Saturday, June 28, 2008

பஞ்ச சபைகள் - வெள்ளியம்பலம் - மதுரை

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.







தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமா
ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு.

என்ற படி வலக்கையில் தாங்கியுள்ள உடுக்கை படைத்தலையும், உடுக்கையிலிருந்து கிளம்பும் ஓம் ஓம் என்னும் நாதமே படைப்பிற்க்கு மூல காரணம். மற்ற வலக்கரம் சிவாய நம என்றிருப்போர்க்கு ஒரு அபாயமும் இல்லை அபய முத்திரையாக படைத்தவற்றைக் காத்தலையும், இடக்கையில் தாங்கியுள்ள அனல் அழித்தலையும், உயிர்களை இளைப்பாற்ற அழிப்பவனும் ருத்ர ரூபமான சிவனே. இருள் இல்லாமல் பகல் இல்லை அது போல அழிவு இல்லாமல் ஆக்கமும் இல்லை. இடது கீழ்க்கரம் என்னுடைய மலர்ப்பதத்தையே நாடு அதுவே உனக்கு உய்ய வழி என்று சரணாகதியை உணர்த்துகின்றது. வலது கால் ஆணவமாம் முயலகனை அழுத்தி அவ்ரவர்கள் வினைக்கு ஏற்ப மறைத்தலைக் குறிப்பிடுகின்றது. குஞ்சித பாதம் என்னும் தூக்கிய திருவடி அருளலைக் (முக்திபேறு) குறிக்கின்றது .


இவ்வாறு ஆனந்த நடமாடும் அம்பல வாணரின் பஞ்ச சபைகளுள் முதன்மையானது பொன்னம்பலம், தில்லை , அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், என்றும் சைவர்களுக்கு கோவில் என்றும் வழங்கப்படும் சிதம்பரம். இத்தில்லைத் தலத்தின் பெருமையை அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதி சேஷனாலும் கூற முடியாது. கீதா சாம்பசிவம் அம்மையார் தமது ஆன்மீக பயணம் பதிவில் தில்லை சிதம்பர இரகசியங்கள் பலவ்ற்றைப் பற்றி எழுதியுள்ளார் ஆகவே இந்த ஆனி உத்திர புண்ணிய சமயத்தில் மற்ற நான்கு சபைகளில் பிறப்பறுக்கும் பிஞ்ஞகனை தரிசனம் செய்வோம்.




வெள்ளியம்பலவா போற்றி


பஞ்ச சபைகளுள் இரண்டாவது, வெள்ளியம்பலமாம் மதுரை. மதுரையைப்பற்றி அன்பர் சிவமுருகன் ஒரு அருமையான காவியப் பதிவே படைத்துள்ளார் ஆகவே நாம் மதுரையின் சிறப்பை அதிகம் பாராது வெள்ளியம்பலத்தில் பத்து கரங்களில் ஆயுதங்கள் தாங்கி கால் மாறி ஆடிடும் கண்ணுதலானின் அழகை தரிசனம் செய்வோம்.

மதுரை இந்திரன் பொற்றாமரை குளத்தின் பொற்றாமரை மலரால் கடம்ப வன்த்தில் தாயிற் சிறந்த தயாபரன் சிவபெருமானை பூசித்த தலம். ஐராவதம் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்ற தலம். கிஞ்சுக வாயவள் உமை பங்கன் தனது திருமுடியில் அணிந்துள்ள சந்திரனின் அமுத தாரைகளின்= மது( தேன் துளிகள்) சிதறியதால் மதுரையான தலம். நாகம் தனது வாயால் வாலைப் பிடித்து மதுரையினை உருவாக்கியதால் ஆலவாய்( ஆலம்- விடம்) ஆனது.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். பாண்டிய மன்னனாக வந்து சொக்கேசப்பெருமானே 64 திருவிளையாடல்கள் ஆடிய தலம். சம்பந்தர் கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கிய தலம். மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் வழிபட்ட தலம். அன்னை மீனாட்சி அங்கயற்கண்ணியாய் எவ்வாறு மீன் தன் குஞ்சுகளுககு கண்ணினாலேயே உணவூட்டி வளர்ப்பது போல நம்மை காத்து இரட்சிக அங்கயற்கண்ணியாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம். அன்னையின் சக்தி பீடங்களில் ஒன்று. ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் குதிரைப் படை தளபதி இராஜ மாதங்கியாய் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து நன் இன்னல் தீர்க்கும் தலம். இனி மருவார் குழலி பங்கன் இத்திருமதுரையில் வெள்ளியம்பலம் கொண்ட வரலாற்றைக் காண்போம்.




மலயத்துவஜ பாண்டியனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே அவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தீயிலிருந்து அன்னை ஜகத் ஜனனி, திரிபுர சுந்தரி ஒரு குழந்தையாக அவதாரம் செய்தாள். ஆனால் இயற்கைக்கு மாறாக அந்த தெய்வீகக் குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தன. மன்னனும் காஞ்சன மாலையும் கவலையுடன் தங்கள் மகளை பார்க்க ஒரு அசரீரி ஒலித்தது. மன்னா கவலைப்பட வேண்டாம் இம்மகளை ஒரு இளவரசனைப் போல வளர்த்து வரவும். தக்க சமயத்தில் இவளுக்கு உரிய மணவாளன் வரும் போது ஒரு தனம் மறையும் என்று உரைத்தது. மன்னனும் அம்மைக்கு தடாதகைப் பிராட்டி என்று திருநாமமிட்டு ஒரு இளவரசனைப் போல போர்ப்பயிற்சி முதலான அளித்து வளர்த்தனர்.

கால் மாறி ஆடிய கபாலியின் ஆடல்

செப்புத்திருமேனியும் கற்திருமேனியும்

அம்மை சிவகாம சுந்தரியும் தரிசனம்



பருவம் அடைந்தவுடன் அன்னை பாண்டிமா தேவியாக முடி சூட்டினர். அம்மையும் திக் விஜயம் செய்யப் புறப்பட்டாள். அனைத்து திசைகளிலும் சென்று தேவர்கள் அனைவரையும் வென்று இறுதியாக ஈசான திசையில் திருக்கயிலாயத்திற்கு வருகின்றாள். அனனை போருக்கு வந்ததும் உண்மையை உணராத நந்தி தேவர் அம்மையுடன் போர் செய்து தோற்று ஐயனிடம் சென்று உரைக்கின்றார். தன்னில் பாதியுடன் சண்டையிட ஐயன் தானே வாருகின்றார். ஐயனைப் பார்த்தவுடன் அம்மையின் மூன்றாவது தனம் மறைந்தது. தன் முன்னே நிற்பவர் சர்வேஸ்வரர் மற்றுமள்ள தன் நாயகன் தான் என்பதை அன்னை உணர்ந்து அடி பணிந்து நின்றாள். ஐயனும் பாண்டி நாடு செல்க யாம் வந்து உம்மை சுந்தரராக மணம் முடித்து பாண்டி நாட்டை ஆள்வோம் என்று அருளினார்.

