Sunday, July 6, 2008

பஞ்ச சபைகள் - சித்திர அம்பலம் - திருக்குற்றாலம்

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.








சித்திர சபை




அருவியை ஒட்டி குறும்பலாவின் ஈசர் ஆலயம்







மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

தான் அந்த மானிடத்தே தங்கி விடும் - ஆனந்தம்

மொண்டு அருந்த நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக

கொண்ட திருஅம்பலத்தான் கூத்து.

உரையும் உணர்வும் அற்று நிற்கும் ஞானியர் தம் மும்மலங்களின் வாசனையை முழுவதுமாக நீக்கி, ஆணவம் முழுவதும் ஒழிந்த நிலையில் கிடைக்கின்ற பேரின்பத்தை துய்த்து இன்புறுவதன் பொருட்டு உமையம்மை தம் ஆடலைக் கண்டு வழிபடுமாறு செய்தருளும் கூத்தப்பெருமான் ஆடும் ஐந்து அம்பலங்களுள் நான்காவது அம்பலம் திருக்குற்றாலத்தின் சித்திர அம்பலம்.


குறும்பலாவின் ஈசர் குற்றாலநாதர் அருள் பாலிக்கும் திரி கூட மலை என்றழைக்கப்படும் திருகுற்றாலமலை மூன்று சிகரங்களை உடையது இவை மும்மூர்த்திகளை குறிக்கின்றது. எனவே மலையே இங்கு திருத்தலம். சித்ரா அருவியே தீர்த்தம். குழல்வாய்மொழி அம்மையின் கருணையே அருவி வெள்ளம். செண்பக மரம் நிறைந்த மலை பராசக்தியின் பச்சைத்திருமேனி, கருமேகம் அன்னையின் கடைக்கண்கள். பொதிகை மலையிலிருந்து வீசுகின்ற தென்றல் அன்னையின் அருள். கு+ தாலம் அதாவது பிறவிப்பிணியை நீக்கும் தலம் சித்ர அம்பலம் கொண்டுள்ள திருகுற்றாலம்.

திருக்குற்றாலம் பண்டை காலத்தில் மாலவன் கோவிலாக இருந்தது. அது எவ்வாறு மஹேஸ்வரன் ஆலய்மாக மாறியது, அவ்வாறு மாற்றியது யார் என்று பார்ப்போமா? அன்னை தாக்ஷாயணி, தட்சனுக்கு மகளாக பிறந்து அவனின் இச்சைக்கு புறம்பாக சிவபெருமானை மண்ந்து கொண்டதால் ஆணவம் கொண்ட தட்சன் சிவபெருமானை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒரு யாகம் நடத்துகின்றான், அதற்கு அம்மையப்பருக்கு அவன் அழைப்பும் அனுப்பவில்லை, சிவ பெருமானுக்கு தர வேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுக்கின்றான். ஆயினும் பாசத்தால் தந்தை நடத்தும் யாகத்திற்கு செல்கின்ற சதி தேவி, அவ்னால் அவமானபடுத்தப்பட அவன் யாகத்தை அழிக்க யாக குண்டத்தில் குதிக்கின்றாள். பின் அம்மைர் இமவானுக்கு மகளாக பிறந்து பார்வதியாக வளர்ந்து சிவபெருமானை குறித்து தவம் இருந்து ஐயனை மணக்கும் பேறைப் பெறுகின்றார். சிவ பார்வதி திருக்கல்யாணம் திருக்கையிலையிலே நடைபெறும் போது அனைத்து தேவர்களும், முனிவர்களும், திருக்கைலாயத்திலே கூட வடக்கு திசை தாழ்ந்து தெற்கு திசை உயர்கின்றது. எனவே உலகை சமப்படுத்த ஐயன் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்புகின்றார். தான் மட்டும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்தை காண முடியாமல் போய் விடுமே என்று அகத்தியர் வேண்ட, தகுந்த சமயத்தில் உமக்கு நான் திருமணக் காட்சியை தந்தருளுவோம் என்று ஐயன் அவரை சமானப்படுததி அனுப்ப்புகின்றார். இவ்வாறு மலைமகள் தன்னை தாம் மணந்த திருமணக்கோலத்தை அகத்தியருக்கு காட்டிய தலம் தான் திருக்குற்றாலம். அகத்தியரும் இந்த பொதிகை மலையிலே தங்கி தவம் செய்து தமிழ் வளர்த்தார்.





