Thursday, September 3, 2009

கணபதி பப்பா மோரியா

இன்று அனந்த சதுர்த்தசி தினம், விநாயக சதுர்த்தியன்று நாம் எல்லோரும் உய்ய நம் இல்லத்திற்க்கு வந்த மங்கள மூர்த்தி விநாயகர் பத்து நாட்களாக நமது விக்னங்களை எல்லாம் நீக்கி நமக்கு அருள் வழங்கிவிட்டி தம்முடைய லோகம் திரும்பும் நாள். இன்று பூஜை செய்யப்பட்ட விக்கிரங்கள் எல்லாம் நீர்நிலைகளில் கரைக்கப்படும் நாள்.

லால்பாக் சா ராஜா


மும்பை மாநகரின் மிகவும் பிரசித்த பெற்ற விநாயகர் லால் பாக்கின் ராஜா. கேட்டவருக்கு கேட்ட வரம் தருபவர் என்பதால் இவரை தரிசனம் செய்ய பத்து நாட்களும் கூட்டம் அலை மோதும். 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும் இவரை தரிசனம் செய்ய. அது போல அவருக்கு குவியும் காணிக்கைகளும் கோடிக்கணக்கில் குவிகின்றது அவை கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் என்று நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.




தன்னுடைய தர்பாரை விட்டு கிளம்பும் லால் பாக்கின் ராஜா



மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் விநாயக சதுர்த்தியும் , விநாயகர் வழிபாடும் சிறப்பாக நடைபெறுகின்றது. முந்நாளில் இங்கும் கணேச பூஜை அவரவர் இல்லங்களில் சிறிய அளவில்தான் நடைபெற்று வந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் லோகாமான்ய கங்காதர திலகர் இதை சர்வஜானிக் அதாவது அனைவரும் இனைந்து கொண்டாடும் விழாவாக மாற்றி அமைத்தார் அந்த வழக்கம் இன்றும் தொடர்கின்றது.

டற்கரையில் விநாயகர் சிலைகளை வழியனுப்பும் காட்சிகள்


விநாயாகர் சதுர்த்தி தொடங்கி மஹாராஷ்ட்டிரா மாநிலமெங்கும் ஒவ்வொரு வீதியிலும் ஒரு பந்தல் இருக்கும் அதில் ஒரு கணபதி வந்தமர்ந்து அருள் புரிவார். பின்னர் பத்து நாட்கள் கழித்து அனந்த சதுர்த்தசி அன்று ரூபமில்லாத அந்த பரம்பொருள் ரூப வடிவில் நமக்காக இறங்கி வந்தவர் பின்னர் அரூபமாக கணேச லோகம் செல்வதை குறிக்கும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றார். மும்பை நகரில் மிக சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் சில காட்சிகள்.

இல்லங்களில் பூஜிக்கும் விநாயகர் அடுத்த நாளே வழியனுப்படுகின்றார் மற்றும் மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஏழாம் நாள் கௌரி விசர்ஜன் என்று அவரவர்கள் வசதிக்கேற்ப பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலையிலும் மாலையிலும் அனைவரும் ஒன்று கூடி பஜனைப் பாடல்கள் பாடி ஆரத்தி நடைபெறுகின்றது இறுதியாக பௌர்ணமிக்கு முதல் நாள் அனந்த சதுர்த்தியன்று
நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றார்.

மாலை துவங்கி விடிய விடிய நடைபெறுகின்றது சிலை கரைப்பு. மும்பை நகரமே திரண்டு வந்து தங்களின் இஷ்ட தெய்வத்தை வழியனுப்புகின்றது. அனைவரும் கணபதி பப்பா மோரியா புத்ச்வா வருஷி லவ்க்கி யா. அதாவது அடுத்த வருடம் சீக்கிரம் வாருங்கள் என்று வழியனுப்புகின்றனர் மங்கள் மூர்த்தி கஜானனரை.