Saturday, March 27, 2010

திருமயிலை கபாலீச்சுரம் 5


சிவநேச செட்டியார்

என்பாய் இருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை









அறுபத்து மூன்று நாயன்மார்கள்


ஐயனை வெள்ளி விமானத்தில் தரிசிக்கும் அறுபத்து மூவர்


டற்கரையோரம் அமைந்த தலத்தின் நாயகர் மக்கள் கடலின் நடுவே


கபாலீஸ்வரர்
( நடுவில் ஸ்கந்தரை தரிசனம் செய்தீர்களா?)


கற்பகவல்லி அம்பாள்



அம்பாள் பின்னழகு


சிங்கார வேலவர்

சண்டிகேஸ்வரர்



பெரியநாயகி அம்பாள் சமேத வாலீஸ்வரர்

அறுபத்து மூவர் திருவிழா

திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.


Wednesday, March 24, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -4

கயிலையே மயிலை, மயிலையே கயிலை

இனி இவ்வளவு சிறப்புகள் இத்திருக்கோவிலை வலம் வருவோமா? திருமயிலையின் நடுவே பரந்து விரிந்த மாடவீதிகளுடனும், ஐயன் நோக்கும் மேற்குப்பக்கத்தில் திருக்குளத்துடனும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிழக்கு இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து நம்மை வரவேற்கின்றது இந்த ஏழு நிலைக் கோபுரம். பஞ்ச வர்ணங்களால் வர்ணம் தீட்டப்பட்டு, புராண நிகழ்ச்சிகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்த 120 அடி உயர கோபுரம். கோபுரத்தில் சிவ சிவ என்னும் நாமமும், அன்னை சிவபூஜை செய்யும் கோலம் நியான் விளக்கில் இரவில் ஒளிரும் வண்ணம் அமைந்துள்ளது.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் அந்த கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைந்தால் நர்த்தன வினாயகர் சன்னதி, ஐயனைப் போல கூத்தாடும் பிள்ளையாரைக் கண்டவுடன் ஒரு ஆனந்தம், தானாகவே கைகள் தலையில் குட்டிக்கொள்கின்றன, தோப்புக்கரணம் போடுகின்றோம். வினாயகர் சன்னதிக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் சன்னதி ஐயன் கிழக்கு நோக்கிய முக மண்டலம் அம்மை தெற்கு நோக்கிய முக மண்டலம். பௌர்ணமியன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. நாகாபரணத்துடன் சிறப்பு அலங்காரத்துடன் பௌர்ணமியன்றும் சிறப்பாகவும், மற்ற நாட்களில் தினந்தோறும் அன்பர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று தேவாரம், திருவாசகம் பாடியும் வழிபடும் போது நாமும் இவரை வழிபடுவது ஒரு ஆனந்தம்.

மூஷிக வாகனத்தில் நர்த்தன விநாயகர்

எதிரே பசு மடம். அண்ணாமலையார் சன்னதியை அடுத்து சிங்கார வேலவர் சன்னதி. சக்தி வேல் பெற்ற சண்முகரும் ஐயனைப் போலவே மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வள்ளி தேவசேனா சகிதம் காட்சி தருகின்றார் ஆறுமுகங்களுடன் மயிலின் பன்னிரண்டு கரங்களுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுஅமர்ந்த கோலத்தில் தேவியர்கள் இருவரும் யானை வாகனத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை கார்த்திகை மைந்தனை கண்டு கண்கள் குளமாகின்றன. இம்முருகன் மீது அருணகிரிநாதர்

அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம நஞ்சற் திளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் த்தருள் கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே
விறல்நி சாரர் சேணைகளஞ்சப் பொரும் வேலா
விமல மாதபி ராமித ருஞ்செயப் புதல்வோனே
மறவல் வாணுதல் வேடைக் கொளும் பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவியக் கந்தப் பெருமாளே