ஆனந்த நடராஜேஸ்வரர் அம்மை சிவகாமியுடன்






ஒரு சமயம் குறு முனி அகத்தியர் திருமால் கோவிலில் உள்ளே சென்று வழிபட முயன்ற போது அவர் உடலில் சிவ சின்னமான திருநீறு இருந்ததால் அவரை வைஷ்ணவாச்சாரியார்கள் அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட அகத்தியர் தன் உடலில் வைணவ சின்னமான திருமண் இட்டு மிகவும் கோபத்துடன் கோவிலின் உள்ளே சென்று நீண்டு நெடுமாலாக நின்ற இறைவன் தலையில் அழுத்தி "குறுகுக குறுகுக "என்று கொட்டியதால் மாலவனும் குறுகி மஹாலிங்கமானதாக ஐதீகம். கோவிலும் சங்கு அமைப்பில் இருப்பதும் இதற்கு ஒரு சான்று. பெருமாளின் இரு தேவியரில் ஸ்ரீ தேவியை குழல் வாய் மொழி அம்மையாகவும், பூ தேவியை பராசக்தியாக மாற்றினார் அகத்தியர். குழல் வாய் மொழி அம்மை ஐயனுக்கு வலப்பக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். பராசக்தி யோக பீட நாயகியாய் எழுந்தருளியுள்ளாள், எனவே இத்தலத்தை தரணி பீடம் என்றும் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர்.

அகத்தியர் அழுத்திய வடுக்கள் இன்றும் ஐயன் திருமேனியில் உள்ளது. அவர் அழுத்தியதால் ஏற்பட்ட தலை வலியைப் போக்க இன்றும் மருந்து சரக்குகள், வேர்கள் சேர்த்து காய்ச்சப்படும் சந்தனாதி மூலிகை தைலத்தால் தினமும் லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. மிகுந்த கோபத்துடன் அகத்தியர் உள்ளே நுழைந்ததால் துவார பாலகர்கள் அவரை தடுக்க முடியாமல் கையிலிருந்த ஆயுதங்களை கீழே போட்டு விட்டதால் இன்றும் அவர்கள் ஆயுதங்கள் இல்லாமலேயே காட்சி தருகின்றனர். தீர்த்தம் அருவியே. சிவனை மதியாது பூமிக்கு வந்த கங்கையை தனது சடையில் தாங்கினார் இங்கு. சிவபெருமானின் சொல்லை மதியாதற்கு பிராயசித்தமாக மூன்று மலைகள் கூடும் திரிகூட மலையில் உள்ள லிங்கத்தை தேன் கொண்டு பூஜித்து நற்கதி பெற்றாள்.கங்கை இவ்வாறு தேன் கொண்டு பூஜித்ததால் இத்தல தீர்த்தம் சிவ கங்கையாயிற்று. இதுவே இன்று தேனருவியாக பாய்கின்றது. அருவிக்கரையின் அருகில் இருப்பதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சளி பிடிக்கக்கூடாது என்று இரவில் சுக்கு கஷாயம் நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

ஐயன் அம்மைகள் இருவர் மூன்று சன்னதிகளையும் உள்ளடக்கி செல்லும் திருச்சுற்றுக்கு சங்க வீதி என்று பெயர்.கோவிலும் சங்ககோவில்.முதலில் அகலமான மணி மண்டபம், நேர்த்தியான தூண்கள், வாயிலில் அம்பல விநாயகர், சுப்பிரமணியர், நடுவில் கொடிமரம், பலி பீடம் நந்தி. அலங்கார மண்டபத்தில் தென்புற வாயில் வழியாக சென்றால் அர்த்த மண்டபம். ஆயுதம் இல்லாமல் துவார பாலகர்கள். அகத்தியரின் கை ரேகைகளை தன் திருமேனியில் தாங்கிய குறும்பலாவின் ஈசரை, குற்றால நாதரை, கூத்தரை, திரிகூடாசலேஸ்வரரை தரிசனம் செய்கின்றோம். இவரை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் " குற்றாலத்து குறியாய் இருந்தும்" அதாவது திருக்குற்றாலத்திலே சிவலிங்கமாக எழுந்தருளியுள்ள கூத்தனே என்று பாடுகின்றார்.

திருசுற்றில் அதிகார நந்தி சூரியன், தக்ஷிணா மூர்த்தி, பஞ்சபூத லிங்கங்கள் சுப்பிரமணியரை தரிசித்து பின் அன்னை குழல்வாய் மொழி அம்மையை தரிசிக்கின்றோம், நின்ற கோலத்தில் கருணை முகத்துடன் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் அருளை அருவியாகப் பொழியும் அன்னை. திருசுற்றில் கயிலாயநாதர் துர்க்கையம்மன் சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வடப்புறம் பள்ளியறை. இடப்பக்கம் யோக பீட நாயகி பராசக்தி. தலமரம் குறும்பலா.

அரவின் அனையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் செக்கி





விரவி மதி அணிந்த விகிதர்க்கு இடம் போலும் விரி பூஞ்சாரல்



மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தகீ



குரவமறு வலி செய்யும் குன்றிடம் சூழ் தண் சாரக் குறும்பலாவே.




என்று சம்பந்தப்பெருமான் குறும்பலாவின் மீது ஒரு 11 பாடல்கள் கொண்ட முழுப்பதிகமே பாடியுள்ளார். நான்கு வேதங்களுமே பலா மரமாக நின்று தவம் செய்திருப்பதாக ஐதீகம்.