ஆருத்ரா தரிசனத்தன்று சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அம்பலவன்


பாரெல்லாம் வியக்க மீனாட்சி சொக்கரின் திருமணம் மதுரையில் நடந்தது , அண்ணன் திருமால் தாரை வார்த்து அங்கயற்கண் அம்மையை கன்னிகாதானம் செய்து கொடுத்தார் சுந்தரருக்கு. திருமணத்திற்க்கு பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் மதிய உணவு உண்ணாமல் சிதம்பரத்திற்கு புறப்பட்டனர். ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை கண்ட பின் தான் உணவு உட்கொள்வோம் என்று. அதற்கென்ன இங்கேயே ஆனந்தத்தாண்டவத்தை காட்டி அருளுகின்றேன் என்று வெள்ளி அம்பலம் அமைத்து முனிவர் இருவரும் மகிழ, கூடியுள்ளோர் எல்லோரும் உய்ய சுந்தர நடமாடினார் தென் தில்லை மன்றினில் ஆடும் அம்பலவாணர்.இந்த அற்புத தாண்டவத்தை பதஞ்சலி இவ்வாறு பாடுகின்றார்.

அடியாரெம்பொருட்டு வெள்ளியம்பால்த்தாடல் போற்றி

பொடிபடிந் தடந்தோள் போற்றி

கடியவிழ் மலர் பொன் கூந்தல் கயல்விழி பாக போற்றி

நெய்தற் பரமானந்த நிருத்தனே போற்றி.


ஐயன் முதன் முதலில் இரதஜ சபையில் ஆடியது உச்சிக்காலம் என்பதால உச்சி கால பூஜை மிகவும் சிறப்பானது வெள்ளியம்லத்தில் கால் மாறி ஆடும் ஐயனுக்கு. இனி கால் மாறி ஆடிய வரலாற்றைக் காண்போம்.

இராஜ சேகர பாண்டியன் மன்னனாக இருந்த போது 64 கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் நாட்டியக் கலையையும் கற்றுக்கொண்டான்.அவ்வாறு அவன் ஆடும் போது ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு ஆடும் ஐயனுக்கு எப்படி கால் வலிக்குமென்று நினைத்து அன்பின் மிகுதியால் ஐயா தாங்கள் கால் மாறி ஆட வேண்டும் என்று வேண்ட ஐயனும் அவ்வாறே கால் மாறி ஆடினார். பின்னர் இராஜ சேகர பாண்டியன்

என்று மிப்படியே யிந்தத் திருநடனம் யாருங் காண

நின்றருள் செய்ய வேண்டு நிருமலமாக வெள்ளி

மன்றவ வடியேன் வேண்டும் வரமிது என்று தாழ்ந்தனன்

அன்றுதொட் டின்று மெங்கோ னந்தநட நிலையின்ருன்

( திருவிளையாடற் புராணம் -கால் மாறி ஆடிய படலம்)


வரம் வேண்ட ஐயனும் அதே கோலத்தில் தரிசனம் தருகின்றார்.

வெள்ளியம்பலத்தில் செப்புத் திருமேனியும் கற் திருமேனியும் உள்ளன. வெள்ளி கவசத்தில் மின்னுகின்றார் ஐயன் மாப்பெருங்கருணையன், குவளைக் கண்ணி கூறன். மேலும் ஒரு சிறப்பு வெள்ளி அம்பல வாணருரின் அருள் தரிசன்த்தில் பத்துக் கரங்களில் ஐயன் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றார். பாண்டி மா தேவி அங்கயற்கண்ணியை மணம் முடித்த போது நான் பழம் பெருமை பெற்ற தென் பாண்டி நாட்டின் மன்னனாக அரசாளுவேன் என்று கொடுத்த வாக்கின் படி சுந்தரேசர் பாண்டிய மன்னனாக இருந்து அரசாண்டதால் திருக்கரங்களில் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றார் எங்கோன்.





எம் கோன் பாண்டியனாம் எங்கள் ஆண்டவர்




ஆடக மதுரை அரசே போற்றி



கூடல் இலங்கு குருமணி போற்றி



கண்ணார் அமுதக் கடலே போற்றி



கயிலை மலையானே போற்றி போற்றி





சிதம்பரத்தைப் போலவே மதுரையிலும் ஐந்து சபைகள் உள்ளன. ஐயன் கால் மாறி ஆடிடும் வெள்ளியம்பலம். சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் கனக சபை மற்றும் இரத்தின சபை, நூற்றுக்கால் மண்டபத்தில் தேவ சபை ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபை என்று ஐந்து சபைகள் மதுரையிலும் உள்ளன.


ஆருத்ரா தரிசனத்தன்று நூற்றுக்கால் மண்டபத்தில் பஞ்சசபை நடராஜர் மற்றும் ஆறு கால் பீடத்தில் வெள்ளி அம்பல நடராஜருக்கு விசேஷ பூஜைகள். பின்னர் சிவகாம சுந்தரியுடன் நடராஜர் கரி உரித்த வாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வருகின்றார் மாணிக்க வாசகரும் உடன் வருகின்றார்.

அடுத்த பதிவில் தாமிர அம்பலமாம் திருநெல்வேலியின் தரிசனம் பெறுவோம்.


படங்களுக்கு நன்றி சிவமுருகன்.


தில்லை ஆனி திருமஞ்சனம் : மூன்றாம் நாள் தங்க சூரியப்பிரபை வாகனக்காட்சி. நான்காம் நாள் வெள்ளி பூத வாகனக் காட்சி.

ஆடல் காணீரோ

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.





தத்துவம் ஆடச் சதாசிவந் தான் ஆட


சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட


வைத்த சராசரமும் ஆட மறை ஆட


அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.





தென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன



1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.

2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.

3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.

4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.

5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.

இவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி "மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.


தில்லை வாழ் அந்தணர் இவ்வேட்டை மணிவாசகரிடம் காட்டி , இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்ட அவ்ரும் அவ்ர்களை அழைத்து சென்று தில்லைத் திருக்கூத்தனைக் சுட்டிக் காட்டி இவனே பொருல்ளெனக் காட்டி அவன் திருவடியில் இரண்டறக் கலந்தார். எனவே அன்றைய தினத்தில் ஐயனுடன் மாணிக்க வாசகரும் திருவலம் வருகின்றார்.




நாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.

அடிபேரில் பாதாளம் பேரும் அடியார்


முடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்


மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்


அறிந்தாடும் ஆறு என் அரங்கு.

ஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே? என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.



திருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.



கோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.





ஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.

இந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.

Tuesday, June 17, 2008

மாங்கனி மழையில் நனைய வாருங்கள்

மாங்கனித்திருவிழா





பிச்சைப்பெருமான் பிச்சைக்கு புறப்பாடு




மாங்கனித் திருவிழாவின் பூர்வமாக காரைக்காலம்மையாரின் சரித்திரத்தையும், பிக்ஷாடணரின் வைபவத்தையும் பார்த்தோம் இனி இப்பதிவில் மாங்கனித்திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம், வீட்டின் கூரைகளிலிருந்து கூடை கூடையாக மாங்கனிகள் வீசப்படும் அழகையும், அந்த மாங்கனி மழையில் நனையவும் வாருங்கள் தங்களை இருகரம் கூப்பி அழைக்கிறேன்.




காரைக்கால் அம்மையாரின் இந்த அமுது படையல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று "மாங்கனித் திருவிழாவாக" காரைக்காலிலே கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் காரைக்கால சௌந்தராம்பிகா உடனமர் கைலாச நாதர் ஆலயத்தில் நடைபெறுகின்றது. இத்தலத்தின் தல வரலாறு, பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக , தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங்கரையிலே ( அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக் ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன் திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது, இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இவ்விரு ஆலயங்களிலும், ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலும் இந்த அடியாரின் பொருட்டு ஒவ்வொரு ஆனி பௌர்ணமியன்றும் மஹா தேவன் அம்மையாருக்கு அளித்ததும் அவர் இறைவனுக்கு படைத்ததும் ஆன மாங்கனியின் பெயாராலேயே "மாங்கனித் திருவிழா" சிறப்பாக நடைபெறுகின்றது.