என்று திருப்புகழ் பாடியுள்ளார். சிங்கார வேலவர் சன்னதி முன்னர் 16 தூண்கள் கொண்ட முன் பண்டபம் உள்ளது மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் சுதைச் சிற்பம் அற்புதம் தேவியர் இருவரும் நின்ற கோலம் அற்புதம், மேலும் வீரபாகுவும், சவுந்திர சண்டிகேஸ்வரரும் சிங்கார வேலரை வணங்கிய நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிங்கார வேலருக்கு தனி கொடி மரம் உள்ளது. ஸ்கந்தர் சஷ்டி திருவிழாவின் போது கொடியேற்றத்துடன் விழா நடைபெறுகின்றது. அங்குரார்ப்பணம், கொடியேற்றம் விடையாற்றி என்று ஒரு திருவிழாவிற்க்கே உரிய அனைத்து அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது மஹா கந்த சஷ்டி விழா. முதல் நாள் மயிலுடன் நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் சிங்கார வேலவர் யதாஸ்தானம் விடுத்து நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்த்ருளுகிறார். சிறப்பு அபிஷேகம் கண்டருளி பின் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை விநாயகர், வீரபாகு, சவுந்திர சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் வீதி இரண்டாம் பிரகாரம் உலா வருகின்றார். கந்தர் சஷ்டியன்று வடக்கு மாட வீதியில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. சூர சம்ஹாரத்திற்கு முருகன் திருத்தேரில் எழுந்தருளும் போது அன்னையரும் எழுந்தருளுகின்றார். சூரசம்ஹாரத்திற்கு தேரில் எழுந்தருளும் சுவாமி, சூரசம்ஹாரம் முடிந்த உடனே வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏழாம் நாள் சிங்கார வேலவருக்கு ஏக தின லக்ஷார்ச்சனை, மாலை திருக்கல்யாணம். திருக்கல்யாணம் முடிந்த பின் ஐராவதாமாம் வெள்ளை யானை வாகனத்தில் மாட வீதி உலா வந்து அருள் புரிகின்றார் சிங்கார வேலவர், அடுத்த 6 நாட்கள் விடாயாற்றி உற்சவம். உற்சவ களைப்பு நீங்கிய பின் யதாஸ்தானம் திரும்புகின்றார். சிங்கார வேலவரின் சன்னத்திற்கெதிரே இவரை திருப்புகழால் பாடிப்பரவிய அருணகிரி நாதர் சன்னதியும் உள்ளது.


சிங்கார வேலவர்

சிங்கார வேலவரைத் தவிர மேலும் பழனி ஆண்டவருக்கும் ஒரு தனி சன்னதியுள்ளது. வடக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் ஞான தண்டாயுத சுவாமி அருகிலேயே இத்தலத்திலே பிறந்து , வாழந்து

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்




மாறா அருள் அரன் தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அகமலர்வாம்
வீறா மலர் அளித்து அன்பு எனும் மெய் அமிர்தம் கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவதே

என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமாள் பாடிய படி மனத்தையே செம்பொன் கோவிலாக்கி , அதில் உயர் ஞானத்தை விளக்கேற்ற ஆனந்த திருமஞ்சனம் ஆட்டி அன்பாகிய அமுதை நிவேதனமாக செய்து முக்தியும் அடைந்த 63 நாயன்மார்களுக்குள் ஒருவரான வாயிலார் நாயனார் சன்னதி. வாய் பேசாமல் மவுன விரதம் பூண்டு தியானம் செய்து வந்தார், "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் எனவே வாயிலார் நாயனார் என்று திருப்பெயர் பெற்றார். வேளாளர் வகுப்பை சார்ந்தவர். மறவாமை என்னும் தியானத்தினால் மனத்திற் கோயில் அமைத்து ஞானம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது படைத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றவர். மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று இறைவனின் திருவடி அடைந்தார்.

வாயிலார் நாயனாரின் பெருமையை எம்பிரான் தோழர், வண்தொண்டர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது 'திருத்தொண்டர் தொகையில்' போற்றி உருகிப் பாடும் போது கூறுகிறார்.

" துறைக் கண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென் மயிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்"

அதாவது 'கடற்கரையில் மலிந்து விளைந்திருக்கும் செந்நிறப் பவளங்களின் ஒளியால் இருளகன்று சோதிச்சுடராய் திகழும் மயிலாப்பூரில் அவதரித்த வாயிலார் நாயனாருக்கும் அடியேன் - என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். வாயிலார் நாயனார் அன்னை கற்பகவல்லியை வணங்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் இவர் சன்னதி அமைந்துள்ளது.


நவராத்திரி மண்டபத்தூணில் அமைந்துள்ள சில அற்புத சிற்பங்கள்

வாயிலார் நாயனார் சன்னதிக்கு இடப்பக்கம் நவராத்திரி மண்டபம், கொடி மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபம். அம்மை மயிலுருவாய் இறைவனை பூசிக்கும் சிற்பம் முதலான பல அழகான சிற்பங்கள் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்கள் கொண்ட தூண்களை உடைய இந்த மண்டபத்தில் தான் அம்மை விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப்பதவல்லி, கற்பகவல்லி, நவராத்திரி கொலு தரிசனம் அருளுகின்றாள். பங்குனிப் பெருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் இம்மண்டபத்தில் தான் எழுந்தருளி கொடியேற்றம் காண்கின்றனர். கார்த்திகை ஐந்தாம் வாரம் (மார்கழியில் வந்தால் கூட) 1008 சங்குகள் இம்மண்டபத்தில் வைத்து இரண்டு காலம் பூசை நடை பெற்று கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற வாரங்கள் 108 சங்காபிஷேகம், சங்குகள் மஹா மண்டபத்தில் நந்திக்கு முன் வைத்து பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. பிரதோஷத்தன்று பிரதோஷ நாயகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி பின் கோவில் வலம் கண்டருளுகின்றார். கந்தர் சஷ்டி விழாவன்று சிங்கார வேலவர் பூஜை கண்டருள்வதும் இம்மண்டபத்தில்தான். கச்சேரிகள் மற்றும் சொற்பொழிவுகள் இம்மண்டபத்தில் தான் நடைபெறுகின்றது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் சமய நூல் நிலையம் உள்ளது. மண்டபத்தின் முன்னே அன்பர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஒரு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.


ஊஞ்சல் சேவை சாதிக்கும் கற்பகவல்லி

இம்மண்டபத்தின் இடப்பக்கம் அம்மன் சன்னதிக்கு எதிரே 4 கால் ஊஞ்சல் மண்டபம். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து அன்னையை அற்புதமாக தரிசனம் செய்யலாம். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று இம்மண்டபத்தில் தான் ஆதி பராசக்தி, ஜகத் ஜனனி, ஜகதாம்பாள், மஹா திரிபுர சுந்தரி, லலிதாம்பாள், அம்பிகை கற்பகாம்பாள் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றாள். சிங்கார வேலவர் சன்னதிக்கு எதிரே அருணகிரி நாதர் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிக்கு இடப்புறம் மேற்கு இராஜ கோபுரம். இக்கோபுரம் மூன்று நிலை கோபுரம். இக்கோபுரத்தில் நுழைந்தால் கொடி மரம், பலிபீடம். மேலே சுதை சிற்பத்தில் கற்பகாம்பாள் மயிலாய் சிவபூஜை செய்யும் கோலமும், அம்பாளது பூஜைக்கு மனம் மகிழ்ந்த மகேஸ்வரன் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்து ஏற்றுக் கொள்ளும் சிற்பங்கள் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. இராஜ கோபுரத்தின் இடப்புறம் ஞானசம்பந்தர் என்பை பெண்ணுருவாக்கிய அங்கம் பூம்பாவை சன்னதி, திருஞானசம்பந்தரும் இச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அடுத்து மேற்கிலும் வடக்கிலும் வாகன மண்டபம் பல்வேறு பக்தர்கள் வடமேற்கு மூலையில் நின்றால் ஒரே சமயத்தில் அம்மன் கோபுர கலசங்களையும், இராஜ கோபுரத்தையும் தரிசிக்கலாம் எனவே பக்தர்கள் பலர் அங்கு நின்று கோபுர தரிசனம் செய்வதைக் காணலாம்.

திருக்கோவில் வலம் தொடரும் ............