சித்திரம்பலம்







மஹா மண்டபத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் அன்னை சிவகாமி சமேதராக அருட்காட்சி தருகின்றார். மார்கழித்திருவாதிரையன்று இத்திருமேனியையே சித்திர சபைக்கு எடுத்து சென்று அபிஷேக ஆராதணைகள் நடத்துகின்றனர். முதல் பூஜை ஆன்ந்த நடராஜேஸ்வரருக்கே நடைபெறுகின்றது









திரிபுர தாண்டவ மூர்த்தி





குற்றாலத்து எம் கூத்தா போற்றி




காவாய் கனகக் கடலே போற்றி




கயிலை மலையானே போற்றி போற்றி.

கோவிலின் வடக்கே அருகில் சித்திர சபை உள்ளது . இரு மண்டபங்கள் உள்ளன, கேரளப்பாணியில் கட்டப்பட்டுள்ளன்.ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் உள்ளன. நடுவே ஒரு சிறு வசந்த மேடை. மரக்கூரை கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. எட்டு கலசங்கள்.சித்திர சபையெங்கும் சித்திரங்கள் மூலிகைகளை குழைத்து தீட்டிய வண்ணம். தஞ்சாவூர் ஓவியம் போன்று சிவப்பு, நீலம், தங்க நிறத்தில் அற்புதமான சித்திரங்கள்.யமனை வென்ற மிருத்யுஞ்சய மூர்த்தியாக , ஆனந்த நடராஜேஸ்வரராக தலையில் பிறை சூடி , அம்மை சிவகாம சுந்தரியை இடப்பக்கதில் சுமந்து மார்க்கண்டனுக்க்கு அருளிய மூர்த்தியாக ஆன்ந்த தாண்டவம் ஆடும் சித்திரம் அருமை. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஐயனின் அடிபணிந்து ஆனந்த தாண்டவத்தை கண்டு களிக்கின்றனர். தாமரைகள் மலர்ந்திருக்க, வண்டுகள் ரீங்காரமிட மயில்கள் ஆட அருமையாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சித்திர சபையில் ஐயன் திரிபுர தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். பிரம்மன் தான் கண்ட அந்த தாண்டவத்தை தானே வரைந்ததாக ஐதீகம். புராண நிகழ்ச்சிகளை ஒட்டிய சித்திரங்களும், 64 திருவிளையாடல்களை விளக்கும் சித்திரங்கள் என்று சபை எங்கும் நிறைந்திருக்கின்றன. ஸ்படிக லிங்கமும் சக்கரமும் உள்ளன. திருவாதிரை உற்சவ பத்து நாள் உற்சவத்தின் போது தினமும் காலையிலும் மாலையிலும் திருவெம்பாவை, தேவாரம், பல்லாண்டு பாடப்பட்டபின்னரே ஆசிர்வாத நிகழ்ச்சி வட மொழியில் நிகழ்த்தப்படுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று தாண்டவ தீபாரதனை நடைபெறுகின்றது.





சித்திர சபையில் உள்ள சித்திரங்கள்


உற்றாரையான் வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்




கற்றாரையான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும்



குற்றாலத்து அமர்ந்துறையும்
கூத்தாஉன் குரைக்கழற்கே



கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.




என்று மாணிக்க வாசகர் பாடிய குற்றாலத்து கூத்தனைக் கண்டு ஆன்ந்த பாஷ்பம் கண்ணில்வழிய வணங்குகின்றோம்,

தேவார மூவர்கள், மாணிக்க வாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். திரிகூட ராசப்ப கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். கந்த புராணம், திருப்பத்தூர் புராணத்தில் குற்றாலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சித்திர சபைக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று புகழ் பெற்ற குற்றாலத்தானை

காலன் வருமுன்னே
கண்பஞ் சடை முன்னே



பாலுண் கடைவாய்
படு முன்னே - மேல் விழுந்தே



உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே



குற்றாலத்தானையே கூறு



என்றபடி பட்டினத்தடிகள் பாடிய்படி நாளைக்கென்று ஒதுக்கி வைக்காமல் இன்றே ஆனந்த நடராஜேஸ்வரரின் தரிசனம் பெற்று முக்தியடைவோமாக.






தில்லை ஆனி உத்திரப்பெருவிழா: ஏழாம் நாள் தங்க கைலாய வாகனக் காட்சி. எட்டாம் நாள் தங்க இரதத்தில் பிக்ஷாடணர் வெட்டுங்குதிரைக் காட்சி. இன்று சித்சபையில் அம்மையப்பரின் முக தரிசனம் மட்டுமே கிட்டும்.


அடுத்த பதிவில் திருவாலங்காட்டில் இரத்தின சபையில் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும் ஐயனின் தரிசனம் பெறுவோம்.


No comments: