Friday, November 28, 2008

கார்த்திகை சோம வார விரதம் -3

சங்காபிஷேகம்



சிவலிங்க வடிவத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகு

(சென்னை அசோக் நகர் ஸ்வர்ணபுரீஸ்வரர்)


கார்த்திகை மாதத்தின் முதல் வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை கண்டோம்.

108 சங்காபிஷேகம் ( பூ வடிவில் சங்குகள்)

பின் இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி கண்டோம்.



திருமயிலையில் ஐந்தாம் வாரம் 1008 சங்காபிஷேகம்

இவ்வாரம் கார்த்திகை சோமவாரத்தன்று சிறப்பாக நடைபெறும் சங்காபிஷேகத்தின் தாத்பரியம் என்னவென்று பார்ப்போமா அன்பர்களே?





உலகத்தின் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல். பல்வேறு மந்திர தந்திர யந்திர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும் போது, இறையருளை முன் வைத்து, இறைத்தன்மையை ஈர்த்து தன்னுள் தேக்கி வைத்துக் கொண்டு, தன்னை வணங்குவோர்களுக்கு அருள் புரியும் வல்லமை பெற்றவை தெய்வ விக்ரஹங்கள். திருக்கோவில் கருவறை மூர்த்தங்களுக்கு அவ்வப்போது நிகழ்விக்கப்பெறும் அர்ச்சனாதி பூஜைகளும் அபிஷேகங்களும் இறை சக்தியை அதிகரித்து அம்மூர்த்தங்களுக்குள் தேக்கி வைப்பதற்காக ஆகமங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழியாகும்.

சுத்தமான இடத்தில் கோலங்களிட்டு அங்கே வாழை இலை பரப்பி அதில் பச்சரிசி பரப்பி அதன் மீது இறைவனை ஆவாஹனம் செய்வதற்குரிய ஒரு கலசமும், இறைவியை உருவேற்றுவதற்குரிய ஒரு கலசமும், 108 அல்லது 1008 வெண் சங்குகள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். சில ஆலயங்களில் திருக்குடங்களுக்கு பதிலாக பெரிய வலம்புரி சங்கில் இறைவனை ஆவாஹனம் செய்கின்றனர். அவற்றுள் நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட நன்னீர் நிரப்பப் பெற்று, மலர், தருப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு சங்கங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்படுகின்றன. பின் ஹோமத்துடன் தேவ பூஜா மந்திரங்களினால் பிரதான கலசத்தில் / வலம்புரி சங்கில் இறைவன் மற்றும் இறைவியின் அருள் உருவேற்றப்படுகின்றது. 108 சங்கங்கள் அமைத்திருந்தால் 108 லிங்க வடிவங்கள் அவைகளில் உருவேற்றப்படுகின்றன. 1008 சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றில் சிவபிரானது சகஸ்ரநாமாவளியிலுள்ள 1008 பெயர்களுக்குரிய வடிவங்கள் அவற்றில் உருவேற்றப்படுகின்றன. பின் திருக்குடங்களிலுள்ள இறைவர்க்கு அர்ச்சனை வேதங்கள் உள்ளிட்ட பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. தொடர்ந்து சங்கங்களிலுள்ள இறைவர்க்கு அர்ச்சனை வேதங்கள் முதலிய பூஜைகள் செய்விக்கப் பெறுகின்றன.

சிவலிங்க வடிவில் சங்கங்கள்
(மாம்பலம் சக்ர விநாயகர் ஆலயம்
)

பின் வழக்கம் போல் வேதங்கள் இசைத்தோ அல்லது திருமுறைகள் ஓதியோ கருவறை தெய்வங்களுக்கு நன்னீராட்டு நடைபெறுகின்றது. பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள், ஷோடச உபசாரங்கள் நடைபெறுகின்றது பின் உலக நன்மையை முன் வைத்து மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து கூறி ( மந்திர புஷ்பம்) இறைவர் அருள் கோரப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு நிறைவு பெறுகின்றன. ஜோதிப்பிழம்பாக விளங்கும் சிவபெருமானைக் குளிர்விப்பதற்க்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது என்று கூறுவாருமுண்டு.
வடபழனி வேங்கீஸ்வரம் 1008 சங்காபிஷேகம்

பெரும்பாலான தலங்களில் 108 சங்காபிஷேகமே நடைபெறுகின்றது ஆயினும் சிறப்பு பெற்ற சிவத்தலங்களான திருக்கடையூர், திருநாகைக் காரோணம், திருவிடைமருது‘ர், திருபுள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்), திருவாடனை, திருவெண்காடு, திருக்கடலு‘ர் திருவாதவூர், திருவையாறு, திருமறைக்காடு(வேதாரண்யம்), திருவேடகம், திருஆலவாய் (மதுரை), திருச்சி, மயிலாடுதுறை முதலிய தலங்களில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.

வரும் வாரம் பல்வேறு தலங்களில் கார்த்திகை சோமவாரத்தன்று எவ்வாறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன என்று காண்போம் அன்பர்களே.