Monday, March 22, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -3

திருமயிலையூர் கபாலீசனே உன் பாதம் சரணம்



அக்காலத்திலேயே சென்னையில் இட நெருக்கடி இருந்திருக்கும் போல தோன்றுகிறது. தஞ்சை, திருச்சி மாவட்ட ஆலயங்களைப் போல பிரம்மாண்டமாக இல்லாமல் சிறிதாகவே உள்ளது கோவில் அம்மன் ஐயன் சன்னதியை சுற்றி ஒரு உள் பிரகாரம், மதில் சுவற்றைச் சுற்றியும் குளத்திற்கும் திருக்கோவிலுக்கும் இடையிலான இரண்டாவது பிரகாரம். ஐயன் திருவீதி விழா வரும் மாடவீதி மூன்றாவது பிரகாரம். இந்த மாட வீதி திருக்குளத்தையும் சுற்றி வருகின்றது. இந்த மாட வீதிகளின் அழகை இவ்வாறு கூறுவர்,

வைத்தீஸ்வரன் கோயில் விளக்கழகு;
மாயூரம் கோபுரம் அழகு;
திருவாரூர் தேரழகு;
மயிலாப்பூர் மாடவீதிகள் அழகு.

கபாலி தீர்த்தமும் இராஜ கோபுரங்களும்

இந்த மாடவீதிகளில் "காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாபநாசம் சிவன் பாடிய கபாலீஸ்வரரும், கற்பக வல்லியும், சிங்கார வேலவரும் விநாயகரும் சண்டிகேஸ்வரரும் திருவீதி வலம் வருகின்றனர். பங்குனிப் பெருவிழாவின் போது மக்கள் கூட்டத்தின் இடையில் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் அழகைக் கண்டோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை.

கிழக்கு இராஜகோபுரம்

தல விருட்சம்: புன்னை, தீர்த்தம்- கபாலி தீர்த்தம். 1)கபாலி தீர்த்தம், 2)கடவுள் தீர்த்தம், 3)வேததீர்த்தம், 4)வாலி தீர்த்தம், 5)கங்கை தீர்த்தம் ,6) வெள்ளி தீர்த்தம், 7)இராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உள்ளனவாக புராணங்கள் கூறுகின்றன. அதில் இப்போது கபாலி தீர்த்தம் மட்டும் தான் கபாலீச்சுரத்து அடுத்து மேற்கு பக்கத்தில் விளங்குகிறது. நடுவில் நீராழி மண்டபத்துடனும், மேலும் கரையில் நான்கு பக்கமும் மண்டபங்களுடன் கூடிய இக்குளத்திற்கும் ஒரு சுவையான வரலாறு உள்ளது.


கபாலி தீர்த்தம்

ஆதி காலத்தில் இந்த குளம் முகம்மதிய பக்கீர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஒரு சமயம் அந்த பக்கீர்கள் வெளியூர் சென்றிருந்த போது நவாபின் ஒரு பிராமண அமைச்சர் இத்திருக்குளத்தை வெட்டுவித்தார், திரும்பி வந்த பக்கீர்கள் நவாபிடம் முறையிட அவர் இந்துக்களும், முஸ்லிம்கள் இருவரும் இந்த குளத்தைப் பயன்படுத்துமாறு ஆனையிட்டார். மேலும் முகரம் மாதத்தின் பத்தாம் நாள் முஸ்லிம்கள் இந்த குளத்தைப் பயன்படுத்த அனுமதித்தார். இன்றும் நீதி மன்ற உத்தரவுப்படி முகரம் மற்றும் கோவில் பண்டிகை ஒரே நாளில் வந்தால் முதலில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை தரப்படுகின்றது. இத்திருக்குளத்தின் படிகளை கட்டியவர் மயிலை முத்தாலப்ப முதலியார்.




ஐயனின் திருநாமம் கபாலீஸ்வரர் . கபாலி என்று அன்புடன் அன்பர்களால் அழைக்கப்படுகின்றார். சகள மூர்த்தியாக லிங்க ரூபத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சத்யோஜாத மூர்த்தமாய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தை தன் நகத்தால் கிள்ளி எடுத்த அஷ்ட வீரட்ட நாயகர், திருஞான சம்பந்த சுவாமிகளால் நற்றாமரை மலர்மேல் நான்முகனும், நாராயணனும், முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி என்று சிறப்பிக்கப்பட்டவர். மயிலுருவாய் வழிபட்ட அம்மைக்கு மயிலுருவத்தை மாற்றி அருளியவர். பிரமன், மறைகள், இராமர், சிங்கார வேலர் ஆகியோர் வழிபட்ட பெருமான்.