இத்திருவிழா நான்கு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் முதல் நாள் மாலை விக்னங்களை எல்லாம் தீர்க்கும் விக்னேஸ்வர பூசையுடன் திருவிழா தொடங்குகின்றது. அன்று இரவு பரமதத்த செட்டியாரை ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடை பெறுகின்றது.



இரண்டாம் நாள் அதி காலை ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வரும் நிகழ்ச்சியும், பின்னர் பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பின்னர் காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.




பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு




அன்று மாலை பிக்ஷாடண மூர்த்தி "வெள்ளை சாத்தி புறப்படும்" நிகழ்ச்சி நடைபெறும், அப்போது முழுதும் மல்லிகைப்பூவினால் அலங்கரிக்கப்பட்ட பிக்ஷாடணர், கையில் சூலத்துடனும், பாம்பு கழுத்தில் தொங்க சர்வ அலங்காரத்துடன், தாருகாவனத்தில் அன்று ரிஷி பத்தினிகளின் நிறையழித்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கியபின் ஆடிய ஆனந்தத்தாண்டவமாடி கோவிலை சுற்றி வருவார். அவர் ஆடி வரும் அழகே அழகு. ஐயனை எடுத்து ஆடி வர இளைஞர்களும் முதியர்வர்களும் போட்டி போட்டுக்கொண்டு வரும் பாங்கைப் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும். நம் மனத்தில் உள்ள அழுக்குத்தான் வெள்ளை அதை நாம் க்ளைந்தால் இறை தரிசனம் காணலாம் என்பதை விளக்குவதே வெள்ளை சாத்தி புறப்படுதலின் தாத்பரியம்.



பின்னர் ஸ்ரீ புனிதவதியாரும் பரம தத்தரும் "முத்துச் சிவிகையில்" புதுக்கல்யாண தம்பதிகளாய் திருவீதி உலா வருகின்றனர்.





இரவு 3 மணிக்கு பிக்ஷாடணருக்கும் மற்றும் பஞ்ச மூர்த்திகள், காரைக்காலம்மையார், அதிகாரநந்தி ஆகியோருக்கு ருத்ர ஜபத்துடன் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது. நதியாய் பாயும் பால், தயிர், பழ ரசங்கள், முக்கியமாக மாங்கனிச்சாறு, தேன், இளநீர், பன்னீர் முதலியவற்றால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக "மஹா அபிஷேகம்" நடைபெறுகின்றது.




பிக்ஷாடணர் நகர் வலம்





மஹா அபிஷேகம் முடிந்து உதயாதி நாழிகையில், மஞ்சள் பட்டாடை உடுத்தி, பால் வெந்நீற்று காப்புடன், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்புடன் கொண்டையிட்டு, சடாமுடி தரித்து, தோளிலே சூலம் தாங்கி வலக்கரத்திலே உடுக்கையும், இடக்கரத்திலே பிச்சைப் பாத்திரத்தில் மாங்கனியும் ஏந்தி எம் ஐயன் தரும் மஹா தரிசனத்தை பார்த்து பரவசம் அடைய எத்தனையோ கோடி தவம் செய்திருக்கவேண்டும். சுந்தர மூர்த்தியாக எம் ஐயனின் அழகே அழகு அந்த அழகைப் பார்க்கும் போது இத்தகைய பேரழகை பார்த்து தருகாவனத்து ரிஷி பத்தினிகள் எவ்வாறு மயங்காமல் இருந்திருக்கக் கூடும் என்பது நம் மனதில் நிச்சயமாக தோன்றும். இந்த தரிசனம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த திவ்ய தரிசனம் கிட்டும் என்பது மட்டுமே உண்மை.




பவளக்கால் விமானத்தில் பிக்ஷாடணர் புறப்பாடு





மூன்றாம் நாள் காலை 8 மணி அளவில் பரமதத்தர் காசுக்கடை மண்டபத்திற்க்கு வருதல் மற்றும் வர்த்தகர்கள் இருவர் அவருக்கு இரு மாங்கனி கொடுத்தல் பின் செட்டியார் அம்மாங்கனிகளை தம் வீட்டுக்கு அனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.






இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆனி பௌர்ணமியன்று காலை 10 மணியளவில் தொடங்குகின்றது. எம்பெருமான் அடியார் கோலத்துடன் பவளக்கால் வினத்தில் பத்மாசனத்தமர்ந்து வேத பாராயணத்துடன், வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ புனிதவதியார் திருமாளிகைக்கு பிச்சைக்காக எழுந்தருளுகின்றார். கிண் கிணி என்று ஆயிரம் மணிகள் ஓசையிட எம் ஐயன் பிக்ஷாடணராக, குண்டோதரன் குடை பிடிக்க, வெட்டி வேர் திருவாசியுடன், தங்க கவசம், சர்வாபரணதாரியாக, வெள்ளிக் குடையுடன் நகர் வலம் வரும் போது, எம் ஐயனின் எழிற்கோலத்தைக் காணவும் அவருக்கு மாங்கனி படைக்கவும் கூட்டம் அலை மோதும். இறைவன் பிச்சைக்கு வரும் போது அவருக்கு தேங்காய் உடைக்க படுவதில்லை ஆனால், இரு மாங்கனிகளே படைக்கப்படுகின்றன. பட்டு துண்டுகளும் சாத்தப்படுகின்றன. மாங்கனிகளும் பட்டும் மலை போல் அன்று குவிகின்றன.


பிக்ஷாடணரும் மாங்கனி மழையும்



மேலும் ஊர்வலத்தின் போது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மக்கள் கூடை கூடையாக மாங்கனிகளை வீட்டின் கூரைகளிருந்து வீசுகின்றனர். அந்த மாங்கனிகள் இறைவனின் பிரசாதம் என்பதாலும் அக்கனியை உண்பவர்களின் குழந்தை இல்லா குறை நீங்கும் என்பதாலும் அதை பிடிப்பதற்காக அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுவர், இது ஒரு காணக்கிடைக்காத காட்சி. இது மாதிரி ஒரு காட்சியை வேறு எத்திருக்கோவிலிலும் கண்டதில்லை, உண்மையிலேயே இது ஒரு மாங்கனி மழைதான் காரைக்காலில் ஆனி பௌர்ணமியன்று.





ஊர்வலம் முடிந்து அம்மையாரின் இல்லம் (காரைக்கால் அம்மையார் திருக்கோவில்) வரும் சிவனடியாரை, காரைக்கால் அம்மையார் முன் வந்து வரவேற்று "அமுது படைக்கும் நிகழ்ச்சி" நடை பெறுகிறது. தயிர் சாதமும், மாங்கனியும் மற்றும் அனைத்து இனிப்புகளும், திண்பண்டங்களும் கொண்ட மஹா நைவேத்தியம் படைக்கப்படுகின்றது பிச்சாண்டவருக்கு. இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவு எல்லாருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.



பின்னர் பரமதத்த செட்டியார் உணவு அருந்த தம் இல்லத்திற்கு வருதலும், மாங்கனியை புசித்த பின் புனிதவதியாரை மற்றொரு கனி கேட்க அக்கனியை வரவழைத்த அற்புத காட்சியைக் கண்டு அதிர்ந்து கப்பலேறி பாண்டி நாடு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதற்காக காரை பகுதியின் மீனவர்கள் ஒரு படகை அலங்கரித்து கொண்டு வருகின்றன்ர், அவர்களுக்கு கோவில் மரியாதையும் செய்யபடுகின்றது. அந்தப்படகில் ஏறி பாண்டி நாடாம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றார் பரமதத்தர்.

