக்கு காசியும் பெருமை மிக்கதாகவும் விளங்கும் என்று சிவபெருமான் கூறுகின்றார்.  இங்கே சிவபெருமான் சுயம்பு லிங்க ரூபத்தில் அருள் பாலிக்கின்றார். கருவறையில் பார்வதி மற்றும்  கணேசர் சிலைகளும் உள்ளன. வெளியே நந்தியெம்பெருமான் காவல் காக்கின்றார்.  தற்போது உள்ள இக்கோவிலை தெஹ்ரி இராச்சியத்தின் அரசன்  சுதர்சன் சாவின் பாரியாள்  இராணி    கானேடி தேவி 1857l இக்கோவிலை கத்யூரி  அமைப்பில் கற்றளியாக கட்டினாள். பின்புறத்தில் வாரணாவது மலை அருமையான் பின்புலமாக விளங்குகின்றது.  மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த வரலாறு இத்தல ஐதீகமாக விளங்குகின்றது. எனவே சிவலிங்கம் தெற்கு நோக்கி சாய்ந்துள்ளது, வடநாட்டுக்கோயில்களில் நாமே, பால் , தண்ணீர் அபிஶேகம் சிவபெருமானுக்கு செய்யலாம். இங்கும் நாங்கள் பால் அபிஷேகம் செய்து வில்வம் சார்த்தி விஸ்வநாதரை வழிபட்டோம். 

விஸ்வநாதர் விமானம்
பின் புறத்தில் வார்ணாவத பர்வதம் 

அன்னை இங்கே பிரம்மாண்ட 19.5 அடி உயர திரிசூலமாக வணங்கபப்டுகின்றாள்.  இந்த திரிசூலம்  விஸ்வநாதர் சன்னதிக்கு  நேரெதிராக அமைந்துள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்த போது இந்த திரிசூலம் பய்ன்படுத்தப்படது. இந்த யுத்ததில் திரிசுலம், பரசு, சுதர்சனம் ஆகிய மூன்று ஆயுதங்களின் சக்தி உள்ளது  எனவே தேவர்கள் வெற்றி பெற்ற பின் இந்த திரி சூலத்தை இங்கே ஸ்தாபிதம் செய்தனர்.  அன்றிலிருந்து  இத்திரிசூலம் அம்மனாக வணங்கப்படுகின்றாள்.  நாம் கையால் இந்த சூலத்தை தொட்டால் அது ஆடும் ஆகவே இதன்  அடியைக் காண பிரிட்டிஷார்கள் முயற்சி செய்தார்களாம் ஆயினும் இந்த திரிசூலத்தின் அடியை காண முடியவில்லையாம்.  பிரம்மாண்ட மூன்று தலைகளுடன் பரசு ஒரு பக்கத்துடன்  அருமையாக  அருட்காட்சி தருகின்றது திரிசூலம். மகர சங்கராந்தி சமயத்தில் இங்கு மாஹ் மேளா என்னும் விழா ஒரு வாரகாலம் நதைபெறுகின்றது. அப்போது லக்ஷ கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி பாகீரதியில்  ஸ்நானம் செய்து விஸ்வநாதரை  வழிபடுகின்றனர். 

திரி சூல ரூபத்தில் பார்வதி மாதா

வெளிப்பிரகாரத்தில் பிரம்மாண்ட அரசமரம் உள்ளது. மேலும் சாக்ஷி கோபால் ஆலயம் மற்றும் மார்க்கண்டேயர் சன்னதி உள்ளன. மேலும் விநாயகருக்கும் துண்டி ராஜனுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்திக்கு அதிக முக்கியத்துவம் இல்லை போல தோன்றியது.  அருகில் இருந்த ஒரு இராமர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது  இக்கோவிலின் மரத்தடியில் இரண்டு சாதுக்களை பார்த்தோம் அதில் ஒருவர் 10  அடி ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார்.  இவர் தமிழில் பேசி எங்களை ஆச்சிரியப்படுத்தினார். சிறு வயதில் பஞ்சகாலத்தில் இங்கு ஓடி வந்தவர்,   இங்கேயே சந்நியாசி ஆகி தங்கி விட்டாராம். அவர் அருகில் இருந்தவர் வங்காளத்தை சேர்ந்தவராம் இவர்கள்  அமாவாசையன்று  அன்னதானம் செய்து வருகின்றோம் என்று கூறினார். நாங்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்த போது அதை கைகளினால் வாங்கவில்லை. தரையில் வைத்துவிடச்சொன்னார். பூமியில் பட்ட எதுவும் தானம் இல்லையாம் எனவே தரையில் வைக்க சொன்னார்.


ஒரு அழகிய ரோஜா மலர்  

விஸ்வநாதரை திவ்யமாக தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு  சுற்றுலா இல்லம் சென்றோம். மதிய உணவு உண்ட பின் மற்ற கோவிகள்ளையும் நேரு மலையேற்ற பயிற்சி பள்ளியையும் சென்று காணலாம் என்று வந்தோம், ஆனால் உணவு உண்டபின், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்றபடி ஒரு வாரமாக பயணம் செய்து கொண்டு இருப்பதால் மிகவும் அசதியாக இருந்ததால் சென்று ஒய்வெடுத்தோம்.   இன்றைய தினம் இவ்வாறு உத்தர காசியில் கழிந்தது. இனி அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாமா? அன்பர்களே.