கற்பகாம்பாள்

இவருக்கு கபாலீஸ்வரர் என்னும் பெயர் வர இரு ஐதீகங்கள் உள்ளன. முதலாவது பிரளய காலத்தில் சகல ஜீவராசிகளும் சிவபெருமானது காலடியிலே ஒடுங்குகின்றது. ஊழிக் காலம் முடிந்த பின் ஐயன் கையில் கபாலமேந்தி அண்ட சராசரங்களையும், சகல ஜீவராசிகளையும் மறுபடியும் உயிர்பிப்பார். அவரே எல்லாமாயும், எல்லா சக்திகளும் பெற்று எங்கும் நிறைந்த ஜோதியாக உள்ள ரூபமே கபாலீஸ்வரர் என்பது முதல் ஐதீகம்.

இரண்டாவது ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையை எம்பெருமான் கொய்தார். இது எம்பெருமானின் அஷ்ட வீரச்செயல்களுள் ஒன்று. எனவே சிவபெருமான் பிரம்மசிரச்சேத மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அவ்வாறு கொய்த பிரம்ம கபாலம் ஐயன் கையிலேயே ஒட்டிக் கொண்டது ஐயனும் பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி பிக்ஷாடணராய் அலைந்தார் இந்த கோலமே கபாலி. அன்னை கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் கற்பகமாய் அருள் பாலிக்க ஐயன் பிக்ஷடணராய் அருள் பாலிக்கின்றார்.

சைவர்களின் ஒரு பிரிவினரான கபாலிகர்கள் வழிபட்டதாலும் ஐயன் கபாலி என்ற நாமம் பெற்றிருக்கலாம். முற்காலத்தில் திருமயிலையிலும், திருவொற்றியூரிலும் கபாலிகர்கள் வழிபட்டிருக்கின்றனர்.

இந்த கபாலி நாதன் மேல் மெய்யன்பர்கள் வைத்திருக்கும் பக்திக்கு ஒரு எல்லையே இல்லை. இது அடியேனது அனுபவம். மாசி கடலாட்டு விழாவன்று அனைத்து திருக்கோவில்களில் இருந்தும் சுவாமி நீர் நிலைகளுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது வழக்கம் சென்னையின் மயிலையில் அமைந்துள்ள சைவத்திருத்தல தெய்வங்கள் எல்லாம் கலங்கரை விளக்கத்திற்கருகில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவர். மயிலையில் 7 சிவத்தலங்கள் உள்ளன. அதல்லாமல் அம்மன் கோவில்களும் அனேகம். வைணவத் திருத்தலங்களின் மூர்த்திகள் சீரணி அரங்கத்திற்கருகில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவர். ஒரு வருடம் மாசித் தீர்த்தவாரி கண்டருள சென்றிருந்தேன், காலை 9 மணிக்கே சென்று விட்டேன், வாலீசர், காரணிஸ்வரர், அப்பர் சுவாமிகள், அங்காள பரமேஸ்வரி என்று ஒவ்வொரு கோவிலில் இருந்தும் தெய்வ மூர்த்தங்கள் கடற்கரைக்கு எழுந்தருளினர், தீர்த்தவாரி நடைபெற்றது, ஒவ்வோரு தடவையும் குழுமியுள்ள பக்தர்கள் கடலில் குளித்தனர், ஆனால் யாரும் அங்கிருந்து நகரவில்லை. மணி 11 நெருங்கியது அனைவரும் ஆவலுடன் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர், அப்போது வந்தவர்களின் வாயில் ஒரே கேள்வி, "கபாலி வந்து விட்டாரா?" என்பதுதான்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

அடலானே றூரும் அடிகள் அடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்போடு கபாலீச்சுரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ரிஷப வாகனத்தில் ஊர்ந்து வருபவனும், ஆகிய பெருமான் புகழ் பரவி அப்பெருமான் உலா வரும் அந்த அழகைக் காணாது செல்வது முறையோ? என்று சம்பந்தப்பெருமான் பாடியபடி, பக்தர்கள் அனைவரும் கபாலிக்காக காத்திருந்து, தீர்த்தவாரி கண்டு கடலில் அப்பெருமானுடன் மூழ்கினர். கபாலி அங்கிருந்து புறப்பட்ட நிமிடம் அங்கு ஒருவரும் இல்லை. அவ்வளவு பக்தியா? அன்பா? பித்தா? மதிப்பா? கபாலியிடம், எல்லாம் கலந்த ஒன்று, இதுதான் கபாலியின் மகிமை. அடியார்கள் அனைவரும் கபாலி என்று ஒரு அந்நியோன்யத்துடன் அழைக்கும் அந்த அழகை என்னவென்று சொல்ல.