பௌர்ணமி அன்று இரவு பாண்டி நாட்டிலே (ஆற்றங்கரை சித்திவினாயகர் ஆலயம்) பரமதத்தரின் "இரண்டாம் திருமண வைபவம்" நடைபெறுகின்றது. பாண்டி நாட்டில் பரமதத்தர் இருப்பதை அறிந்த அம்மையார் நள்ளிரவு அலங்கரிக்கப்பட்ட 'புஷ்ப பல்லக்கிலே' பாண்டி நாடு செல்கின்றார். இந்த புஷ்ப பல்லக்கை பார்ப்பதற்காக மக்கள் அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். பாண்டி நாட்டை அடைந்தவுடன் பரம தத்த செட்டியாரும் இரண்டாவது மனைவியும் மகளும் எதிர்வந்து ஸ்ரீ புனிதவதியாரை வலம் வந்து நமஸ்காரம் செய்ததால், புனிதவதியார் ஊனை உதிர்த்து என்புருகொண்டு, அற்புததிருவந்தாதி, திருவிரட்டைமாலை பாடிக்கொண்டு கைலாயத்திற்கு எழுந்தருளுகின்றார். என்புருவுடன் சப்பரத்தில் அம்மையார் பாண்டி நாட்டிலிருந்து எழுந்தருளும் போது பக்தர்கள் அம்மையாரின் பதிகங்களை பாராயணம் செய்து கொண்டு உடன் வருகின்றனர்.


சந்திரசேகரர் அம்மையாருக்கு கைலாய திருக்காட்சியருளல்






முருகர் அம்மையாருக்கு கைலாய திருக்காட்சியருளல்




அதிகாலை ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலயத்திற்கு முன் வரும் போது சிவதரிசன பயனை அருளும் பஞ்ச மூர்த்திகளும் அம்மையாருக்கு கயிலாயத் திருக்காட்சி தந்தருளுகின்றனர். கயிலாச வாகனாருடராய் சந்திர சேகரரும், விநாயாகரும், வள்ளி தேவ சேனா சமேத முருகரும், சண்டிகேஸ்வரர்ரும் அம்மையாருக்கு அருட்காட்சி தருகின்றனர். பின் பஞ்ச மூர்த்திகள் நகர்வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.




நான்காம் நாள் காலை விடையாற்றி உற்சவமும் பஞ்ச மூர்த்திகளின் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றது. மாலை புனிதவதியாரின் திருவீதி உலாவுடன் திருவிழா இனிதே முடிவடைகின்றது.
எம் ஐயனின் எழிற் கோலமும் காணவும், மாங்கனி மழையில் நனைந்த அனுபவமும் எவ்வாறு உள்ளது.





பிச்சைத் தேவர்

இரவலர் கோலத்தில் சிவபெருமான்

சிவபெருமான் அருவமாக ஆகாய வெளியாகவும், அட்ட மூர்த்தியாகவும், அருவஉருவமாக சிவலிங்கமாகவும், 64 உருவ வடிவிலும் வணங்கப்படுகின்றார். எம்பெருமானின் திருமேனிகளில் மிகவும் சிறப்பு பெற்ற திருமேனி அவர் ஆனந்த தாண்டவனாக ஐந்தொழில் புரியும் ஆண்டவனாக அருள் பாலிக்கும் நடராஜ மூர்த்தம். அடுத்த சிறப்பு பெற்ற மூர்த்தம் தியாக ராஜ மூர்த்தம் எனப்படும் சச்சிதானந்த , ஓங்கார ரூப சோமாஸ்கந்த மூர்த்தம் சிவன். அம்மை மற்றும் ஸ்கந்தனுடன் கூடிய போக மூர்த்தம். அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியிருக்கும் மற்றொரு மூர்த்தம் உமையம்மையுடன் நின்ற கோலத்தில் பிறைச் சந்திரனை அணிந்த சந்திரசேகரர் மூர்த்தம. அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் இன்னொரு மூர்த்தம் தான் பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி என்றெல்லாம் அழைக்கப்படும் பிச்சைத் தேவர் மூர்த்தம்.







பூதகணங்கள் புடை சூழ கையில் பிச்சைப் பாத்திரம் எந்தி பிச்சை கேட்டு வருபவராய் திகம்பர கோலத்தில் எழில் சுந்தரராக ஐயன் அருள் பாலிக்கும் கோலமே பிக்ஷாடணர் கோலம். ஐயன் நிற்கும் கோலமே ஒரு எழில் ஒயிலாக சாய்ந்துதான் நிற்பார் , தோளில் திரிசூலத்தை தாங்கி, மோகனப் புன்னகையுடன் தோளில் பாம்பு தொங்க ஐயன் அளிக்கும் அருட்கோலமே ஒரு அழகுதான். திருக்கோவில்களின் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலை பிக்ஷாடண்ர் உற்சவம் என்னும் இரவல்ர் கோலவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தாருகாவனத்து இருடிகளின் செருக்கை அடக்கி ஆன்ந்த தாண்ட ஆடிய கோலமே "இரவலர் கோலம்."





ஆணவம் கொண்ட பிரம்மதேவரின் ஒரு தலையை சிவபெருமான் தன் நகத்தால் கிள்ளினார் ஆனால் அந்த பிரம்ம கபாலம் ஐயன் கையிலேயே ஒட்டிக் கொண்டது. அந்த பிரம்ம க்பாலத்தை கையில் பிச்சை பாத்திரமாக ஏந்தி இல்லம் இல்லமாக பிச்சை கேட்டு ஐயன் வந்த கோலமும் பிச்சைத்தேவர் கோலம் தான் .





ஆயினும் பிச்சைத்தேவராக கொண்டாதப்படும் மூர்த்தம், தாருகாவன்த்து இருடிகளின்(ரிஷிகள்) கர்வத்தை அடக்க ஐயன் சுந்தரராக சென்ற கோலம் தான். அந்தக்கதையை இப்பதிவில் காணலாம். நடராஜ பெருமானான ஐயனின் ஆனந்த தாண்டவம் முதன் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அகந்தை கொண்ட முனிவர்களின் அஞ்ஞானத்தை போக்க எம்பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷாடணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர்.


பிக்ஷாடணர் கோலம்\

(மான் இரு காலில் நிற்கும் அழகைக் காணுங்கள்)


சிவபெருமானின் சுந்தர வேடம் எப்படி இருந்தது தெரியுமா? கட்டிய வேதமாகிய கோவணமும் திருமேனியில் விபூதிப்பூச்சும், பாடும் கனி வாயும், புன் முறுவல் பூத்த திருமுகமும், கிண்கிணி பொருந்திய திருவடிகளில் தரித்த பாதுகைகளும், பலியேற்கும் கபாலமும், தமருகமும், ஏந்திய திருக்கரங்களும் கொண்ட பிக்ஷாடணர் கோலம் பூண்டார் இறைவர் சிவபெருமான். மன்மதன் தவ வடிவம் எடுத்து வந்தார் போல தாருகா வனத்திற்க்கு எழுந்தருளினார் சிவபெருமான். உடன் அனைவரையும் மயக்கும் மோகனப்புன்னகையும் அகன்ற கண்களும், பெருத்த தனங்களும், சிறுத்த இடையும் கொண்டு திரிபாங்கியாக கண்டவரை மயக்கும் மோகினி அவதாரத்தில் உடன் வந்தார் மஹாவிஷ்ணு.




