Wednesday, November 12, 2008

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

”அப்பா! சாமி வெள்ளையா மாறீட்டாரு ” ன்னு ஒரு நாள் காரைக்காலில், சௌந்தராம்பிகை சமேத கயிலாச நாதர் ஆலயத்தில் என் மகள் ஓடி வந்து என்று படபடப்பாக கூறினாள், என்னடா இது சுவாமி கூட Fair and lovely போட்டு வெள்ளையாகிவிட்டாரோ? ன்னு சந்தேகத்தோட உள்ள போயி பார்த்தால் சுவாமி அன்னாபிஷேகத்தில் அற்புதமாக அருட்காட்சி தந்துகிட்டு இருந்தார். பின் சுவாமி நிறம் மாறவில்லை அன்னாபிஷேகம் கண்டருளுகிறாருன்னு மகளுக்கு விளக்கினேன், வாங்களேன் நீங்களும் அன்னாபிஷேகம்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க.




அன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி



சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

முதல் முதலில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது "மயிலையே கயிலை" ஆன திருமயிலையில், அன்று ஏதோ தோன்றியது கபாலீச்வரரையும், கற்பகவல்லி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று, அலுவகத்திலிருந்து நேராக திருக்கோவில் சென்றேன். எப்போதும் 4.30 மணிக்கே திறந்து விடும் கபாலீஸ்வரர் சன்னதியில் அன்று மட்டும் திரை போடப்பட்டிருந்தது. 6:30 மணியளவில்தான் தரிசனம் கிடைத்தது ஆனால் அற்புதமான தரிசனம் எப்போதும் கருநிறமாக இருக்கும் எம்பெருமானின் திருமேனி அன்று மட்டும் வெண்ணிறமாக இருந்தது. விபூதி அலங்கரம் போல் தோன்றவில்லை அர்ச்சகரிடம் விசாரித்த போது இன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

இரண்டாவது முறை அன்னாபிஷேகம் தரிசித்தது.  காரைக்காலில். அக்கோவிலில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்த விதமே மிக அருமையாக இருந்தது, எம்பெருமானின் மேனி முழுவதும் சாதம், ஐந்து முகங்கள் அமைக்கப்பட்டிருந்தன, கண்களுக்கு கருப்பு திராட்சை, காதிலே குண்டலமாக முறுக்கு, இரண்டு பக்கமும் புடலங்காய், ஆவுடையாரின் மீது அன்னாசிபழங்கள்், மற்ற இனிப்பு வகைகள், அந்த தரிசனத்திலே மயங்கி அன்றே மற்ற அண்ணாமலையார், பார்வதீஸ்வரர், சோமேஸ்வரர் ஆலயங்களிலும் அன்னாபிஷேக அலங்காரங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அழகில் மயங்கி அன்னாபிஷேகம் பற்றி படித்து, விசாரித்து அறிந்து கொண்டவைகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

எந்தப் பொருளை நாம் தானம் செய்தாலும் போதும் என்று யாரும் சொல்லமாட்டார்கள் ஆனால் அன்னதானத்தில் மட்டுமே போதும் என்று சொல்வார்கள் எனவே தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் ஆகும். அது போலவே எண்ணற்ற திரவியங்களினால் நாம் அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தாலும் அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. 

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் சாற்றுதல் நடைபெறுகின்றது சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளா ல் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,


வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து நன்மையடைவோமாக.

* * * * *

13 comments:

Kavinaya said...

ஆஹா, இத்தனை தலங்களிலும் அன்னாபிஷேகம் தரிசிக்க கிடைத்ததா உங்களுக்கு? முதல் முறையாக அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொண்டேன். படமும் கொள்ளை அழகு. மிக்க நன்றி.

jeevagv said...

அழகாக இருந்தது வர்ணணை ஐயா.
அன்னமயகோசமால் மூடப்பட்டிருக்கிறாய் மனிதா நீ, என உணர்த்துவது போல் உள்ளது!

மெளலி (மதுரையம்பதி) said...

மிகுந்த மற்றும் அறிய செய்திகளுடனான பதிவு. நன்றி கைலாஷி சார்.

S.Muruganandam said...

//முதல் முறையாக அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொண்டேன்//

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

முதல் தடவை அடியேனும் அன்னாபிஷேகம் கண்ட போது ஒன்றும் தெரியவில்லை, தாத்பரியமும் புரியவில்லை, பின் அவர் அனைத்தையும் அறிய வைத்தார் அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.