இராஜ கோபுரம் உள்புறம் - புன்னை வன நாதர் விமானம்

தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற 32 தலங்களுள் இது 24வது தலம். திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர் இத்தலத்தைப்பற்றி பாடியுள்ளனர். இத்தலத்தின் புகழ் நந்தி கலம்பகம், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகியவற்றிலும் பேசப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களைப் பாடியுள்ளார். மயிலையில் பல காலம் தங்கி வாழந்த இசை வித்தகர் பாபநாசம் சிவன் வித்யா ரத்னா சத்வானந்தா போன்றோர், தமிழில் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளைப் பற்றியும் தேனான கீர்த்தனைகளை பாடியுள்ளார். தாச்சி அருணாசல முதலியார் கற்பகாம்பாளின் மேல் பதிகம் பாடியுள்ளார்.

விண்களார் தொழும் விளக்கிணைத்
துளக்கிலா
விகிர்தனை விழவாரும்
மண்களார்துதித் தன்பரா யின்புறும்
வள்ளலை மருவித்தம்

கண்களார்தரக் கண்டு நங்
கடிக்குளத்
துறைதரு கற்பகத்தைப்
பண்களார்தரப் பாடுவார்
கேடிலர்
பழியிலர் புகழாமே. என்பது திருஞான சம்பந்தர் தேவாரம்

Saturday, March 20, 2010

திருமயிலை கபாலீச்சுரம் -2

ஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி கற்பகாம்பாள்

நவராத்திரி கொலு தர்பார் காட்சி

முதற்பதிவில் மயிலாப்பூரின் பல்வேறு நாமங்களையும் அதற்கான காரணங்களையும் கண்டோம். இப்பதிவில் திருமயிலாப்பூர் என்னும் திருநாமம் வரக்காரணமான அம்மையப்பரின் திருவிளையாடளையும், இத்திருவிளையாடல் பல் வேறு இடங்களில், நிகழ்ச்சிகளில் எப்படி இடம் பெறுகின்றது என்பதையும் காணலாம் அன்பர்களே.


ஒரு தூண் சிற்பத்திலே முழுக்கோவில்

ஒரு தூணின் ஒரு பக்கத்திலே இத்தலத்தையே சித்தரித்துள்ள சிற்பியின் திறமையை என்ன என்று சொல்ல, திருமயிலையின் கிழக்கு கோபுரம் 7 நிலை நெடிதுயர்ந்த இராஜகோபுரம். மேற்கு கோபுரம் மூன்று நிலை சிறிய கோபுரம். இந்த தூண் சிற்பத்தின் மேல் பகுதியில் 7 நிலை இராஜ கோபுரத்தையும் கீழ் பகுதியில் மூன்று நிலை இராஜ கோபுரத்தையும் காண்கின்றீர்கள். மேலும் புன்னை மரத்தடியில் ஈசனை அன்னை அர்சிக்கும் காட்சியையும் காண்கின்றீர்கள். இன்னும் ஒரு நுணுக்கமும் உள்ளது இச்சிற்பத்தில் மேற்கு கோபுரத்தில் நுழைந்தவுடன் ஐயனின் திருமுக தரிசனம் கிடைக்கும் என்பதையும், கபாலீஸ்வரப்பெருமானின் அருவுருவ லிங்கத்திருமேனி சத்யோஜாதம் எனப்படும் மேற்கு நோக்கிய திருமேனி. இத்தி்ருமேனியில் தாரை ஐயனின் வலப்பக்கம் இருக்கும், இச்சிற்பத்திலும் சிற்பி அவ்வாறே வடித்துள்ளார். இச்சிற்பத்தை நவராத்திரி மண்டபத்தின் ஒரு தூணில் காணலாம்.