.
அப்பொழுது சுந்தரருடைய திருவடியில் சூழ்ந்த சிலம்பின் ஒலியும், திருமிடற்றினிலின்று வரும் கீதவொலியும், திருக்கரத்தில் ஏந்திய உடுக்கையின் ஒலியும் ஒன்றாகக் கூடி காற்றில் சென்று ரிஷி பத்தினிகளின் காதுகளின் வழியே பாய்ந்து அவர்களை பரவசப்படுத்தின. அவர்கள் நிறையழிந்தனர். தம்மை மறந்தனர். பள்ளத்தை நோக்கி ஓடி வரும் வெள்ளம் போல விரைந்து வந்து பிச்சையிட்டதோடு தங்கள் கை வளையல்களையும், போட்டுவிட்டு ஐயனின் எழில் திருமுகம் கண்டு , சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல காத்துக் கிடந்தனர். தம்மை இழந்ததோடு, நாணமும் இழந்து, இடையிலிருந்த மேகலையுமிழந்தனர். மன்மதன் அம்பு பட்டு கண்ணீர் சொரிய நின்றனர். சிலர், ஆடை இழந்து நின்றனர் சிலர். அசைவற்று நின்றனர் சிலர், சேரச்சொல்லியும், கூடச்சொல்லியும் பிதற்றினர் சிலர்.


காரைக்கால் பிச்சாண்டவர் வெள்ளை சாத்திப் புறப்பாடு







ரிஷி பத்தினிகளின் நிலை இவ்வாறு என்றால் கர்வம் கொண்ட ரிஷிகளின் நிலையும் ஒன்றும் கூறும்படியில்லை, மோகினியைக்கண்ட அவர்கள் தேனைக்கண்டு ஓடும் தேனியின் நிலையை அடைந்தனர் அவர்கள் தாங்க்ள் செய்து கொண்டிருந்த யாகங்களை எல்லாம் மறந்து விட்டு மோகினியின் பின்னே ஓடினர், மோகினியின் கண் அசைவில் அப்படியே சரிந்து விழுந்தனர், அவள் ஒயிலாக நடந்து செல்ல பித்தாகி அவள் பின்னால் பாடினர், தங்கள் நிலை மறந்து மயங்கி நின்றனர். அவள் கை அசைவில் இவர்கள் பைத்தியமாகி மோகினியின் பின்னால் ஓடினர். இவ்வாறு ரிஷிகளையும் . ரிஷி பத்தினிகளையும் தன் வயம் இழக்கச்செய்த சுந்தரரும் மோகினியும் தம் மாயையை சிறிது விலக்கினர். ரிஷிகள் உண்மை நிலையை உணர்ந்தனர், கோபம் கொண்டு தங்களை இவ்வாறு ஆக்கிய சுந்தரரையும் மோகினியையும் அழிக்க அபிசார வேள்வி நடத்தினர்.





ஐயன் தனது ஆனந்தத் தாண்டவத்தை ஆரம்பித்தார்.





யாகத்திலிருந்து நாகங்கள் புஸ் புஸ் என்று சீறிக்கொண்டு வந்தன அவற்றை ஏதோ மண் புழுவைப் போல எடுத்து ஆப்ரணங்களாகவும், மாலைகளாகவும் அணிந்தார் ஆலகாலத்தையே உண்டு மிடற்றினில் அடக்கிய நீல கண்டர்.





கூரிய கொம்புகளுடன் கூடிய கலை மான் அவரைக் கொல்ல துள்ளி வந்தது மானின் கொம்புகளை உடைத்து அதை சாதுவாக்கி கரத்தில் ஏந்தினார்.





இதனால் கோபம் கொண்ட முனிகள் புலியை உண்டாக்கி அனுப்பினர், கொல்லப்பாய்ந்து வந்த கொடும்புலியைப் பிடித்து அதைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார் ஆனந்தத்தாண்டவர்.





மிருகங்களால் முடியவில்லை என்று அசுரனை அனுப்பினர், முயலகன் வந்தான் பிரம்மாண்டமாக சுந்தரரை விழுங்க, அவனை சிறுவனாக்கி திருவடியில் போட்டு அடக்கினார் திருக்கயிலை நாதர்.





அவர்கள் ஓதிய மந்திரங்கள் ஐயனின் கால் சிலம்பின் நாதமாயிற்று தீமையே இங்கு நன்மையாயிற்று.





இறுதியாக அவர்களின் யாகத்தை அழிக்க யாகத்தீயையே அகலாக்கி கையில் அனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.





மோகினியாக வந்த மஹா விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களூம் கண்டு மகிழந்தன்ர் ஐயனின் ஆனந்த தாண்டவத்தை. . நடராச மூர்த்தத்தின் சிவபெருமானின் அனைத்து தத்துவங்களையும் குறிக்கும் அடையாளங்கள் உள்ளன அவற்றுள் புலியதளாடை, முயலகன், அனல், நாகங்கள் ஆகியவை இவ்வாறு ஐயன் சுந்தரராக சென்று தாருகாவனத்து இருடிகளின் கர்வத்தை அடக்கிய இந்த திருவிளையாடலின் அம்சங்கள் ஆகும்.









இனி சுந்தர மூர்த்தமான பிக்ஷாடண மூர்த்தத்தின் சிறப்பு அம்சங்களை பார்ப்போமா? திருவடிகளில் மிகப்பெரிய பாதுகைகள், பாதங்களில் சிலம்பு, . ஒயிலாக தோளில் திரிசூலத்தை தாங்கிய லேசாக சாய்ந்த கோலம். திகம்பர வேடம், இடையில் அரைஞாண், இடக்கரத்தில் பிச்சைப் பாத்திரம், வல கரம் மானுக்கு அருகம் புல் ஊட்டும் நளினம். உடம்பு முழுவதும் ஆபரணங்களாக நாகங்கள். எழிலார் திருமுகத்தில் மோகனப்புன்னகை, தலையில் சடாமுடி என்று பிக்ஷாடணர் மூர்த்தம் எழிலாக அமைக்கப்படுகின்றது.

தாருகாவான்த்து முனி பத்தினிகளின் கற்பு நிலையை சோதிக்க திகம்பரராய் வந்து அவர்கள் நிறையழித்த அற்புதத்தை ஒரு கவிஞ்ர் இவ்வாறு பாடுகின்றார்.

அடியில் தொடுத்த பாதுகையும்
அமைந்த நடையும் இசை மிடறும்

வடிவில் சிறப்ப நடந்தருளி
மூஹை ஏந்தி மருங்கனைந்த

தொடியில் பொலி தோன் முனி மகளிர்
சர மங்கையரை மயல் மூட்டி

படியிட்டு எழுதாப் பேரழகால்
பலிதேர் பகவ்ன் திருவுருவம்.



பிச்சைப்பாத்திரம் ஏந்திய ஒரு குண்டோதரன், (பூத கணம்), அல்லது குடைப்பிடிக்கும் குண்டோதரனுடன் இரண்டு குண்டோதரர்கள் ஐயனுடன் எப்போதும் இருப்பர்.. ஐயன் மானுக்கு புல்லுருத்தும் அந்தப் பாங்கும் அதை வாங்க இரண்டு கால்களுடன் துள்ளும் அழகு என்னும் அம்சங்களும் இம்மூர்த்தத்தின் சிறப்பு.
அநேகமாக அம்மை இல்லாமல் தனியாகத்தான் எழுந்தருளுவார் பிச்சாண்டவர்.