S.Muruganandam said...

//அன்னமயகோசமால் மூடப்பட்டிருக்கிறாய் மனிதா நீ, என உணர்த்துவது போல் உள்ளது!//


அற்புதமான வீளக்கம் ஜீவா சார்.

S.Muruganandam said...

ஐயனின் அற்புதங்கள் இன்னும் தொடரும் வந்து தரிசியுங்கள் மதுரையம்பதி ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்//

ஆகா! எம்புட்டு சத்தியமான வார்த்தை! ஒவ்வொரு பருக்கையும் தோற்றத்தில் சிவலிங்க பாணம் போலத் தான் இருக்கு!

தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர்.
அதான் ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆனது போலும்!

சிவாலயங்களில் அன்னாபிஷேகம் போலவே திருப்பாவாடை என்று வைணவத் தலங்களில் நடக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர்//

அடியேனே கேக்கணும்னு இருந்தேன்!
இது ஏன் கைலாஷி ஐயா?

பாண லிங்கத்தின் மேல் பட்டம் அன்னம் ஏன் பிரசாதத்தில் தவிர்க்கப்படுகிறது? ஆவுடையாரில் இருந்து மட்டும் அன்னம் எடுத்துத் தருவார்களா?
மற்ற அபிஷேகங்களில் லிங்கத்தின் மேல் பட்ட பஞ்சாமிர்தக் கலவையோ, தயிரோ, பாலோ தரும் போது, அன்னம் மட்டும் ஏன் அப்படித் தருவதில்லை?

S.Muruganandam said...

//சிவாலயங்களில் அன்னாபிஷேகம் போலவே திருப்பாவாடை என்று வைணவத் தலங்களில் நடக்கும்!//

சரிதான் KRS ஐயா, வைணவத்தலங்களில் அன்னாபிஷேகம் திருப்பாவாடை என்று அழைக்கப்படுகின்றது.

//பாண லிங்கத்தின் மேல் பட்டம் அன்னம் ஏன் பிரசாதத்தில் தவிர்க்கப்படுகிறது? //

லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம்( கதிர் வீச்சு) நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே ஆவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மாலை 6.00 , அதாவது சாயரட்சை சமயம் துவங்கும் பின்னர் இரண்டாம் காலம் அதாவது இரவு 8:30 மணி வரை ஐயன் திருமேனியிலேயே அன்னம் இருப்பதாலோ? இவ்வாறு விதித்திருக்கின்றனர் முன்னோர்.

மற்ற அபிஷேக பொருட்கள் ஐயன் திருமேனியில் பட்டவுடன் அவை வெளியே வந்து விடுகின்றன என்பதால் அவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

கோவி.கண்ணன் said...

கைலாஷி சார்,
வெறும் தகவலாக இல்லாமல் கிடைப்பதற்கு அறிய படத்துடன் உணர்வு பூர்வமாக எழுதி இருப்பதாக தெரிகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம்( கதிர் வீச்சு) நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே//

விளக்கத்துக்கு நன்றி கைலாஷி ஐயா!

விபூதிக் காப்பில் இறைவன் மேல் நெடுநேரம் இருந்த திருநீறைத் தருகிறார்கள்! அதை வாயிலும் போட்டுக் கொள்கிறார்கள்!
அளவு சிறிதென்றாலும் கதிர் வீச்சு, வீச்சு தானே?
அதே போன்று எலுமிச்சம்பழ மாலைகள் நெடுநேரம் இருந்து பின்னர் சாறும் ஆக்கப்படுகிறது.

இன்னும் சற்று நுணக்கினாலோ, ஆகம விற்பன்னர்களைக் கேட்டாலோ விடை கிடைக்கலாம்-ன்னு நினைக்கிறேன்!

S.Muruganandam said...

நன்றி கோவிக்கண்ணன் அவர்களே.

S.Muruganandam said...

//இன்னும் சற்று நுணக்கினாலோ, ஆகம விற்பன்னர்களைக் கேட்டாலோ விடை கிடைக்கலாம்-ன்னு நினைக்கிறேன்!//

அடியேனும் விசாரிக்கின்றேன் தாங்களும் விசாரித்து தெரியப்படுத்துங்கள்.