இந்த சிற்பத்திலே ஐயனின் திருமேனி சத்யோஜாத மேனி, மேலே உள்ள மலர் மாலை, மயிலுருவில் சிவ பூஜை செய்யும் அன்னையின் அலகில் உள்ள புன்னை மலர், புன்னை மரத்தின், இலை, மலர்,காய், வணங்கி நிற்கும் அன்பர்கள் அனைவருமே அப்படியே தத்ரூபம், அன்று நடந்ததை இன்று நம் கண் முன் கொண்டு வந்து காட்டும் அற்புத நிவந்த கல்வெட்டின் சிற்பம். அன்னை கற்பகாம்பாளின் சன்னதிக்கு முன்னர் இச்சிற்பத்தைக் காணலாம்.




கருணைத்தெய்வம் கற்பகாம்பாள் மாதா மாதம் நிறை வெள்ளியன்று ஊஞ்சல் சேவை தந்தருளும் ஊஞ்சல் மண்டபத்தில் ஒரு தூணில் உள்ளது இச்சிற்பம். இவ்வாறு சிற்பிகள் செதுக்கிய இவ்வரலாறு என்ன, இத்தலம் மயிலாப்பூர் என்றழைக்கப்படும் காரணம் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா? அந்த அம்மையப்பரின் நாடகத்தை கீழே காணுங்கள்.


ஒரு சமயம் பக்திப் பனியாய்க் கவிந்து இப்பாருலகத்தை காக்கும் பரமனுலகாம் கயிலங்கிரியில் சிவபெருமான் அம்மை பார்வதிக்கு, மலை மகளுக்கு, கௌரிக்கு, உமையம்மைக்கு ஓங்காரத்தின் தத்துவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார், அப்போது அம்மை அங்கு ஆடிக் கொண்டிருந்த மயிலை ஆர்வத்துடன் நோக்க கோபம் கொண்ட ஐயன் அம்மையை பூவுலகில் சென்று மயிலாக பிறக்குமாறும் தக்க சமயத்தில் வந்து ஆட்கொள்வதாகவும் கூறினார். அம்மையும் மயிலாப்பூர் வந்து புன்னை வனத்தில் புள்ளி மயில் உருவில் மாசக்தி அன்னை பிரணவ வடிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கயிலை நாதராம் சிவபெருமான் அன்னை இல்லாமல் தவித்தார் சக்தி இல்லாமல் சிவம் ஏது, அவரே இப்பூவுலகம் வந்தார். ஒரு புன்னை மரத்தடியில் சிவலிங்க உருவுடன் அமர்ந்து அன்னையின் பூஜைக்காக காத்துக்கொண்டிருந்தார். மயில் உருவில் இருந்த அன்னை வாவியில் நீராடி ,தன் அலகினால் புன்னை மலர்களை எடுத்து சிவலிங்கத்தை சுற்றி வந்து அலகிலிருந்த மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பூஜை செய்தாள் அம்மையின் பூஜையினால் பிரசன்னமான ஐயன் அம்மையை ஆட்கொண்டு இருவரும் அத்தலத்திலேயே , அம்மை வேண்டுவனருக்கு வேண்டும் வழங்கும் கற்பகாம்பாளாகவும், ஐயன் பிச்சாண்டியாக கபால நாதனாக கபாலீசுவரராகவும் திருக்கோவில் கொண்டனர். இப்பூவுலகத்தில் மாந்தர்களை உய்விக்க அம்மையும் ஐயனும் ஆடிய இந்த நாடகத்தை


ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்

நாடி அர்சித்த நாயகியாம் நின் நின் நாமங்களைப்

பாடி உருகிப் பரவிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய்

காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே!


என்றுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள்.


புன்னை வன நாதர் சன்னதி


திருக்கோவிலின் தலமரமான புன்னை மரத்தின் நிழலில் அமைந்துள்ளது புன்னை வன நாதர் சன்னதி. இச்சன்னதியில் அன்னை சிவ பூஜை செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பழமை வாய்ந்த இம்மரத்தில் மஞ்சள் சரடு கட்டி மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தொட்டில் கட்டில் குழந்தை பாக்கியம் வேண்டியும் அம்மையப்பரை வணங்குகின்றனர் பக்தர்கள்.