காரணீஸ்வரத்தில் எட்டாம் நாள் இரவு பிக்ஷாடணர் உற்சவம்

(ஐயனின் எழிலே எழில் இந்த சுந்தரைக் கண்டு தாருகாவனத்து ரிஷிகளின் பத்தினிகள் எவ்வாறு தன் வசம் இழந்து ஐயனின் பினனால் ஓடாமல் இருந்திருக்க முடியும் சொல்லுங்கள். )






சில தலங்களில் அன்னம் பாலிக்கும் அன்னபூரணியாக அம்மையும் எழுந்தருளுகின்றாள்.



அன்னம் பாலிக்கும் அன்னபூரணி

கோலத்தில் சொர்ணாம்பாள்







வெள்ளீஸ்வரத்தில் மான் ஐயனை முன்னிருந்து ஒயிலாக திரும்பி நோக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.





திருமயிலையில் ஒன்பதாம் நாள் ஐயன் இர்வல்ர் கோலத்துடன் மாட வீதி வலம் வரும் போது விமானத்தில் ரிஷி பத்தினிகள் தம் வசம் இழந்து பித்தாகி மயங்கி வரும் நிலை அழகாக சித்தரிக்க்ப்படுகின்றது.





ஐயன் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரத்தில் எட்டாம் நாள் இரவு பிக்ஷாடண்ர் உற்சவம் நடைபெறுகின்றது ஐயனின் திகம்பர வேடம் தெரியுமாறு அலங்காரம் செய்கின்றனர், தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார் பிச்சாண்டி.





பல்வேறு ஆலயங்களில் பிச்சாண்டவர் சிற்பம் கல்லிலே கவினாக வடிக்க்ப் பட்டுள்ளதை காணலாம். மேலை சிதம்பரம் எனபப்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரத்தில் சபாநாயகர் மண்டபத்தில் அமைந்துள்ள எழிலார் சிற்பங்களுள் ஒன்று பிக்ஷாடணர் சிற்பம். மதுரையில் பிக்ஷாடண்ர் சிற்பத்தை காணுங்கள் ( நன்றி - சிவமுருகன்)


மதுரை பிக்ஷாடணர் சிற்பம்

( குண்டோதரன் மற்றும் ரிஷி பத்னியுடன்)




காரைக்காலில் மாங்கனித்திருவிழாவில் வெள்ளை சாத்தி ஆனந்தத் தாண்டவத்துடன் புறப்பாடு கண்டருளி, ருத்ராபிஷேகம் கொண்டருளி, பிச்சைத்தேவராக ஐயன் வரும் அழகைக் காண நாளை வரை பொறுத்திருங்கள் அவரது அழகை நாளை காணலாம். .

Monday, June 16, 2008

KARAIKKALAMMAIYAR



MANGO FESTIVAL



The Beautiful mendicant and


people waiting to shower mangoes

The galaxy of saints of the Saiva fold in South India has been chronicled in the Thiruthondar Puranam by the saint poet Sekkhizar. Because of the greatness of the devotees whose lives are detailed in this classic and due to the sheer compass of the hagiography spanning the lives of 63 Nayanmars it is also known as Periya Puranam. This classic expounds the manner in which each one of His devotees became the recipient of Lord Siva's grace. Karaikkalamaamiyar is a lady among the Nayanmars and she is one of the few whose spiritual legacy has come down to us in her own words through the hymn, Arputha Thiruvandadi, in 101 verses.

Karaikkalammaiyar was a chosen child of the Lord. Named Punithavathi at birth, she grew with great devotion to Lord Siva, and was the apple of her father's eye, since she happened to the only child of the rich merchant of Karaikkal. When she obtained puberty she was married to Paramathaththar, son of the Judge of Nagapattinam. As per the wishes of his father-in-law Paramathaththar settled in Karaikal and looked after the business there.

The turning point came in her life when her husband happened to learn about her spiritual attainments. One day a merchant, presented two mangoes of a special variety to Paramadattar who sent them home. By chance a devotee came to her house and as was the custom she offered food and one of the mangoes to Him.

As usual Paramadattar came for lunch and after food karaikallaiyar presented the mangoes to him. Lured by the taste of the mango her husband wanted the remaining fruit, she became anxious and prayed to God. No sooner did her mind dwell on Lord Siva another fruit appeared in her hand. Her heart filled with gratitude and she served the fruit to his husband. The matter did not end there. Curious that the second fruit is far more delicious than the first , he asked her the reason. She related how she had obtained it with the Lord's grace. He wanted to see her getting the fruit again, as she prayed the fruit appeared in her hand and vanished immediately. Convinced that his wife is not an ordinary mortal but a goddess of some sort he deserted her and left to Pandia Kingdom and in due course he married another woman and was blessed with a female child whom he named as Punithavathi his first wife's name.

Some relatives of Karaikkalmmaiyar who happened to see Paramadattar informed her about the whereabouts of her husband. She set out to her husband's place. On seeing Karaikkalammiayar her husband fell at her feet and worshipped her and asked his second wife and child also to do the same. Realising the futility of spending her life like any other ordinary mortal she prayed to Lord to turn her into a wraith and walked on her head to Mount Kailash, the abode of Lord Siva and Parvati, singing her hymns Arputha Thiruvanthathi and Thriuvirattai Malai. When she reached Mount Kailash , fearing of desecrating if she walked with her legs she walked with her head. When Parvati the consort of the Lord asked, My Lord , who is that , who is coming like this? Karaikkalammiyar had the privilege of being addressed "My Mother" by the Lord Himself. Karaikkalammiyar got the boon to be in total union with the Lord singing His praise by sitting under His feet at Thiruvalankadu till this day.

Every year in the Tamil month of Ani coinciding with full moon day (June-July) a three day festival is held in the Kailasanathar temple of Karaikal to re-enact this divine experience in the life of the great devotee of Lord Shiva. This festival is known as Mangani Thiruvizha, (Mango Festival). The main events of the festival are the marriage of Punithavathi to Paramadattar, The circumbulation of Lord Shiva as Bikshadanar (alms taker) in the night of first day in white robes and jasmine flower, the special abulations to Pancha Murthis and darshan of Bikshadanar , it is a great sight to witness Him in Yellow silk cloth covered with holy ash all over His body and His lips shining like corals and his flowing hair locks holding mango in His left hand. It is a sight which we can get for just 15 minutes and is a great sight to behold.

The second day morning Bikshadanar comes to Karaikkalammaiyar's house as devotee, while he comes he is offered two mangoes and yellow silk robes by the devotees. One another ritual which is unique to this festival is the throwing of the mangoes from the roof top of houses as a prayer. As people believe that the mangoes are sacred who get those mangoes will bring them luck and also who are not having child will be blessed with child youth and old alike compete to catch at least one mango. In the evening when the Lord reaches the house of Karaikkalammaiyar, She offers Him food. Curd rice with all the fruits and sweets offered to the Lord and distributed to all the devotees. In the full moon night Karaikkalammaiyar leaves for Pandia Kingdom in flower palanquin and after the encounter with her husband she becomes a wraith and travels to Mount Kailash. The festival ends with Lord Shiva along with Pancha Murthis give darshan to her in Mount Kailsh mount.