Thursday, November 20, 2008

கார்த்திகை சோம வார விரதம் -2



ஓம் நமசிவாய



திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை



சோமவார விரதத்தின் மகிமை:


விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன்

வெண் மழுவாட்


படையவன் பாய்புலித் தோல் உடை கோவணம்

பல் கரந்தைச்


சடையவன் சாமவே தன்சசி தங்கிய

சங்கவெண்தோ


டுடையவன் ஊனமில் லியுறைமிடம்

ஒற்றியூரே.

என்று சசியை தலையில் தாங்கும் திருக்கயிலை நாதருக்கு உகந்த அஷ்டமஹா விரதங்களுள் ஒன்றான கார்த்திகை சோமவார விரதத்தின் பெருமைகளை காணலாம் வாருங்கள் அன்பர்களே.

வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார். இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு. சந்திர வர்மன் என்ற மகனுக்கு அழகிய ஒரு பெண் மகவு பிறந்தது. அவளுக்கு žமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டது. அவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று கூறினார்கள். அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர் அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார், அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து உடல் சுத்தி செய்து மந்ததிரமாகும் பால் வெண்ணிராடி , நாள் முழுதும் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள் பருவம் அடைந்தவுடன் அவளூக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடம் போது நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது, ஆயினும் žமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றி சென்றனர். žமந்தினியும் வெகு காலம் பின் தனது கணவனுடன் சோமவார விரதம் அனுஷ்டித்து வரலானாள். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம். கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைப்பிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.

சந்திரசேகரர் சூரிய பிரபை சேவை


கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை:

இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறை ஸ்கந்த புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் துயில் எழுந்து உடல் சுத்தம் செய்து , பஞ்சாட்சர மந்திரம் ஓதி உடல் முழுவதும் வெண்ணீிராடி, சந்தியாவந்தனம் முடித்து , பரம கருணாமூர்த்தியை, சங்கரனை, சம்புவை, அம்பலத்தரசை, கங்காதரரை, உமாபதியை மனதில் எந்நேரமும் தியானித்து, சிவபெருமானின் அடியவர்களான ஒரு தம்பதியரை சிவ-சக்தியாக பாவித்து பாத பூஜை செய்து வணங்கி, அவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும். விரதம் இருப்பவர் நாளின் ஒரு நேரம் மட்டுமே எளிய உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் திருக்கோவிலுக்கு சென்று உமா-மஹேஸ்வரரை வழிபட்டு, பஞ்சாமிர்தம் முதலிய இனிய பொருட்களால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து, வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிறந்த அமுதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை சிவனடியார்களுக்கு வழங்கி தாங்களும் அந்த பிரசாதத்தை உண்ணலாம். இந்த விரதத்தை முறையாக, து மனத்துடன் கடைப்பிடிப்பவர்கள், இந்த மண்ணுலகில் எல்லா செல்வங்களையும் அடைந்து அனுபவித்து இறுதியாக கைலாயப் பதவியும் அடைவர்.

கார்த்திகை சோமவாரத்தின் சிறப்பு சங்காபிஷேகம். மாலை லிங்க மூர்த்திக்கு 108 அல்லது 1008 சங்குகளில் நிரப்பிய நறுமண நீரால் அபிஷேகம் நடைபெறுகின்றது. அடுத்த வாரம் சங்காபிஷேகம் பற்றி விரிவாக காண்போம் இவ்வாரம் சங்கத்தின் சிறப்பைப் பற்றிக்காணலாம்.

சங்குகளின் மகிமை

"ஓம்" என்னும் பிரணவத்தின் வடிவத்தை ஒத்து இருக்கும் சங்கிலிருந்து ஓம் என்னும் நாதம் இயற்கையாக வருகின்றது. நாம் நமது காதில் சங்கை வைத்துக் கேட்டால் ஓம் என்னும் சப்தத்தை உணரலாம்.

உலகெல்லாம் உய்ய ஆலகால விடத்தை எம்பெருமான் தியாகராஜர் உண்ட போது அதன் வீரியத்தால் ஒரு வினாடி எம்பெருமான் மயங்கியதாகவும் அப்போது அன்னை பார்வதி திருப்பாற்கடலில் இருந்து ஒரு சங்கை எடுத்து எம்பெருமானுடைய நாபியில் வைக்க உடனே எம்பெருமான் மயக்கம் நீங்கி எழுந்து விட்டதாகவும், அவ்வளவு வீரியம் வாய்ந்தது சங்கு என்பாரும் உண்டு.

சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அந்த எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் அந்த ஓங்காரத்தாலே நாம் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் அவர் மிகவும் பிரசன்னமாகிறார் என்பது ஐதீகம். சங்காபிஷேகம் கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும் சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கை கூடும்.

சங்கு மருத்துவ குணம் உடையது. எம்பெருமானுக்கு சங்காபிஷேகம் செய்த தீர்த்தத்தை உட்கொள்வதால் வெண்குஷ்டம், மலட்டுத்தன்மை, மனநோய் முதலிய நோய்கள் குணமாகும்.