மயில் உருவில் அன்னை


பூத்துக்குலுங்கும் புன்னை மரம்


பங்குனி பௌர்ணமியின் போது திருக்கல்யாணத்திற்கு முன்பு இந்த மயிலாப்பூர் ஐதீகம் புன்னை வன நாதர் சன்னதியில் அரங்கேறுகின்றது. ஐயன் மண்டபத்திலி்ருந்து( திருக்கயிலாத்திலிருந்து) கிளம்பி வந்து அன்னை மயிலுருவில் பூஜை செய்யும் அழகை பார்த்து சொக்கி நிற்கின்றார். அன்னைக்கு தீபாராதணை ஆனவுடன் திரைச்சீலை விலக அங்கே புதுமணப்பென்ணாக சுய உருவில் கற்பகாம்பாள் அருட் காட்சி தருகின்றாள். அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அன்னை ஐயனை சுற்றி வந்து வணங்க பின்னர் இருவருமாய் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளி நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.


மேலே கற்சிற்பங்களின் அம்மையப்பரின் நாடகத்தை கண்டு களித்தோம் இனி சுதை சிற்பங்களில் அதைக் கண்டு மகிழ்வோமா?




வாணியர் மண்டபத்தின் சுதை சிற்பம்



இராஜ கோபுரத்தின் சுதை சிற்பம்



மேற்கு கோபுர வாயிலில் நுழைந்தவுடன் தரிசிக்கும் சுதை சிற்பம்


அம்மையப்பரின் இந்த நாடகத்தால் இரண்டு பெருமைகளைப் பெற்றது. ஒன்று தொண்டின் பெருமை, இன்னொன்று இல்லை எனாது யாவர்க்கும் கற்பகமாய் அன்னை அருள் வழங்கும் பெருமை.


இனி மயிலாப்பூர் என்ற பெயர் வரக்காரணம், அம்மை மயிலாக பூசை செய்ததால் மயிலை என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் புன்னை வனத்தில் மயில்கள் நிறைந்திருந்து மயில்கள் அகவிய வண்ணம் இருந்ததால் மயிலாப்பு என்று திருநாவுக்கரசரால் அழைக்கப்பட்டு இன்றைக்கு மயிலாப்பூர் என்று அழைப்படுகின்றது என்போரும் உண்டு. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த கிரேக்க அறிஞர் தாலமி (காலம் கி.பி 119 -கி.பி 161) இத்தலத்தை தமது பயண நூலில் மலியார்பா என்று குறிப்படுகின்றார் "வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம் வருவாரை யெதிர் கண்டோம் மயிலாப்புள்ளே என்று” அப்பர் பெருமான் பாடியுள்ளார். 5ம் நூற்றாண்டில் திருமழிசை ஆழ்வார் "மாமயிலை" என்றும், 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை" என்றும், திருமழிசை ஆழ்வார் "மாடமாமயிலை" என்றும் குறிப்பிடுகின்றார்.




பங்குனிப்பெருவிழாவின் முதல் நாள் இரவு ஐயன் ஸ்தல விருட்சமான புன்னை மர வாகன சேவை தந்தருளுகின்றார். அப்போதும் அன்னை மயிலுருவில் சிவ பூஜை செய்யும் கோலத்தில் கபாலீஸ்வரப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோலம். முன்னே மயிலைக் காண்கிறோம். பின்னே உள்ளுறைப் பொருளாய் அன்னை. சகல ஜீவராசிகளிலும் உறைபவள் அவள் தான் என்பதை உணர்த்தவா இந்த நாடகம் நடந்தேறியது.


அன்னை சிவபூஜை செய்யும் ஓவியம்


திருஞான சம்பந்தரின் பதிகங்கள் மற்றும் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் முதலியவற்றில் கபாலீச்சுரம் முற்காலத்தில் கடற்கரையோரம் இருந்திருக்கின்றது என்று தெரிகின்றது, கடல் கொண்டதாலோ அல்லது போர்ச்சுகீசிரியர்கள் காலத்தில், (1565 ல் போர்ச்சிக்கீசியப் போரில்) அவ்வாலயம் அழிக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.



மின் விளக்கு ஒளியில்


சாந்தோம் தேவாலயத்தில் 1923ம் ஆண்டில் நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியின் போது புராண திருக்கோவிலின் தூண்கள் மற்றும் இராஜ இராஜ சோழரின் சில கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய கோவிலின் தூண்கள் விஜய நகர பாணியில் உள்ளன.


திருமயிலை பெருமைகள் வளரும்