* * * * * * *

Sunday, June 15, 2008

மஹாதேவன் கொடுத்த மாங்கனி

காரைக்காலம்மையார் வரலாறு


காரைக்காலம்மையார் திருக்கோவில் கோபுரம்

மாங்கனி என்றாலே அனைவருக்கும் மஞ்சள் நிற பழத்தின் சுவைதான் நினைவுக்கு வரும். ஒரு சிலருக்கு அது ஞானப்பழம் என்று தெரியும், வெகு சிலருக்கே அது தன்னுடைய ஒரு பக்தைக்காக சிவபெருமான் கொடுத்த பழம், அதைக் கொண்டு ஒரு அற்புதத் திருவிளையாடல் அந்த ஆண்டவன் நடத்தினார் என்பதும் அந்த மாங்கனியின் பெயரால் ஒரு திருவிழாவே நடைபெறுகின்றது என்பது வெகு சிலருக்கே தெரியும் அந்த வரலாற்றைப் பற்றியும் மாங்கனித் திருவிழாவைப்பற்றியும் இப்பதிவுகளில் காணலாம்.

சிவத்தொண்டே உயிர் மூச்சாகக் கொணடு, தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவ பெருமானுக்கே அர்ப்பணித்து, யாரும் செய்ய நினைக்க முடியாத செயல்களையும் செய்து சிவனருள் பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். நாயன்மார்கள் அறுபத்து மூவருள் மூவரே பெண்கள் அவர்களுள் மூத்தவர் அம்மையார். அனைத்து உயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த சர்வேஸ்வரனுக்கே அன்புடன் அமுது படைத்தவர்தான் காரைக்காலம்மையார்.



எம்பெருமானுடைய திருவாயினாலேயே வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் என்று பார்வதி தேவிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். என்புருவுடன் திருக்கயிலாய மலையில் காலால் நடந்து செல்லக்கூடாது என்று தலையால் நடந்து சென்றவர். தற்போதும் ஐயனின் காலடியில் திருவாலங்காட்டில் அவரின் திருப்பாத நிழலில் அமர்ந்து ஐயனது புக்ழைப்பாடிக்கொண்டிருப்பவர். அவரது வரலாற்றையும் ஐயன் மாங்கனி அருளிய லீலையும் காண்போமா?



பேயுருவில் காரைக்காலம்மையார் திருமூர்த்தம்

காரைக்கால் என்னும் கடிநகரிலே ஒரு வணிகரின் குடும்பத்திலே தனதத்தர் என்பருவக்கு திருமகளராய் சிவபெருமானின் அருளால் அம்மையாரின் அவதாரம் நடைபெற்றது. வாராதது வந்த மாமணியாம் திருமகளாரை "புனிதவதி" என்னும் திருநாமமிட்டு, தமது கண்ணின் மணியாக அம்மையாரை வளர்த்தார் இவரது தனதத்தர் , கூடவே சிவஞானப்பாலையும் ஊட்டி வளர்த்தார். காரைக்காலில் உள்ள சௌந்தராம்பிகா சமேத கைலாச நாதரை தினமும் வணங்கி வழிபட்டு வளர்ந்தார் அம்மையார். சிவனடியாரைப் பேணுதல் இவருக்கு இயற்கையாகவே வந்திருந்தது, எப்போதும் அம்மையார் வீட்டில் சிவனடியார் திருக்கூட்டம் நிறைந்திருக்கும். உரிய காலத்தில் இறையருளால் பருவமும் எய்தினார் காரைக்காலம்மையார். இவரது தந்தையார் நாகபட்டிணத்தை சேர்ந்த பரமதத்தருக்கு திருமணம் செய்து வைத்து இருவரையும் காரைக்காலிலேயே வசிக்க வசதி செய்து கொடுத்தார்.

பரமதத்தரும் காரைக்காலில் ஒரு கடை நடத்தி வந்தார். இவ்வாறு இவர்கள் இல்வாழ்க்கை நலமாக சென்று கொண்டிருக்கும் போது அம்மையாருடைய பக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் எம்பெருமான். ஒரு நாள் ஒரு நண்பர் இரண்டு புது வகை மாங்கனிகளை தனதத்தருக்கு பரிசாக வழங்கினார், அவரும் அக்கனிகளை பணியாள் மூலம் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்.





காரைக்கால் எம் பிச்சைத் தேவர்




எம்பெருமான் ஆரம்பித்தார் தமது திருவிளையாடலை, திருமாலும் பிரம்மனும் காண முடியா மலர்ப்பாதங்கள் நோக பிக்ஷாடணராக ( பிச்சைத் தேவராக) அம்மையாரின் திருவாயில் முன் வந்து பிச்சை கேட்டார் எம்பெருமான். சிவனடியாரைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அவரை வீட்டிற்குள் அழைத்து அமுது படைத்தார். தமது கணவர் அனுப்பி வைத்திருந்த மாங்கனிகளில் ஒன்றையும் அவருக்கு அம்மையார் படைத்தார். தான் வந்த காரியம் நடந்த திருப்தியில் அம்மையாரை வாழ்த்திவிட்டு சென்றார் சிவனடியாராக வந்த எம்பெருமான். மதிய உணவிற்கு வந்த கணவருக்கு உணவிற்குப்பின் மற்றொரு மீதமிருந்த கனியை பதம் செய்து அளித்தார் அம்மையார். மாங்கனியின் சுவையில் மகிழ்ந்த அவர் மற்றொரு கனியையும் கேட்டார், திகைத்தார் அம்மையார்,மற்றொரு கனியைத்தான் சிவனடியாருக்கு படைத்து விட்டோமே என்ன செய்வது என்று தவித்த அம்மையார் அந்த முக்கண் முதல்வனிடமே சரணடைந்தார். "இறையருளால் அவர் கையில் ஒரு அற்புத மாங்கனி தோன்றியது" . மகிழ்ச்சியுடன் கணவருக்கு அதை அளித்தார் அம்மையார். இந்த கனியின் சுவை முன்னதை விட அதிகமாக இருந்ததால் என்ன நடந்தது என்று வினவினார் கணவர். இறையருளால் மாங்கனி கிடைத்த உண்மையைக் கூறினார் அம்மையார்.


நடந்ததை நம்பமுடியாத அம்மையாரின் கணவர் இன்னொரு முறை கனி பெற்றுத்தருமாறு கேட்க அம்மையாரும் அவ்வாறே பெற்றுத்தந்தார். பரமதத்தர் கரத்தில் வந்ததும் அந்த தெய்வீகக் கனி உடனே மறைந்து விட்டது. அதைக் கண்ட அவர் அம்மையார் தெய்வப் பிறவி இனி அவருடன் வாழ்வது பாவம் எனக் கருதி அவரை விட்டு விலகி யாரிடமும் ஒன்றும் கூறாமல் பாண்டி நாட்டிற்க்கு சென்று விட்டார். அம்மையாரும் கணவர் திரும்பி வருவார் என்ற நினைப்பில் இறை சிந்தனையுடன் காலத்தை கழிக்கலானார்.



பாண்டி நாடு சென்ற கணவர் காலப்போக்கில் அங்கு வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தாள். அப்பெண்ணுக்கு புனிதவதி என்று அம்மையாரின் பெயரையே இட்டு வளர்த்து வரலானார். இவ்வாறு நாட்கள் சென்று வரும் போது அம்மையாரின் உறவினர் ஒருவர் பாண்டி நாட்டில் இவரது கணவரைக் கண்டதைக் கூறினார். அம்மையாரும் பாண்டி நாடு புறப்பட்டு சென்றார். ஆனால் இவரைக் கண்ட கணவர் மனைவி மற்றும் மகளுடன் அம்மையாரை விழுந்து வணங்கினார்.
பெரிய புராணத்திலே இதைக்கூற வந்த சேக்கிழார் பெருமான் பரமதத்தரே கூறுவதாக அமைத்த பாடல்



" மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தாம் அல்லர்


நற்பெரும் தெய்வமாதல் நானறிந்த பின்பு


பெற்ற இம்மகவு தன்னை பேரிட்டேன் ஆதலாலே


பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்..