வலம்புரி சங்கு, ருத்ராக்ஷம், வினாயகர் மூன்றும் சுயம் மங்களகரமானவை பிராண பிரதிஷ்டை அவசியமில்லை. சங்கு துளசி, சாலக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூசிப்பவர்களுக்கு மஹா ஞானியாகும் பாக்கியமும், முக்காலம் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கடலில் விளைவது சங்கு. சங்கு புனிதமுடைய பொருளாகவும், பூசனைக்கு துணை புரியும் நற்கருவியாகவும் பெரியோர்களால் போற்றிக்கொள்ளப்பட்டது.

இன்றும் மேற்கு வங்காளத்தில் அவர்கள் வீட்டுப் பூசையின் போது சங்கு முழங்கிகின்றனர்.

சங்க நாதம் முழங்கும் இடத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள். விஷ்ணுவின் இடக்கரத்தில் விளங்குவது பாஞ்சசன்னியம் என்னும் சங்குதான்.

பாஞ்சசன்யம் என்னும் விலைமதிப்பற்ற சங்கு பாஞ்சன் என்னும் அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை வென்று பெற்றதாக கூறுவர். மேலும் பஞ்ச இந்திரியங்களை அடக்குவதாலும் காரணப்பெயர் உண்டானது.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட மங்கலப்பொருள்களுள் சங்கும் ஒன்று.


1008 சங்காபிஷேகம்



கடலில் அதிகமாக விளைவது இடம்புரி சங்கு.

இப்பிசாயிரம் சூழ்ந்தது இடம்புரி

இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி

வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம்

சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்ச சன்யம்.

எனவே பெருமாள் திருக்கரத்தில் விளங்கும் பாஞ்சசன்னியம் கோடியில் ஒன்று. பெருமாளுடன் எப்போது நீங்காது இருப்பது சங்கு எனவேதான் படைப்போர்புக்கு முழங்கும் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று, பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார், திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கனணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கை கண்டேன் என்று மங்களாசாசனம் செய்கின்றார் பேயாழ்வாரும். கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவள செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? என்று பாஞ்சசன்னியத்தை பத்மநாபனோடு பெருஞ்சுற்றமாக்கி வினவுகிறாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாரும்.


சங்கம் மட்டும் வலக்கரத்தில் ஏந்தி , சக்கரம் இல்லாமல் பெருமாள் சேவை சாதிக்கின்றார் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே. விஷ்ணு தலைச்சங்கம் பெற்ற திவ்ய தேசம் தலைச்சங்க நண்மதியம், இத்தலத்தில் பெருமாளுக்கு விலைமதிப்பற்ற வலம்புரி சங்கு சாற்றப்படுகின்றது. இராமாவதாரத்தில் பரதன் சங்கின் அம்சம், ஆழ்வார்களில் பொய்கையார் சங்கின் அம்சம். குற்றால நாதர் ஆலயம் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது திருக்குற்றாலத்திலே.


குபேரனின் நவநிதிகளுள் ஒன்று சங்க நிதி. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபட லக்ஷ்மி கடாட்சம் பெருகும், செல்வம் பொங்கும்.



சிவலிங்க வடிவில் சங்குகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் அழகு



"கை விட மாட்டானென்று ஊது சங்கே , கனக சபையானென்று ஊது சங்கே" என்று பாடுகின்றார் வள்ளலார் பெருமான்.

சங்கு வீரத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது. சங்கை முழங்குவதற்கு நல்ல நெஞ்சு பலம் தேவை , எனவேதான் போரில் தளபதிகள் தங்கள் சேனைகளை ஒன்று படுத்த சங்கம் முழங்கினர், சங்கம் முழங்கும் போது வீரம் பிறக்கின்றது. எனவே தான் பண்டைக்காலங்களில் போரின் போது சங்கு முழங்கப் பெற்றது. மஹா பாரத போரின் போது பஞ்ச பாண்டவர்களூள் தர்மர் அனந்த விஜயம் என்ற சங்கையும், பீமன் பவுண்டரம் என்ற சங்கினையும், அர்ச்சுனன் தேவதத்தம் என்ற சங்கினையும், நகுலன் சுகோஷம் என்ற சங்கினையும், சகாதேவன் மணி புஷ்பகம் என்ற சங்கினையும் முழங்கினர்.

ஒரு மனிதனின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளிலும் சங்கின் ஓசை முக்கியத்துவம் பெறுகின்றது. தூய்மையின் அடையாளம் சங்கு, தூய வெண்மை நிறம் கொண்டது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற பழமொழி சங்கின் உயர்வை பறை சாற்றுகின்றது. எனவே எம்பெருமான் சங்கு போன்று தூய்மையானவர் என்பதை உணர்த்த சங்கை இடது கரத்தில் ஏந்தி சேவை சாதிக்கின்றார்.

சங்கத்திற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது

ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹ’ |

தந்ந: சங்க: ப்ரசோதயாத் ||

இவ்வளவு சிறப்புகள் பெற்ற சங்கால் சிவபெருமானுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும் சங்காபிஷேகம் பற்றி அடுத்த கார்த்திகை சோமவாரத்தன்று காணலாம் அன்பர்களே.

கார்த்திகை சோமவார விரத மகிமை தொடரும்..........