கணவனே தன்னை தெய்வமென கால்களில் வீழ்ந்து வணங்கியவுடன் ஊனுடைவனப்பை எல்லாம் உதறி ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரன் தாள் பரவி நின்றார். அந்நிலையில் அவருக்கு உலக பந்த பாசங்கள் அனைத்தும் நீங்கி உணர்வெல்லாம் சிவமேயாகும் ஒப்புயர்வற்ற ஞானம் உதித்ததுஅந்த அற்புத ஆனந்த ஞான நிலையிலேயே அம்மையார் அற்புதத்திருவந்தாதி பாடியருளினார்.


பொற்பதம் போற்றும் நற்கணங்களுள் நாமும் ஒன்று ஆனேன் என்று மகிழ்ச்சி கொண்டார். வானவர் பூமாரி பொழிந்தனர். சிவகணங்கள் ஆனந்த பெருங்கூத்து ஆடின. வானவரெல்லாம் மகிழ்ந்து பாரட்டும் போது, அம்மையார் முன்னே நின்றிருந்த மானுடமாகிய சுற்றத்தார் எல்லாம் அஞ்சி அகன்றனர். பேய் உரு ஏற்று திருக்கைலாயம் ஏகினார். கைலாய மலையிலே தன் கால்கள் படக்க்கூடாது என்று தலையாலே நடந்து செல்லும் போது

இவரை பார்த்த உமையம்மை, " இறைவா வருவது யார்" ? என்று வினவ,

எம் ஐயனும் "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை காண்" என்று கூறினார்.

மேலும் "அம்மையே வருக" என்று அழைத்து,

வேண்டும் வரம் யாது ? என வினவ,


இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்.



பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை



மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி



"அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"





என்று எப்போதும் தங்களின் பாத மலரடிகளிலேயே அமர்ந்து தங்களின் பெருமையை பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்க, ஐயனும் அவ்வாறே ஆகட்டும், "திருவாலங்காட்டிலே எம் திருவடிக்கீழ் வந்து சேர்க" என்று பணிக்க இன்றும் அம்மையார் இறைவனின் திருவடி நிழலில் அங்கு வாழுகின்றார்.


இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண


ஏழுலுகும் போற்றிசைப்ப எம்மை ஆளும்


அம்மைத் திருத் தலையாலே நடந்து போற்றும்


அம்மையப்பர் திருவாலங்காடாம் - திருஞான சம்பந்தர்



சைவ சமய மரபுப்படி இவரை நாயன்மார்களுக்குள் மூத்தவராகக் கருதுவர். இதன் காரணமாக இவர் பாடிய திருப்பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள் " (உயர்ந்தது) என அழைக்கப்பெறுகின்றன . கடவுட் பக்தியுணர்வு மட்டுமின்றி அவர் ஒப்புயற்வற்ற சிறந்த கவிதைத் திறம் வாய்ந்தவராயும் விலங்கினார் அம்மையார். இவர் அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம், திருவாலங்காட்டு திருப்பதிகம் ஆகிய பதிகங்கள் பாடியுள்ளார். இவரது பதிகங்கள் பதினொன்றாம் திருமுறைகளாக விளங்குகின்றன.



எந்த வடிவில் இறைவனை நிணைத்து தவம் செய்தாலும் அந்த வடிவில் அவன் அடியாருக்கு தோற்றமளிப்பான் என்பதை



எக்கோலத்து எவ்வுருவாய் எத்தலங்கள் செல்வார்க்கும்
அக்கோலத்து அவ்வ்ருவாம் இறைவன்

என்ற அடிகளில் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாங்கை அழகாக கூறுகின்றார்.



இறைவன் எங்கிருக்கிறான் ? என்பதற்கு



வானர்த்தான் என்பாரும் என்க மற்று உம்பர் கோன்



தானத்தான் என்பாரும் தாம் என்க - ஞானத்தால்



முன் நுஞ்சத்தால் இருண்ட மொய்யொளிச் சேர் கண்டத்தான்



என் நெஞ்சத்தான் என்பன் யான்.


என்று தம் நெஞ்சத்தையே இறைவன் வாழும் இடமாக கூறுகின்றார் அம்மையார்.


உலக வாழ்வின் உயர்ந்த முடிவு மெய்ஞான உணர்வே என்பதை இவரின் பாடல்கள் உணர்த்துகின்றன.


அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே;


அறிவாய் அறிவிப்பான் தானே; -அறிகின்ற


மெய்ப்பொருளுந் தானே; விரி சுடர் பார் ஆகாயம்


அப்பொருளுந் தானே அவன்.


என்று வேறாகியும், ஒன்றியும், உடனாகியும் எல்லா உயிர்களினுள்ளும். அட்ட மூர்த்தியாகவும் திகழ்பவன் சிவனே என்னும் சைவ சித்தாதந்த்தின் உயிர்ப்பான தத்துவ உண்மையைப் பாடுகின்றார் ஒப்புயர்வற்ற காரைக்காலம்மையார்.



இனி இவர் பொருட்டு "ஆனி பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் காரைக்கால் சௌந்தராம்பாள் உடனமர் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெறும் மாங்கனித் திருவிழாபற்றி நாளை காண்போம்.

Monday, June 2, 2008

தோடகாஷ்டகம்

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரைப் போற்றி ஸ்ரீ தோடகாச்சார்யார் அருளிய

தோடகாஷ்டகம் என்ற ஸ்ரீ சங்கர தேசிகாஷ்டகம்

இறைவன் அபார கருணா மூர்த்தி. எளி வந்த கருணையினால் தானே இந்த பூவுலகில் மானிட ஜென்மம் எடுத்து சனாதன தர்மமாம் இந்து காத்து அருளினார் ஆதி சங்கரராக அவதாரம் செய்து. ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெகத் குரு , இப்பிறவியில் ஒரு சாதகனை அவனது அஞ்ஞானத்தை அழித்து ஆண்டவன் பாதத்திற்க்கு கையைப் பிடித்து இறைவன் தாளிணைக்கு அழைத்து செல்லும் குரு அமையப் பெறாதவர்கள் கூட அவரை

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:
குருர் தேவோ மஹேஸ்வர: |
குருஸ்ஸாக்ஷத் பரப்ப்ரம்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம : ||

என்று குருவாக மானசீகமாக ஏற்றுக் கொண்டால் அவர்களையும் கடைத்தேற்றும் வள்ளல் அவர். அவர் சிறப்பை அவரது சீடர் தோடகாச்சாரியார் சமஸ்கிருதத்தில் பாடியதை அனைவரும் படித்து உய்ய வேண்டும் என்ற நோக்கில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொருளுடன் பதிவிட்டிருக்கிறார் தஞ்சை சுப்பு ரத்தினம் அவர்கள் அதை படித்து மகிழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தோடகாஷ்டகம்

தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு ஏதுவாக தோடகாஷ்டகத்தை கீழே தந்துள்ளேன். பொருள் அறிந்து கொள்ள மேலே உள்ள சுட்டியை சொடுக்கவும்.


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ
சங்கர தேசிக மே சரணம் || 1.

கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.